நாளை வெளியாகவிருந்த ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் வசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக ஒரு வாரம் ஒத்திப் போடப்பட்டு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி ரீலிஸ் ஆகும் என்று அதன் தயாரிப்பாளர் கதிரேசன் தெரிவித்திருந்தார்.
அந்தச் செய்தியை இந்தப் பதிவில் தெரிவித்திருந்தோம்.
திரைப்படம் திரைக்கு வருவது தள்ளிப் போடப்பட்டுள்ள செய்தியை படத்தின் கதாநாயகன் சித்தார்த்துக்கும், படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கும் தயாரிப்பாளர் கதிரேசன் தெரிவிக்கவில்லை என்று கூறி நடிகர் சித்தார்த் டிவிட்டரில் குமுறியிருந்தார்.
அந்தச் செய்தியை இந்தப் பதிவில் தெரிவித்திருந்தோம்..
இப்போது நடிகர் சித்தார்த்தின் டிவிட்டர் செய்திகளுக்கு பதில் அளிக்கும்விதமாக தயாரிப்பாளர் கதிரேசனும், தயாரிப்பாளர் சங்கத்தின் டி.சிவா பிரிவு நிர்வாகிகளும் ஒரே நாளில் வெவ்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள்.
முதலில் தயாரிப்பாளர் கதிரேசனின் அறிக்கை :
“நான் எனது ‘குரூப் கம்பெனி’ சார்பாக தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’. ‘நையாண்டி’ ஆகிய படங்களை தயாரித்துள்ளேன். சுமார் 50 படங்களை விநியோகம் செய்திருக்கிறேன், 200 படங்களின் ஆடியோ கேசட்டுகளை வெளியிட்டுள்ளேன். இது மட்டுமல்லாமல் 100 படங்களுக்கும் மேல் வெளிநாடுகளுக்கும் படங்களை விநியோகம் செய்துள்ளேன். கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் நேர்மையான முறையில் படங்களை வெளியிட்டு எங்களுக்கென்று இந்தத் துறையில் நல்ல பெயரை பெற்றுள்ளேன்.
இப்போது சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தை அதிக முதலீட்டில் தயாரித்துள்ளேன். இந்தப் படம் வெளியிடப் போகும் ஒவ்வொரு காலகட்டத்திலும் விஜய், அஜித் நடித்த படங்கள், ‘கோச்சடையான்’ திரைப்படம் மற்றும் பல்வேறு திரைப்படங்கள் வாரந்தோறும் வந்து கொண்டிருந்தமையால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துக் கொண்டேவந்தேன். எந்த ஒரு தயாரிப்பாளரும் தான் எடுத்த படத்தை பைனான்ஸ் பிரச்சினை கருதி உடனே வெளியிடத்தான் விரும்புவாரே தவிர, தள்ளிப்போட நினைக்கமாட்டார்.
தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம் தற்போது தமிழகமெங்கும் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் ‘உங்களுடைய ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தை ஒரு வாரம் தள்ளி கொண்டு வாருங்கள். படம் பெரிய வெற்றியைப் பெறும்’ என்று விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் என்னை கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தேன்.
‘ஜிகிர்தண்டா’ திரைப்படம் எனது முதலீடு. அது எனது குழந்தை. எனது குழந்தையை நானே கொல்ல விரும்புவேனா? இது எப்படி சித்தார்த்துக்கு புரியாமல் போனது. ‘ஜிகர்தண்டா’ எல்லோரும் ரகிக்கக் கூடிய தரமான படம். இதை எந்த நேரத்தில் வெளியிட்டால் அது சரியானபடி மக்களிடம் போய் சேரும் என்பது முதலீடு போட்ட எனக்கு மட்டும்தான் தெரியும்..” என்று தயாரிப்பாளர் கதிரேசன் கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் டி.சிவா பிரிவு நிர்வாகிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கை :
“ஒரு திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்குள் தயாரிப்பாளர்கள் படாதபாடுபடுகிறார்கள், ஒரு படத் தேதியை வெளியிடுவதற்குள் ஆயிரம் பிரச்சினைகள் வருகின்றன. குறிப்பாக வாரம் முன்று, நான்கு திரைப்படங்கள் வெளிவரும்போது வியாபார ரீதியாக பல பிரச்சினைகள் தயாரிப்பாளருக்கு வரும்.
சினிமாவிற்குள் இருக்கும் வியாபார பிரச்சினைகள் பொதுவாக நடிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு படம் வெளியாகும்போது. தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் இவர்களின் கருத்தை தெரிந்துதான் பட வெளியீட்டு தேதியை அறிவிக்க முடியும். இது தெரியாமல் மேலோட்டமாக படம் தள்ளிப் போனதற்கு நடிகர் சித்தார்த், தயாரிப்பாளரை குற்றம் சாட்டியிருப்பது கண்டனத்துக்குரியதாகும்.
படத்தில் நடித்ததற்குரிய சம்பளத்தை வாங்கிய நடிகர் சித்தார்த், தயாரிப்பாளரின் பட வெளியீட்டுத் தேதியில் தலையிட எந்தவிதமான உரிமையும் இல்லை.
நடிகர் சித்தார்த்தின் இந்த செயல்பாட்டிற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக தயாரிப்பாளர் சத்யஜோதி டி,ஜி,தியாகராஜன். டி,சிவா. ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.தாணு, கே,ராஜன், ஜாகுவார்தங்கம், எஸ்.எஸ்.துரைராஜ், சித்ரா லட்சுமணன், ஹெச்.முரளி. சௌந்தரபாண்டியன் மற்றும் ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் உட்பட அனைத்து தயாரிப்பாளர்களும் கண்டனம் தெரிவித்தள்ளனர்..”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சித்தார்த் கேட்டுள்ளது அந்தப் படத்தின் கதாநாயகன் என்ற முறையில் தன்னிடமும், படத்தின் இயக்குநர் என்ற முறையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடமும் தயாரிப்பாளர் கலந்தாலோசித்தவிட்டு இதனைச் செய்திருக்கலாமே என்பதைத்தான்..!
மேலும், ஒத்திப் போடுவது என்ற முடிவை எடுத்துவிட்ட பின்பாவது தன்னிடமும், இயக்குநரிடமும் ஒரு வார்த்தை மரியாதைக்காகவாவது சொல்லியிருக்கலாமே என்கிறார் படத்தின் ஹீரோ.
இதுவும் சரிதானே..? “சம்பளத்தை வாங்கிட்டீல்ல போய்க்கி்டடேயிரு.. இனிமே உனக்கும், படத்துக்கும் சம்பந்தமில்லை…” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்வது ஒரே குடும்பம் என்ற சினிமா துறையின் அடையாளத்திற்கு வழி வகுக்காது..!
அவர்கள் இருவரும் எதிர்பார்த்தது கொஞ்சம் மரியாதையை.. “இவ்ளோதான் உங்களுக்கு மரியாதை…” என்று தயாரிப்பாளரும், தயாரி்பபாளர் சங்கமும் சொல்லிருச்சு..!
இனிமேல் அனைத்து நடிகர்களும் படத்தில் நடித்து முடித்த கையோடு, கையது வாயது பொத்தி ஓடிப் போக வேண்டியதுதான்..!