விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, சுதீப் நடிக்க சிம்புதேவன் இயக்கும படம் ‘புலி’. இந்த திரைப்படத்தின் முதல் புகைப்படத்தை விஜய்யின் பிறந்த தினத்தில் வெளியிட ‘புலி’ படக் குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அவரது பிறந்த தினத்திற்கு 12 மணி நேரத்திற்கு முன்பே ‘புலி’ படத்தின் புகைப்படங்களை இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டுவிட்டனர். இதனால் ‘புலி’ படக் குழுவினர் பலத்த அதிர்ச்சிக்குள்ளானார்கள். அந்த அதிர்ச்சி மறைவதற்குள் மீண்டும் ‘புலி’ படத்தின் புகைப்படங்களை திருடி இணைய தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான தயாரிப்பாளர்கள் சிபு தமீம்ஸ், பி.டி.செல்வகுமார் இருவரும், ‘புலி’ படத்தின் புகைப்படங்களை இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
மேற்கண்ட புகாரைப் பெற்றுக் கொண்ட கமிஷனர், குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் க்ரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி சைபர் கிரைம் பிரிவின் துணை கமிஷனர் ஜெயகுமார் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. ‘புலி’ படத்தின் புகைப்படங்களை வெளியிட்டவர்ளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
யார் மீது சந்தேகம் என்பதையும் குறிப்பிட்டே சொல்லியிருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். ‘புலி’ படம் துவங்கிய நேரத்தில் ஸ்டில்களை எடுக்கும் பணியை 24 AM நிறுவனத்தைச் சேர்ந்து டியூனி என்பவரிடம் ஒப்படைத்திருந்தார்களாம். முதல் ஷெட்யூல்வரைக்கும் அவர் பணியாற்ற அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் அவரிடம் இருந்திருக்கிறlg.
பின்பு இவருடைய பணியில் திருப்தியடையாத இயக்குநர் ஆளை மாற்றச் சொல்லிவிட்டதால் அவரிடமிருந்த அனைத்து ஸ்டில்களையும் வாங்கிவிட்டார்களாம். ஆனால், இப்போது ஒவ்வொரு ஸ்டில்லாக வெளியாவதெல்லாம் முதல் கட்ட படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டதாக இருப்பதால் இது அந்த பழைய நிறுவனத்தின் வேலையாக இருக்கலாம் என்று சந்தேகம் கொண்டு அவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளதாம். போலீஸாரும் அவர்களிடத்தில் விசாரித்து வருகிறார்களாம்.
ஏற்கனவே ‘புலி’ படத்தின் டீஸரை 4 பிரேம் ரிக்கார்டிங் தியேட்டரில் இருந்து திருடி வெளியிட்ட மிதுன் என்ற வாலிபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு இன்னமும் ஜாமீன் கிடைக்காமல் புழல் ஜெயிலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.