full screen background image

“இப்போது சினிமாவில் ஜாதி பிரச்சினை அதிகமாகிவிட்டது” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு

“இப்போது சினிமாவில் ஜாதி பிரச்சினை அதிகமாகிவிட்டது” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு

அறிமுக நாயகனான கமல் கோவின்ராஜ் தயாரித்து, நடித்துள்ள படம் ‘புறநகர்’. E.L.இந்திரஜித் இசையமைத்துளார். இப்படத்தை பிரபல சண்டை இயக்குநரான ‘மின்னல்’ முருகன் எழுதி, இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

DSC_0991

இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இது நம்ம ஏரியா படம். நான் வண்ணாரப்பேட்டை. அதனால சொல்றேன். படத்தில் குத்துப் பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. இந்த ஹீரோ அர்னால்டு மாதிரி வந்திருக்கிறார். இவருடைய உயரத்திற்கு இப்படி டான்ஸ் பண்றது கஷ்டம். அதை சூப்பரா பண்ணிருந்தார். இவரிடம் குறையே இல்லை.

படத்தின் இயக்குநர் மின்னல் முருகன் அருமையாக படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் கேமரா ப்யூட்டில்புல். ஆனால் நம் தமிழ்நாடு ரசிகர்கள் மோசம். ஆயிரம் ரூபாய் கொடுத்து அடுத்தவன் படத்திற்கு ஓடுகிறார்கள்.

இதை சின்னப் படம் என்று சொல்ல முடியாது. 60 கோடிக்கு படம் எடுத்து ரசிகர்கள் தலையில் கட்டி விடுகிறார்கள். மக்கள் பணத்தை இப்படி கொள்ளையடிக்கும் நடிகன் எப்படி மக்கள் தலைவன் ஆக முடியும்..?

உன் தாய் தகப்பனை கவனிக்காமல் இப்படி இருக்கக் கூடாது. இப்போது இங்கு சினிமாவை அரசியலாக்கி விட்டார்கள். அப்படி அரசியலாக்கி அரசியல்வாதிகளிடம் மோதிக் கொண்டு பின் மன்னிப்பு கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

நடிகர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பளமாக வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால். அதில் பாதியை கஷ்டப்படும் மக்களுக்குச் செலவு செய்யுங்கள். அந்த மக்கள்தானே உங்களுக்கு பணம் தருகிறார்கள். உச்ச நடிகர்களில் இருந்து எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் ‘புறநகர்’ படத்தின் பாடல்கள் என்னை பிரம்பிக்க வைத்துவிட்டது. ரஜினி முதலில் அறிமுகமானது சின்னப் படம்தான். அஜித்தும் அப்படித்தான். எங்கள் பாக்கியராஜும் அப்படி படிப்படியாக ஏறித்தான் மேல் வந்தவர். சோழா பொன்னுரங்கம்தான் அஜித்தை ஹீரோவாக்கினார். ஆனால் இன்று அவர் கஷ்டப்படுகிறார். அஜித் இப்போது ஸ்ரீதேவி புருசன் கஷ்டப்படுகிறார் என்று படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். உங்களை முதன்முதலில் ஹீரோவாக்கியவர்களை மறக்காதீர்கள். ரஜினிகாந்த் பாண்டியன் படத்தை அப்படித்தான் பண்ணிக் கொடுத்தார்.

இந்தப் படத்தின் இயக்குநரான ‘மின்னல்’ முருகன் அற்புதமான இயக்குநர். இதில் பங்கேற்ற அனைவருமே கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..” என்றார்.

Tharun Gopi

நடிகர் தருண் கோபி பேசும்போது, “தயவு செய்து சாதியைச் சொல்லிப் படம் எடுக்காதீர்கள். இந்த ஊடகத்தை தப்பா படம் எடுக்காதீர்கள். அப்படி சாதியைச் சொல்லிக்கிட்டு எவனாவது இனிமேல் வந்தா செருப்பால அடிப்பேன்.

நாங்கள் என்ன சாதின்னு தெரியாமல்தான் வளர்ந்தோம். ஆனால் இப்போது சாதியை அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். சில பேர் அப்படி ஒரு டீம் அமைத்துத் திரிகிறார்கள். தயவுசெய்து அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.

k.bhagyaraj

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான கமல் கோவின்ராஜ்  அவர்களுக்கு வாழ்த்துகள். ரொம்ப பிரமாதமா டான்ஸ் ஆடினார். நமக்கு எப்போதுமே டான்ஸ் வராது.

சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டர்கள் படம் இயக்குவது ரொம்பவும் அரிது. ஆனால், மின்னல் முருகன் மிக அழகாக இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்கள் அடிக்கிற சீனில் கலக்கி விடுவார்கள். ஆனால், டயலாக் பேசணும் என்றால் கலங்கி விடுவார்கள். ஆனால் இந்த ஸ்டண்ட் மாஸ்டர் மின்னல் முருகன் கதை எழுதி படமே இயக்கி இருக்கிறார். அவருக்கு எனது தனிப்பட்ட பாராட்டுக்கள்.

நான் சாதியைச் சொல்லி அப்பவே படம் எடுத்துள்ளேன். டீக்கடையில்  ஒரு காலத்தில் தனி கிளாஸ் வைத்து டீ குடுத்தார்கள். எனக்கு கஷ்டமாக இருந்தது. வெள்ளாங்கோவில் என்ற ஊரில் அப்படி கொடுமை இருந்தது. ‘ஒரு கை ஓசை’ படத்தில் இந்த விசயத்தை அதே ஊரில் சென்று எடுத்தேன். அப்போது எல்லாம் இந்தளவுக்கு சாதிப் பிரச்சனை இல்லை. இப்போது சினிமா உள்பட பல இடங்களில் அதிகமாகிவிட்டது.

இந்தப் படத்தை பொறுத்தவரை சண்டைகள் ரொம்ப நல்லாருக்கு. நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்திரஜித் இசை அமைத்துள்ளார். இந்தக் காலத்தில் படம் எடுக்கிறதும் அதைச் சரியாக கொண்டு வருவதும் பெரிய விசயம். இந்த டீம் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல உதவியாக இருக்கிறார்கள்.

மக்களுக்கு கஷ்டம் இல்லாமல் பார்த்துக்கிற பொறுப்பு ஹீரோக்களுக்கும்  உண்டு. ஏன் என்றால் மக்களிடம்  இவ்வளவு பணம் டிக்கெட்டுக்கு வாங்கக் கூடாது என்று ஹீரோக்கள் சொல்ல வேண்டும். படக் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்..” என்றார்.

R.V.Udhayakumar

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “இந்தப் படத்தை தயாரித்து நடித்த தம்பி கமல் கோவின் ராஜ்,  கோ வின் ராஜ். போ ஜெயிச்சுட்டு வா ராஜா என்பது போல இருக்கிறது. இவர் முதல் படம் போல இல்லாமல் கலக்கி இருக்கிறார்.

தம்பி மின்னல் முருகன் ஸ்டண்ட் மாஸ்டர் அவர் பிரபுதேவா, லாரன்ஸ் போல வித்தியாசமான இயக்குநராக கவனிக்கப்படுவார். புது முகங்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு சரியான இசை மற்றும் ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்கள்.

இன்னும் எவ்வளவு வருசம்தாம்யா சாதியைப் பற்றி பேசுவார்கள். பெரியார் நாயுடுதான். என்னைக்காவது தன் சாதியைச் சொல்லி இருக்கிறாரா..? பள்ளிக் கூடத்தில் முதலில் மதம் கேட்கிறார்கள். அப்புறம் நேஷனால்டியை கேட்கிறார்கள். அடுத்து சாதியை கேட்கிறார்கள். இது இல்லாவிட்டாலே சாதி ஒழிந்து விடும்.

ஆனால், அதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. காரணம் இட ஒதுக்கீடு என்ற பிரச்சனை இருக்கிறது. இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொன்னால் சாதி ஒழிந்து விடும். இது என் ஆசை. மக்களை நேசிக்கும் இதயத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மக்கள் சேவைக்காகத்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஹீரோக்களுக்கு எப்படியெல்லாம் பில்டப் கொடுத்து நாங்கள் உழைத்திருப்போம். அவர்கள் எங்களுக்கு எதாவது திருப்பி தருவார்கள் என்றுதானே. ஆனால் இங்கு நன்றியை எதிர்பார்க்க முடியாது. சினிமாவிற்காக வேணும் ஏதேனும் நன்மை செய்யுங்கள். பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த எனக்கு இன்னும் படம் கிடைக்கவில்லை. இதெல்லாம் மாறணும்.

இயக்குநர்களுக்கு மரியாதை கொடுத்த கலாச்சாரம் ஒன்றுண்டு. எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும்போதுகூட தனது இயக்குநர்களை மதித்தார். எம்.ஜி.ஆர். நடிக்கும் போது சம்பாதித்தது மட்டும்தான். அரசியலுக்கு வந்த பிறகு அவர் எதுவுமே சம்பாதிக்கவில்லை. அவருக்கு வெளியில் நடிக்கத் தெரியாது.

வெளி மாநிலத்தில் செட் போட்டு படம் எடுப்பதைவிட நம்மூரில் செட் போட்டு எடுக்கலாமே.. நமது ஜுனியர் ஆர்ட்டிஸ்களுக்கு வேலை கிடைக்குமே. ஆனால் அதைச் செய்ய மாட்டேன்கிறார்கள். இந்தப் ‘புறநகர்’ படம் பெரிய நடிகர் நடித்த படம் போலவே இருக்கிறது. இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும்…” என்றார்.

Our Score