மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற பெயரில் உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தை ‘ஆஹா ஓடிடி’ தளத்திற்காக ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகர் விதார்த் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ்.பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார். இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கியிருக்கிறார்.
சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரப்படும் செய்தி மற்றும் புகைப்படங்கள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையாக வைத்து இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் பொறுப்புணர்வு குறித்தும் இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற தரமான படைப்புகளைத் தொடர்ச்சியாக தேர்வு செய்து ‘ஆஹா ஒரிஜினல்ஸ்’ படைப்பாக தங்களின் பிரத்யேக பார்வையாளர்களுக்காக வெளியிடுகிறது.
தற்போது இந்த ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப் பக்கத்தில் வெளியிட்டனர்.
சமூக வலைத்தளங்களைப் பற்றிய திரைக்கதை என்பதால் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இணையவாசிகளிடத்திலும், பார்வையாளர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் படம் ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வரும் ஏப்ரல் 29-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.