வனமாலி கிரியேஷன்ஸ் பி.லிட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் மகேந்தர், தேவேஷ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பவர் ப்ளே’.
இந்தப் படத்தில் கதாநாயகனாக ராஜ் தருண் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் பரிச்சயமான பூர்ணா முக்கியமான வில்லி பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். பூர்ணாவுக்கு நடிப்பில் இன்னொரு முகத்தைக் காட்டும் வாய்ப்பு.
கோட்டா சீனிவாசராவ் வில்லத்தனத்தில் பூர்ணாவுடன் போட்டி போட்டு நடித்துள்ளனர். மற்றும் ஹேமா லிங்கலே, பிரின்ஸ் ,அஜய், சத்யம் ராஜேஷ், பூஜா ராமச்சந்திரன், ராஜா ரவீந்திரா, கேதார் சங்கர், ரவிவர்மா, தன்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆண்ட்ரூ, இசை – சுரேஷ் பொப்பிலி, படத் தொகுப்பு – பிரவின் புடி, சண்டை இயக்கம் – ரியல் சதீஷ்.
இப்படத்தை இயக்குநர் விஜயகுமார் கொண்டா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கில் சில படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.
இந்த உலகை ஆட்டி வைக்கும் ஒரு மாபெரும் சக்தி பணம்தான். பணத்தை ‘வைட்டமின்’ என்றும் ‘பவர்’ என்றும் ‘எனர்ஜி’ என்றும் கூறுவதுண்டு. அதேபோல் அதிகாரத்தையும் ‘பவர்’ என்று கூறுவார்கள். பணம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையில் அதிகாரம் எப்படி விளையாடுகிறது என்பதைக் கூறுகிற கதை இது.
அதிகாரமும், பணமும் இணைந்து விளையாடினால் அந்தப் பகடையாட்டம் எப்படி இருக்கும்..? அதுதான் இந்த ‘பவர் ப்ளே’ படத்தின் கதை.
நாயகன் ஒருநாள் ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணம் எடுக்கிறான். வெளிவந்த ரூபாய் நோட்டுகளைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி. அவனிடம் வந்தவை போலியான ரூபாய் நோட்டுகளாக இருந்தன. இதன் பின்னே ஏதோ சதி இருப்பதாக உணர்கிறான். இதற்குக் காரணமாக யாரோ அதிகாரம் படைத்தவர்கள்தான் இருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரிகிறது. ஆனால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான்.
ஏடிஎம் மையங்களில் ரூபாய் நோட்டுகளை நிரப்புவதற்காகப் பல ஏஜென்சிகள் உள்ளன. அவர்கள் செய்த சதியால்தான் இவ்வாறு போலி ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டது என்று தெரிகிறது அதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கப் போராடுகிறான் என்பதுதான் இந்த ‘பவர் ப்ளே’ திரைப்படம்.
வீண் பழியில் இருந்து மீள்வதற்காக அவன் நடத்தும் போராட்டங்களைப் பரபரப்பான காட்சிகளோடு படமாக்கியிருக்கிறார்கள்.
‘பவர் ப்ளே’ இந்த தலைப்பு ஏன் என்றால் எவ்வளவு பவர் வாய்ந்த அதிகாரம் மிக்கவர்கள் தங்கள் பவரை வைத்து எப்படியான செயல்களையெல்லாம் செய்கின்றனர் என்பதைக் காட்டுவதால்தான் இந்த தலைப்பு என்கின்றனர் படக் குழுவினர்.
ஏற்கெனவே அமேசானில் தெலுங்கிலும், இந்தியிலும் வெளிவந்த இப்படம் இப்போது, தமிழில் டப்பிங் செய்யப்பட்டு அமேசானில் வெளியாகியுள்ளது.