full screen background image

“தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிரந்தர வருவாய் உருவாக்கப்படும்…” – தயாரிப்பாளர் ராமசாமி முரளி பேட்டி..!

“தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிரந்தர வருவாய் உருவாக்கப்படும்…” – தயாரிப்பாளர் ராமசாமி முரளி பேட்டி..!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் 22-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

இத்தேர்தலில், தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ராமசாமி முரளி தலைமையில் ஒரு அணியும், டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பனும் போட்டியிடுகிறார்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத அலைகள்’ அணி, ‘முன்னேற்ற அணி’ என்று இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன.

தற்போது தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ராமசாமி முரளி இந்தத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி விரிவாக ஒரு பேட்டியை அளித்துள்ளார்.

1. என்னென்ன வாக்குறுதிகளை முன் வைத்து தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.?

தமிழ்த் திரையுலகில் இப்போதைய முக்கிய சிக்கலாக இருப்பது VPF கட்டணம்தான். அதைக் கட்ட மாட்டோம் என்றும் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கான முயற்சியை எங்கள் அணி வெற்றி பெற்றால் செய்வோம்.

நவீன தொழில் நுட்பங்கள் காரணமாக தமிழ்த் திரையுலகம் சந்திக்கும் சிக்கல்களை சரி செய்து அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கச் செய்வதே எங்களது முக்கிய பணியாக இருக்கும்.

ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த விரும்பும் தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை, தொகையை அதிகரித்து மீண்டும் செயல்படுத்துவோம்.

சிறிய படங்களையும் OTT-யில் வெளியிட முயற்சி எடுப்பது, சிறு படங்களுக்கும் போதிய திரையரங்குகள் ஒதுக்கீடு உறுதி செய்தல் உட்பட பல வாக்குறுதிகளை முன் வைத்து இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

2. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதி இருப்பு எதுவும் இல்லை என்கிற நிலையில் ஓய்வூதியம், அன்பு தொகையெல்லாம் எப்படி சாத்தியம்..?

எல்லோரும் இதைத்தான் கேட்கின்றனர். சாத்தியம் இல்லை என்பதை சாத்தியம் ஆக்கி காட்டும் செயல் திறன் எங்கள் அணிக்கு உள்ளது. தேர்தல் வெற்றிக்கு பின் அனைத்து தரப்பினருடனும் இணைந்து நிதி ஆதாரத்தை உயர்த்துவோம்.

3. தொழில் நுட்பச் சிக்கல் என்று OTT-யை குறிப்பிடுகிறீர்கள். அதேசமயம் சிறிய படங்களையும் OTT-யில் வெளியிட முயல்வோம் என்று சொல்வது முரண்பாடாக இருக்கிறதே..?

திரையரங்குகள் ஒதுக்கீடு போல OTT-யிலும் பெரிய படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதனால் சிறிய படங்களையும் OTT-யில் வெளியிட முயல்வோம் என்றுதான் சொல்கிறோம்.

4. சிறிய படங்களுக்குப் போதிய திரையரங்குகள் என்னும் வாக்குறுதி பல தேர்தல்களில் சொல்லப்பட்டு கொண்டே இருக்கிறதே..? செயலுக்கு வந்தபாடில்லையே..?

விஷால் தேர்தலில் வென்றபோதும் இப்படிச்  சொன்னார். ஆனால் அவரால் இரண்டு சங்கங்களின் பொறுப்புகளை வைத்துக் கொண்டு இரண்டிலும் முழுமையாக செயல்பட முடியவில்லை.

5. சிறு படங்களுக்கு போதிய திரையரங்குகள் என்பது விஷாலுக்கு முன்பும் தேர்தல்களில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும் பிரச்சினையாக இருக்கிறதே?

ஆமாம். ஒவ்வொரு முறை தலைவராக வருகிறவர்களும் அதற்காக உரிய முயற்சிகள் எடுக்காமல் விட்டுவிட்டார்கள். சிறு படங்களை மட்டுமே தயாரித்து வெளியிட்டு வந்த என் தந்தை இராம.நாராயணனுக்கும், அவரிடம் சினிமா தொழில் கற்ற எனக்கும் அதன் வலி முழுமையாகத் தெரியும். அதனால் இந்த முறைஉறுதியான முடிவு எடுத்து செயல்படுத்துவோம்.

6. எதிரணியில் போட்டியிடும் டி.ராஜேந்தர் மற்றும் மன்னன் ஆகியோர் விநியோகஸ்தர் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்களே..?

டி.ராஜேந்தர் போட்டியிடுவது ஏற்கத்தக்கது இல்லை. ஏற்கெனவே விஷால் தலைவரானபோது அவரே இந்த காரணத்தைச் சொல்லி விஷாலை விமர்சனம் செய்தார். இப்போது அவரே அப்படிச் செய்கிறார்.

அவருடைய மகன் சிம்புவால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டி.ராஜேந்தர் பொறுப்புக்கு வந்தால் என்ன செய்வார்..? அது மட்டுமின்றி விநியோகஸ்தர் சங்கப் பொறுப்பிலிருப்பவர்கள் வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கக் கூடாது என்கிற சட்டத்தைத் திருத்தி அதற்கு பொதுக் குழுவில் ஒப்புதல் பெறாமலேயே இங்கே போட்டியிடுகிறார்கள். இது அவருக்குப் தேர்தலில் பின்னடைவையே ஏற்படுத்தும். இப்படிப் பல சிக்கல்களை வைத்துக் கொண்டு அவர் போட்டியிடுவது வருந்தத்தக்கது.

7. தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ஆட்சியிலிருப்பவர்களைச் சந்தித்து அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது சரியா..?

எங்கள் சங்கத்தைப் பொறுத்தவரை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்களோடு இணக்கமாக நடந்து கொள்வது எப்போதும் இருக்கும் வழக்கம்தான். எங்கள் அணியில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகிறார்கள். அரசியல் என்பது வெளியில்தான் இங்கே எல்லோரும் தயாரிப்பாளர்கள்தான்.

 8. நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் புதிதாக அமைந்திருக்கிறதே..?

அப்படி ஒரு சங்கம் அமைவதற்குக் காரணம் இருந்தது. அரசாங்கம் சங்கத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒரு நிர்வாகக் கமிட்டி அமைத்தது. அதனால் பல சிக்கல்களில் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனாலேயே அந்தச் சங்கம் உருவானது. நாங்கள் வென்ற பிறகு அவர்களுடன் பேசி தாய்ச் சங்கத்தில் இணைய வைத்து ஒன்றுபட்டு செயல்படுவோம்.

9. இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே…?

கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவரவர் சக்திக்குட்பட்டு உதவி செய்தோம். ஆனால், இப்போது எங்கள் அணி சார்பாக வாக்குக்காக யாருக்கும் பணமோ, பொருளோ கொடுக்கப்படவில்லை.

10. உங்களிடம் குறிப்பிட்ட அளவு ஓட்டுகள் இருக்கின்றன. நீங்கள் சொல்லும் வேட்பாளர்களுக்கு அவர்கள் ஓட்டுப் போடுவார்கள் என்று சொல்லப்படுவது பற்றி..?

மறைந்த என் தந்தை இராம.நாராயணன் எளிமையானவர். எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகியவர். அவர் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக பொறுப்பில் இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்டது ஓய்வூதியம், அன்புத் தொகை என்பது. சிறு பட தயாரிப்பாளர்களின் வளர்ச்சிக்காக அவர் சிறப்பு கவனம் செலுத்தினார்.

யாருக்கு சிக்கல் என்றாலும் அவராலான உதவிகளை செய்திருக்கிறார். அதனால் எல்லோரும் அவர் மீது பாசமாக இருந்தார்கள், அது இப்போது எனக்கு ஆதரவாக மாறியிருக்கிறது. இதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள்.

11. பிலிம் சேம்பர் வளாகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பயன்பாட்டுக்காக 10,000 சதுர அடி இடத்தை உங்கள் தந்தை தலைவராக இருந்தபோது வழங்குவதாக சேம்பர் நிர்வாகத்தால் உறுதியளிக்கப்பட்டது. அதன் பின்பு அது பற்றிப் பேச்சே இ்ல்லையே..?

பிலிம் சேம்பர் கட்டிடம் கட்டுவதற்கு எனது தந்தை இராமநாராயணன் சங்கத்தின் தலைவராக இருந்தபோது நிர்வாக ரீதியாக பல்வேறு உதவிகளை செய்துள்ளார். கட்டிட பணிகள் தற்போதுதான் நிறைவடைந்துள்ளது. எங்களது அணி வெற்றி பெற்று பதவி ஏற்றவுடன் முதன்மை பணியாக பிலிம் சேம்பர் நிர்வாகத்துடன் பேசி சங்க பயன்பாட்டுக்காக 10,000 சதுர அடி இடத்தை பெறுவோம்.

சங்க அலுவலக பயன்பாட்டுக்கு போக எஞ்சியுள்ள இடத்தை சினிமா துறை சார்ந்து வணிக பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும். அதன் மூலம் சங்கத்துக்கு மாதந்தோறும் நிரந்தர வருவாய் கிடைக்க திட்டமிட்டு செயல்படுத்தப்படும்…” என்றார்.

Our Score