Positive Print Studios சார்பில் L சிந்தன் மற்றும் ராஜேஷ்குமார் தயாரிப்பில், ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும், ரொமாண்டிக் காமெடி திரைப்படம் “பிளான் பண்ணி பண்ணனும்”.
வரும் செப்டம்பர் 24 முதல் உலகமெங்கும் இத்திரைப்படம் வெளியாவதை ஒட்டி, படக் குழுவினர் நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்
இந்நிகழ்வில் நாயகன் நடிகர் ரியோ ராஜ் பேசும்போது, “நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் இப்படத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றினோம். எனது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது, எனது கனவுகளில் ஒன்று. அது இப்போது எனது இரண்டாவது படத்திலேயே நனவாகியிருக்கிறது.
கோவிட் தடங்கல்கள் எத்தனை வந்தாலும் அந்த இன்னல்களை தாண்டி, இத்திரைப்படம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இந்த பொதுமுடக்கம் நம் மீது பெரும் அழுத்தங்களையும், சோகங்களையும் தந்தது. அந்த கடினமான காலகட்டத்தை தாண்டி, இப்போது அனைவரும் திரையரங்கிற்கு வந்து திரைபடங்களை பார்த்து மகிழலாம்…” என்றார்.
நடிகை ரம்யா நம்பீசன் பேசும்போது, “மீண்டும் திரையரங்குகள் செயல்பட ஆரம்பித்துள்ளது, எங்கள் குழுவில் அனைவருக்கும் மிகப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. திரையுலகில் இது அனைவருக்கும் கடினமான காலமாக இருந்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் சினிமாவுக்கு மிகப் பெரும் ஆதரவாக இருந்தன. ஆனாலும் அனைவரும் திரையரங்குகளில் படங்களை பார்க்க வேண்டும். அப்பொதுதான் சினிமா வளரும். இத்திரைப்படத்தை நீங்கள் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து, ஆதரவை தர வேண்டும் நன்றி…” என்றார்.
நடிகை பூர்ணிமா ரவி பேசும்போது, “இது எனது முதல் திரைப்படம். படப்பிடிப்பு அனுபவங்கள் முழுதுமே எனக்கு புதிதாக இருந்தது. என்னை மிகவும் ஆதரவாக இருந்து கவனித்துக் கொண்ட படக் குழுவினர் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்.
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் எனது கதாப்பாத்திரம் குறித்து கூறும்போது.., இது மற்ற படங்கள் போல் அல்லாமல் வித்தியாசமான தங்கை பாத்திரமாக இருக்கும் என உறுதியளித்தார்…” என்றார்.
நடிகர் பால சரவணன் பேசும்போது, “நானும் ரியோ ராஜும் சகோதரர்கள் போல்தான். எங்கள் நட்பு, விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’ தொட்டே, தொடர்ந்து வருகிறது. இயக்குநர் பத்ரியிடம் என்னை இக்கதாப்பாத்திரத்திற்கு பரிந்துரைத்தற்கு ரியோ ராஜுக்கு நன்றி. குடும்பங்கள் இணைந்து, கொண்டாடி பார்க்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும் 2021 செப்டம்பர் 24 அனைவரும் இப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் நன்றி.” என்றார்.
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் பேசும்போது, “திரையுலகை சேர்ந்தவர்களும், ஊடக நண்பர்களும் இந்த பொது முடக்க காலத்தில் மிகப் பெரிய துன்பங்களை கடந்து வந்தார்கள்.
அவையனைத்தையும் கடந்து இப்போது திரையரங்குகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளதும், எங்கள் படம் வெளியாவதும், அனைவருக்குமே மிக மகிழ்ச்சி. தயாரிப்பாளர்களின் துணிச்சலான முடிவுகளால் மட்டுமே இன்று இது சாத்தியமாகியுள்ளது.
இப்படத்தில் ரியோ மிகச் சிறப்பாக நடித்துள்ளார் இன்னும் பல படங்கள் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். ரம்யா நம்பீசன் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர். எளிதில் எந்த ஒரு படத்தையும் ஒப்புக் கொள்ள மாட்டார். இந்தப் படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். பால சரவணன் இப்படத்திற்கு மிகப் பெரும் பலமாக இருப்பார். பூர்ணிமா ரவி இளைய தலைமுறை ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் பாராட்டுக்களை பெறுவார். 100 சதவீதம் காமெடி சரவெடியாக இத்திரைப்படம் இருக்கும்.
ஒளிப்பதிவாளர் B.ராஜசேகர் பேசும்போது, “அனைவருமே இப்படத்தை படப்பிடிப்பு தளத்திலேயே கோண்டாடினோம். இயக்குநர் பத்ரியுடன் பணிபுரிந்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. நிறைய ஓடிடி தளங்கள் அணுகிய போதும் இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதில் உறுதியாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி…” என்றார்.
படத் தொகுப்பாளர் சாம் RDX பேசும்போது, “இத்தருணத்திற்காகத்தான் நாங்கள் அனைவருமே காத்திருந்தோம். இப்படத்தை எடிட் செய்வது மிக கடினமாக இருந்தது. எங்கு கட் செய்வது, எதை விடுவது, என்பதே புரியவில்லை.
‘காதலா காதலா’, ‘பஞ்ச தந்திரம்’ படத்தை எப்போது டிவியில் பார்த்தாலும் கொண்டாடுவது போல், இப்படமும் கொண்டாடப்படும். “பிளான் பண்ணி பண்ணனும்” மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக, திரையரங்கில் அனைவரும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் திரைப்படமாக இருக்கும்.
நடிகர் சித்தார்த் விபின் பேசும்போது, “பொது முடக்க காலத்தில் இந்த திரைபடம் ஓடிடியில் வர பேச்சுவார்த்தை நடப்பது போல் இருந்தபோது, மிகவும் பயந்தேன் ஆனால் தயாரிப்பாளர்கள் மிக உறுதியுடன் இருந்து திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதை, கேட்டபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. திரையரங்குகளில் அனைவரும் இப்படத்தை பார்த்து கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
கலை இயக்குநர் PPS சரவணன் பேசும்போது,” இப்படம் முழுக்க முழுக்க சிரித்து மகிழும் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். கொரோனா சோகங்களை மறந்து அனைவரும் வெடித்து சிரிக்கும்படியான படமாக இருக்கும். 2021 செப்டம்பர் 24 அனைவரும் இப்படத்தை திரையரங்கில் பார்த்து சிரித்து கொண்டாட வேண்டும், என கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.
பாடலாசிரியர் நிரஞ்சனா பாரதி பேசும்போது, “ எல்லோரும் கூறியது போல் இப்படம் மன அழுத்தத்தை போக்கும் மருந்தாக, திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடி மகிழும் படைப்பாக இருக்கும். நான் இப்படத்தில் நான்கு பாடல்கள் எழுதியுள்ளேன். ஒவ்வொரு பாடல்களும் வித்தியாசமானதாக இருக்கும். படத்தில் பணி புரிந்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது…” என்றார்.
தயாரிப்பாளர் ராஜேஷ்குமார் பேசும்போது, “ஆரம்பத்தில் ஏப்ரல் 2019-ல் இப்படத்தை திரையரங்கில் வெளியிட தீர்மானித்திருந்தோம். எல்லோருக்கும் தெரிந்ததுபோல் கொரோனா பொது முடக்கத்தால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இந்த இடைப்பட்ட காலத்தில் மிகவும் கடினமான மன அழுத்தம் இருந்தது. பல தடைகள் கடந்து இப்போது பாஸிட்டிவ் விசயங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளது.
திரையரங்கில் ரசிகர்களுக்கு மிகச் சிறந்த காமெடி கொண்டாட்டமாக இத்திரைப்படம் இருக்கும். 2021 செப்டம்பர் 24 அனைவரிடம் இருந்தும் படத்திற்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைக்குமென எதிர்பார்க்கிறோம்…” என்றார்.
நடிகர் M.S.பாஸ்கர் பேசும்போது, “இத்திரைப்படம் அனைத்துத் தரப்பினரையும் கவரும் திரைப்படமாக இருக்கும். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் படப்பிடிப்பில் எனக்கு முழு சுரந்திரத்தை தந்தார். எனது சிறிய பரிந்துரைகளை, நான் சொன்ன சிறு வசனங்களை, எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டார். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் எங்கள் கடின உழைப்பிற்கு உங்கள் ஆதரவை தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.