தமிழ்த் திரையுலகத்தின் பிரபல நடன இயக்குநர்கள் தங்கப்பன், பிரபுதேவா, ராஜு சுந்தரம், ராகவா லாரன்ஸ், தினா, அரிக்குமார் ஆகியோரை தொடர்ந்து நடன இயக்குநர் மஸ்தானும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 500 படங்களில் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார் மாஸ்டர் மஸ்தான். இவர் தற்போது ‘பட்டைய கிளப்பு’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.
சாய்ராம் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக நான்கு தென்னிந்திய மொழிகளில் இருந்து நால்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த சித்ரா ஒரு நாயகியாக அறிமுகமாகிறார். பெங்களூர் மாடல் அழகி லட்சுமி பாலா, திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி தீபிகாவும் நடிக்கவிருக்கிறார். இன்னும் ஒரு கதாநாயகியின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும் சிங்கம் புலி, இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து, விஜய் கணேஷ், கிங்காங், நேகா, போண்டா மணி, வெங்கல் ராவ், சுப்புராஜ் இவர்களுடன் ‘முத்தின கத்திரிக்கா’, ‘நான் பேய் பேசுறேன்’, ‘வெட்டி பசங்க’ போன்ற படங்களில் கேரக்டராகவே வாழ்ந்து அசத்திய நடிகை உமா ராமச்சந்திரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
பிறைசூடன், சினேகன், சொற்கோ, கானா தாஸ் நால்வரின் பாடல்களுக்கு தயா பிறைசூடன் இசையமைக்கிறார். ஆர். வேல் ஒளிப்பதிவு செய்ய விஜயகுமார் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடனப் பயிற்சியும் கொடுத்து இயக்குகிறார் மாஸ்டர் மஸ்தான்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் மஸ்தான் பேசும்போது, “படித்த நான்கு இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பிரச்சனைகளில் முடிகிறது. ஊரில் இவர்களுக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் நால்வரும் கூடி பேசி இவர்களுக்கு முன்னால் பணம் சம்பாதித்து உதாசீனப்படுத்திய அந்த ஊருக்குள் வந்து இளைஞர்களாகிய எங்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபிப்பதுதான் கதையின் களம்..” என்றார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் துவங்குகிறது. பழனி, ஏற்காடு, சாலக்குடி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. வரும் மே மாதம் இந்த ‘பட்டைய கிளப்பு’ படம் திரைக்கு வரவுள்ளது.