இனி வரும் காலங்களில் திரைப்பட அமைப்புகளின் பஞ்சாயத்துக்களைவிட கோர்ட் நடவடிக்கைகளைத் தாண்டித்தான் ஒவ்வொரு சினிமாவும் திரைக்கு வர வேண்டியிருக்கும் போலிருக்கு..!
‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று ஒரு கதாசிரியர் கோர்ட்டில் வழக்கு போட்டிருப்பதை போல இப்போது நடிகர் கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்’ படத்திற்கும் அதே நிலைமை வந்துள்ளது.
‘மெட்ராஸ்’ படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இதில் கார்த்தி, கேத்தரின் தெரசா நடித்துள்ளனர். ‘அட்டக்கத்தி’ படத்தை இயக்கிய தினேஷ் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
சென்னை, எழும்பூரை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் எம்.பாலசுப்பிரமணியம், ‘மெட்ராஸ்’ படம் ரிலீஸ் செய்வதை தடை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
பாலசுப்ரமணியம் தன்னுடைய மனுவில், “என்னுடைய ‘4 பிரதர்ஸ் ஸ்கிரீன்’ சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘கருப்பர் நகரம்’ என்ற பெயரில் சினிமா தயாரித்து வருகிறேன்.
இந்த படத்தை நடராஜன் கோபி என்பவர் திரைக்கதை எழுதி இயக்கினார். இதில், அகில், அருந்ததி உள்பட பலர் நடித்துள்ளனர். இதுவரை 3 கோடி ரூபாய்வரை செலவு செய்து 50 சதவீத படப்பிடிப்புகளை முடித்துள்ளேன்.
வடசென்னையில் குடிசைப் பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞன், சிறந்த கால்பந்து விளையாட்டு வீரனாக திகழ்கிறான். உலக கால்பந்து போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற கனவு கொண்டுள்ள அவன், எதிர்பாராதவிதமாக ஒரு கொலை வழக்கில் சிக்கி ரவுடியாக மாறுவதுபோல என் படத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘மெட்ராஸ்’ என்ற பெயரில் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் விளம்பரம் டி.வி. சேனல்கள், மற்றும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.
எங்கள் பட காட்சிகளின் புகைப்படங்களை போலவே, ‘மெட்ராஸ்’ படத்தின் காட்சிகளை கொண்ட புகைப்படங்களும் விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும், எங்கள் படத்தின் கதைதான் அப்படியே ‘மெட்ராஸ்’ படமாக எடுக்கப்பட்டுள்ளது என்பதும் எங்களுக்கு தெரிய வந்துள்ளது.
கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவர், கொலை வழக்கில் சிக்கி ரவுடியாவது போன்ற கதைதான் இந்த ‘மெட்ராஸ்’ படத்தின் கதை கரு. இது நான் தயாரிக்கும் ‘கருப்பர் நகரம்’ படத்தின் கதைக் கருவும்கூட..!
இது குறித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலிடம் கடந்த ஜூலை 17–ந் தேதி புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில், ‘மெட்ராஸ்’ படம் வருகிற 26–ந் தேதி வெளியாக உள்ளது. எனவே, இந்த படத்தை வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும்..” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.தமிழ்வாணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் டி.கே.எஸ்.காந்தி ஆஜராகி, “மனுதாரர் படத்தையும், எதிர் மனுதாரர் படத்தையும் பார்ப்பதற்கு வக்கீல் ஒருவரை கமிஷனராக நியமித்தால், அதை ஏற்கவும் தயாராக உள்ளோம்…” என்று வாதிட்டார்.
இதையடுத்து, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் உரிமையாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 22–ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ‘கருப்பர் நகரம்’ படத்தை இயக்கி வரும் நடராஜன் கோபி என்பவரிடம்தான் அட்டக்கத்தி தினேஷ் உதவி இயக்குநராக பணியாற்றினார். அப்போது அவர்கள் நடத்திய பல்வேறு குரூப் டிஸ்கஷனில்தான் இந்த ‘கருப்பர் நகரம்’ படம் உருவானதாம்.
பாதி படம் தயாரித்தும் அதற்கு மேல் பைனான்ஸ் இல்லாததால் படம் அப்படியே நின்று போனது. இந்த நிலைமையில் அ்ட்டக்கத்திக்கு பின்பு பெரிய நடிகர்களின் கால்ஷீட்கிடைக்காததால் காத்திருந்த தினேஷுக்கு கார்த்தியின் கால்ஷீட் கிடைத்ததும் இந்த கருப்பர் நகரம் கதையை அவருக்குச் சொல்லியிருக்கிறார் தினேஷ்.
‘கருப்பர் நகரம்’ இனி நகராது என்று நினைத்துதான், அந்தக் கதையை வைத்தே இந்த ‘மெட்ராஸ்’ படத்தை எடுக்க துணிந்திருக்கிறார் தினேஷ். அதுவே இப்போது சிக்கலை உருவாக்கிவி்ட்டது என்கிறது கோடம்பாக்கம்..!









