தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர்களில் ஒருவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் இப்போது நேரடி தமிழ்த் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
‘புஷ்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ‘ஶ்ரீமந்துடு’, ‘ஜனதா கேரஜ்’, ‘ரங்கஸ்தலம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் நவீன், ரவி இருவரும் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது.
போலாந்து நாட்டை சேர்ந்த கியுபா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிரபல இசையமைப்பாளர் டி.எஸ்.பி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இவர் அல்லு அர்ஜுன் – சுகுமார் கூட்டணியில் உருவான ‘ஆர்யா’ மற்றும் ‘ஆர்யா-2’ படத்திற்கு இசையமைத்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களிடம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று இந்த ‘புஷ்பா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது.
தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநரான சுகுமார் இப்படத்தை இயக்குகிறார். இவர் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘ஆர்யா’ மற்றும் ‘ஆர்யா-2’ என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர். நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குநர் சுகுமார் இணையும் மூன்றாவது படம் ‘புஷ்பா’.
இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் அனைத்து திரைப்பட ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக உருவாகும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.