full screen background image

“கமல்ஹாசனால் அவரது அப்பாவி ரசிகர்கள் ஜெயிலுக்குப் போனார்கள்” – தயாரிப்பாளர் கே.ராஜனின் குற்றச்சாட்டு

“கமல்ஹாசனால் அவரது அப்பாவி ரசிகர்கள் ஜெயிலுக்குப் போனார்கள்” – தயாரிப்பாளர் கே.ராஜனின் குற்றச்சாட்டு

நடிகர் கமல்ஹாசன் தன்னைத் திட்டுவதற்காக அவரது ரசிகர்களை அனுப்பியதாக தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் ‘அட்ரஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசும்போது இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசும்போது. “இப்படத்தின் பாடல் நன்றாக இருக்கிறது. டிரெய்லர் நன்றாக இருக்கிறது என்று பார்த்தவர்கள் சொன்னார்கள். என் கருத்து என்னவென்றால் என் தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும். பின்னர்தான் டெக்னிஷுயன், நடிகர்கள் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது இங்கே எல்லாமே தலைகீழாக இருக்கிறது. தமிழ்மணி எவ்வளவு பெரிய தயாரிப்பாளர். ஆனால் அவர் படம் செய்து பல காலம் ஆகிவிட்டது.

சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். தமிழ் சினிமா தற்போது நன்றாக இருக்கிறது.  கொரோனாவிற்கு பிறகு திரையரங்குகள் நன்றாக இருக்கின்றன. மக்கள் கூட்டம், கூட்டமாக வருகிறார்கள். தயாரிப்பாளர்கள்தான் சரியில்லை. ஒருவரையொருவர் பின்னால் இழுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

தமிழ் சினிமா பற்றியும், நடிகர்கள் பற்றியும் நான் பேசவில்லை. பேசினால் பிரச்சனை வருகிறது. ரசிகனை விட்டு மிரட்டுகிறார்கள். ரசிகனைவிட்டு மிரட்டினால் அவ்வளவுதான்.. காணாமல் போய்விடுவேன் என்று நினைத்தார்கள்.

கமல் ரசிகர்கள் என்னை மிரட்டியபோது அவர்களை ஜெயிலுக்கு அனுப்பினேன். ஆனால், கடைசியில் அவர்களை நான்தான் பெயிலில் எடுத்தேன். அவர்கள் அனைவரும் ஏழைகள். அவர்களை தூண்டிவிட்டவர் வரவில்லை. கமல் என்னை திட்ட ஆள் ரெடி செய்து அனுப்பிவிட்டு அவர்களை கண்டு கொள்ளவில்லை. அவர்கள் அவர்களது, ‘உலக நாயகன்’ கமல்ஹாசனால் ஜெயிலுக்குள் போனார்கள். அந்த கேஸ் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தம்பி இறந்து விட்டார். அவரின் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அதுதான் அவர் சேர்த்த சொத்து. அவர் அப்பா  ஆதரவற்றவர்களுக்கு ஒரு பள்ளி நடத்தியிருக்கிறார். புனித் ராஜ்குமார் அதைத் தொடர்ந்து நடத்தியுள்ளார்.

அது மட்டுமல்ல, அந்த தம்பி தான் இல்லையென்றால் அதைத் தொடர்ந்து யார் நடத்துவார்கள் என்று நினைத்து 8 கோடி ரூபாய் பணத்தை வங்கியில் போட்டுவைத்து, தான் இல்லாவிட்டாலும் இந்தப் பள்ளி தொடர்ந்து நடக்க வேண்டும் என ஏற்பாடு செய்துள்ளார். அதுதான் புண்ணியம். இங்கு யார் இதுபோல் செய்கிறார்கள்.? தயவு செய்து தர்மம் செய்யுங்கள்..” என்று கேட்டுக் கொண்டார்.

 
Our Score