வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கும் திரைப்படம் ‘படையாண்ட மாவீரா’.
இத்திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கி படத்தின் நாயகனாகவும் நடிக்கிறார் வ.கௌதமன்.
‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் மூன்றாவது திரைப்படம்தான் இந்த ‘படையாண்ட மாவீரா’.
இப்படைப்பில் ‘படையாண்ட மாவீரனாக’வே வாழும் வ.கௌதமனுக்கு எதிர் நாயகர்களாக (வில்லன்களாக) மன்சூரலிகான், “ஆடுகளம்” நரேன், “பாகுபலி” பிரபாகர், “வேதாளம்” கபீர், மதுசூதனராவ், தீனா என ஆறு பேர் மோதுகின்றனர்.
இந்தப் ‘படையாண்ட மாவீரா’வில் மிக முக்கிய கதாப்பாத்திரங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், “ரெடின்” கிங்ஸ்லி, “நிழல்கள்” ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், “தலைவாசல்” விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடிக்கிறார்.
பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய இப்படைப்பில் நெருப்பு தகிக்கும் நான்கு சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைக்க, நடனக் காட்சிகளை டான்ஸ் மாஸ்டர் தினேஷ் காட்சிப்படுத்தியுள்ளார்.
இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், பாடல்கள் – கவிஞர் வைரமுத்து, ஒளிப்பதிவு – வெற்றிவேல் மகேந்திரன், கோபி ஜெகதீஸ்வரன், கலை இயக்கம் – மோகன், வசனம் – பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு – ராஜா முகமது, ஸ்டில்ஸ் அன்பு, பத்திரிக்கை தொடர்பு – நிகில்.
இப்படைப்பைப் பற்றி இயக்குநர் வ.கௌதமன் பேசும்போது, “என் வாழ்நாள் லட்சியமே தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத சந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடுகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை படைப்பாக்கி ஒரு தரிசனமாக இவ்வுலகிற்கு தருவது மட்டுந்தான்.
சந்தனக்காட்டு மாவீரன் வீரப்பனை படைத்துவிட்டேன். முந்திரிக்காடும், வன்னிக்காடும் மட்டுமே மீதமுள்ளது. தமிழ் மண்ணில் ஆகப் பெரும் பேரதிர்வுகளை உருவாக்கப் போகும் இப்படைப்பு உன்னையும் இந்த மண்ணையும் காக்க ஒருத்தாய் மக்களாக நில்லுங்கள்” என்று உரக்கப் பேச வருகிறது.
“மாவீரம்” சுமந்த இப்பெரு வரலாற்றின் படப்பிடிப்பு இதுவரை 76 நாட்கள் நடைபெற்று மீதமுள்ள ஐந்து நாட்கள் மெய்சிலிர்க்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ‘படையாண்ட மாவீரா’ குழு தயாராகிக் கொண்டிருக்கிறது..” என உற்சாக நெகிழ்வோடு பேசினார்.