full screen background image

“சின்ன பட்ஜெட்டில் இப்படியொரு படமா..?” – திரை பிரபலங்களை ஆச்சரியப்படுத்திய படம்

“சின்ன பட்ஜெட்டில் இப்படியொரு படமா..?” – திரை பிரபலங்களை ஆச்சரியப்படுத்திய படம்

சூது கவ்வும்’ திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்படம்.

Head Media works தயாரித்துள்ள,  இப்படத்தை Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா, ABI & ABI Pictures  சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்து வழங்குகிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக் குழுவினர் மற்றும் திரை விருந்தினர்கள் பங்கு கொள்ள, பத்திரிக்கை, ஊடக  நண்பர்கள் முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் படத்தின் இயக்குநரான பாலா அரன் பேசும்போது, “டார்க் ஜானரில் ஒரு  புது முயற்சியாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். மூடர் கூடம்’, ‘சூது கவ்வும்’ படங்கள்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இப்படம் எடுக்கப்பட்ட முழு அனுபவமும்  மிக சவாலானதாக இருந்தது. இந்தப் படம் இந்த மேடைக்கு வர கேபிள் சங்கர், நலன் குமாரசாமி, ஞானவேல் ராஜா ஆகியோர்தான் காரணம். அந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்…” என்றார்.

இயக்குநர் நலன் குமாரசாமி பேசும்போது, “2 வருடங்களுக்கு முன்பாக இந்தப் படத்தின் டிரெய்லரை மட்டும் காட்டினார்கள் அப்போது பெரிதாக அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை, இந்தப் படத்தை இப்போது ரிலீஸ் செய்யும் ஞானவேல் சாருக்கு நன்றி. நாங்கள் குறும் படத்தில் செய்ததை முழு நீளப் படமாக செய்யும் டெக்னாலஜி இப்போது வந்திருக்கிறது. ஆனால் இம்மாதிரி  புதிய முயற்சியில் வெளியாகும் படங்கள் சரியான அறிமுகத்தை பெற வேண்டும் அம்மாதிரியான அறிமுகத்தை இப்படம் பெற்றது மகிழ்ச்சி.” என்றார்.

தயாரிப்பாளர் C.V.குமார் பேசும்போது, “அட்டக்கத்தி படம் எனக்கு மிகப் பெரிய பயணமாக இருந்தது.  அது மாதிரிதான் இந்தப் படமும் இக்குழுவினருக்கு அமைந்துள்ளது. கேபிள் சங்கர் மூலம்தான் இந்தப் படத்தைப் பார்த்தேன். முதலில் நான் ரிலீஸ் செய்ய முயற்சித்தேன். அப்போதைய காலகட்டத்தில் அது முடியவில்லை பின்னர் ஞானவேல் ராஜா சாரிடம் படம் பார்க்க சொன்னேன். அவர் பார்த்துவிட்டு மிகவும் பிடித்துப் போய் இப்போது அவரே இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி.

இப்படத்தின் பட்ஜெட்டை கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. இந்த அளவு சின்ன பட்ஜெட்டில் இந்தப் படத்தை எப்படி உருவாக்கினார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. இம்மாதிரி படங்கள் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும்…” என்றார்.

தயாரிப்பாளர்  K.E.ஞானவேல் ராஜா பேசும்போது, “பல முக்கிய இயக்குநர்களும் இங்கு வந்து இந்தப் படத்தை வாழ்த்தியுள்ளார்கள். இந்தப் படத்தில் உழைத்துள்ள அனைவரும், அட்டக்கத்தி’ படத்தில் சம்பந்தப்பட்டவர்கள். இப்போது வளர்ந்திருப்பதை போல் மிகப் பெரிய அளவில் வளர்வார்கள்.

இந்தப் படக் குழுவினர் இணைந்து இன்னொரு படம் செய்ய வேண்டும். அதை இந்தப் படம் போல் மூன்று மடங்கு பட்ஜெட்டில் நான் தயாரிக்கிறேன் என்பதை இந்த மேடையில் நான் சொல்லிக் கொள்கிறேன்.

இந்தப் படத்தை முதலில் பார்க்கப் போகும்போது வேறொருவர் வாங்கிவிட்டார்கள் என்றார்கள். பின்னர் எங்கெங்கோ சுற்றி கடைசியில் என்னிடமே வந்து சேர்ந்தது. இந்தப் படத்தை வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

இந்த வகைப் படங்களை எடுக்கும் அனைவருக்குமே உதாரணமாக இருப்பவர் நலன்தான். அவருடன் ஆர்யா நாயகனாக நடிக்க, அடுத்த மாதம் ஒரு படத்தை துவக்கவுள்ளோம். அது ரசிகர்களுக்கு ஒரு புதிய  அனுபவமாக இருக்கும்..” என்றார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசும்போது, “இந்தப் படத்தில்  இருந்து ஒரு காட்சியை போட்டு காட்டினார்கள். அதுவே மிக சுவாரஸ்யமாக இருந்தது. படத்தின் இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள், இந்த திரைப்பட குழு பெரிய அளவில் ஜெயிப்பார்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய அளவில் வெற்றிப் படங்களை தந்து வரும் ஞானவேல் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்…” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “ஒரு மாதத்திற்கு முன் இப்படத்தை பார்த்து நிறைய ஆச்சர்யப்பட்டேன். இது ஒரு அசத்தாலான படம்,  ஓடிடிக்காக பார்த்த அனைவரும் இப்படத்தை பாராட்டினார்கள். 2 மணி நேரம் எப்படி போகிறதென்பதே தெரியாமல் விறுவிறுப்பாக இருக்கும்.

இந்தப் படம் விமர்சர்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும். இனிவரும் தலைமுறைக்கு பேர் சொல்லும் படமாக இந்த “பன்றிக்கு நன்றி சொல்லி” படம் இருக்கும். இம்மாதிரி படங்கள் மக்கள் மத்தியில் சென்று சேர வேண்டும். ஊடகங்கள் இப்படத்தை பெரிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும்…” என்றார்.

 
Our Score