அறிமுக இயக்குநரான கலா அல்லூரி, தனது ஸ்ரீகலா கிரியேஷன்ஸ் சார்பில் கதை திரைக்கதை அமைத்து தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘பரிசு’.
நாயகியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அறிமுக நாயகியாக ஜான்விகா நடித்துள்ளார். கல்லூரி மாணவியாகவும், விவசாயம் செய்யும் பெண்ணாகவும், ராணுவ வீரராகவும் என்று மூன்று மாறுபட்ட தளங்களில் தனது நடிப்புத் திறமையைக் காட்டி உள்ளார்.
மேலும் ஜெய் பாலா, கிரண் பிரதீப், ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்ன பொண்ணு, பேய் கிருஷ்ணன், ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சங்கர் செல்வராஜ், இசை – ராஜீஷ், படத்தொகுப்பு – சி.எஸ்.பிரேம்குமார், நடன இயக்கம் – சுரேஷ்சித், சண்டை இயக்கம் – கோட்டி -இளங்கோ, பின்னணி இசை – சி.வி.ஹமரா, பாடகர்கள் – சின்மயி, சக்திஸ்ரீ கோபாலன், மானசி , வந்தனா சீனிவாசன், ரஞ்சித், தயாரிப்பு வடிவமைப்பு – அஞ்சலை முருகன், பத்திரிக்கை தொடர்பு – சக்தி சரவணன்.
படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாகவும் கதைக்கு தேவையான அம்சங்களை அழகான வரிகள் மூலம் கொண்டு வந்துள்ளார் பாடலாசிரியர் K.ராஜேந்திரன் M.A.MBA.
இந்தப் ‘பரிசு’ படம் பற்றி இயக்குநர் கலா அல்லூரி கூறும்போது, “ஒரு தந்தைக்கு மகள் அளிக்கும் பரிசு, நாட்டுக்குச் சேவை செய்வதுதான் என்ற கருத்தைச் சொல்கிறது இப்படம்.
நாயகியின் தந்தை ஓர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. நான் மற்றவர்கள் போல் உன்னை டாக்டர் ஆக வேண்டும் இன்ஜினியராக வேண்டும் என்று கனவு காணவில்லை. நீ நம் நாட்டிற்குச் சேவை செய்யும் ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் என் கனவு என்கிறார். மரணம் எப்போது வேண்டுமானாலும் வரும் அதை நாட்டுக்காக செய்வது பெருமை என்று சிறு வயதிலேயே உணர்த்துகிறார் அந்தத் தந்தை.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அவரது மகள், அப்பாவின் விருப்பப்படியே இராணுவத்தில் சேர்கிறாள். ஒரு பெண்ணாகவும் ராணுவ வீரராகவும் அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தடைகளையும் அவள் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறாள் என்பதையும் கூறுவதே இந்தப் படம்.
நம் நாட்டில் பெண்கள் எல்லா துறையிலும் முன்னேறி வருகிறார்கள். அதற்குரிய வாய்ப்புகளை நமது அரசாங்கம் அளிக்கின்றது. அதைப் பின்பற்றி இன்றைய பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கிறார்கள். அதிலும் முக்கியமாக இராணுவ துறையில் முன்னேறி வருகிறார்கள். இந்தப் படத்தின் பிரதான பாத்திரமான நாயகியும் தடைகளை மீறி சாதனை படைக்கிறாள்.
நாட்டுக்கான பாதுகாப்பு சேவை மட்டுமல்ல விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும், நாடு தூய்மையாக இருக்க வேண்டும் என்கிற கருத்துகளும் படத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதற்காக தூய்மை இந்தியா பற்றி ஒரு பாடலும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது.
படத்தின் நாயகியான ஜான்விகாவுக்கு சினிமா மீது அபரிமித ஆர்வம். ஏராளமான முன் தயாரிப்புகளுடன் படத்தில் ஈடுபாட்டுடன் நடித்ததுடன் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் சண்டை போட்டுள்ளார்.
பெண்களைக் காட்சிப் பொருளாகக் காட்டும் திரைப்பட உலகத்தில் ஒரு பெண்ணை சாதனைப் பெண்ணாக்கி, அப்பாத்திரத்தை பெருமையுடன் உயர்த்திப் பிடிக்கும் இந்தப் படம் நல்ல முயற்சிதான் என்பதைப் படம் பார்ப்பவர்கள் உணர்வார்கள்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் கலா அல்லூரி.









