சில நாட்களுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
அந்தச் சமயத்தில் ரஜினியின் ரசிகர்கள் சிலர் ஆர்வ மிகுதியில் ஒரு ஆட்டினை பலி கொடுத்து அதன் ரத்தத்தை ரஜினி பட போஸ்டரில் தெளித்து கொண்டாடினார்கள். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
இது குறித்து இப்போதுவரையிலும் ரஜினிகாந்தோ அவரது ரசிகர் மன்றத்தின் தலைமை நிர்வாகிகளோ கருத்து ஏதும் சொல்லவில்லை.
தற்போது இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கறிஞர் தமிழ் வேந்தன் என்பவர் சென்னை, டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.
அதில் “இந்த மனு யாதொரு உள்நோக்கமும், சுயநலமும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் பேனர் முன்பு நடுரோட்டில் கொடூரமாக ஒரு ஆட்டை பட்டா கத்திக் கொண்டு வெட்டி பேனருக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.
பொது இடத்தில், சாலையில், குழந்தைகள், பெண்கள் நடக்கும் இடத்தில் இது போன்ற காட்டுமிராண்டித்தனமாக அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி சமூக ஆர்வலர்களால் பொதுமக்களால் விமர்சனத்திற்கு உள்ளாகிறது,
இன்றைய தேதிவரை இச்செயலை எதிர்த்து ஒரு கண்டனம், எதிர்ப்பு அறிக்கையோ, விளக்கமோ ரஜினிகாந்த் அவர்கள் கொடுக்கவில்லை. இச்செயலை ஆதரிப்பது போலவே உள்ளார். இது பொது மக்களுக்கு அச்சத்தையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாக்கும்.
மேலும் மிருக வதையும் அடங்கும். கோயில்களில் ஆடு பலி இடுவதே ஓரமாக ஒதுக்குப்புறமாக செய்யும் நாடு, மேலும் கசாப்பு கடையில்கூட மறைவாகதான் ஆட்டை அறுப்பார்கள்.
ஆனால் இப்படி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கூடியிருக்கும் இடத்தில் இப்படி ஒரு கொடூரமான செயலை செய்த மேற்படி நபர்களை கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறும், இச்செயலை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.