கலை துறையில், இந்தியாவிலிருந்து உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்கள் மிக சிலரே. அந்த மிக சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி.
இவரது சவுண்ட் டிசைன்கள் உலக பிரசித்தி பெற்றவை. இவர் பற்றிய தற்போதைய பரபரப்பு செய்தி ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருப்பதுதான்.
இயக்குநர் பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்த படத்தில் திருச்சூரில் வருடா வருடம் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு சவுண்ட் டிசைனராகவே ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார்.
இந்தப் படத்தை ‘Palm Stone Multimedia’ ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பிரம்மாண்ட படங்களோடு தொடர்புள்ள தயாரிப்பு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இயக்குநர் பிரசாத் பிரபாகரன் பேசுகையில், ”இந்தப் படம் இதுவரை யாரும் செய்யாத முயற்சி என உறுதியாக கூறுவேன். கேரளாவில் உள்ள திருச்சூரில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற பூரம் திருவிழா பல லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கொண்டாடும் விழாவாகும். ஏழு நாட்கள் நடைபெறும் திருவிழா இது.
ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் நூற்றுக்கணக்கான இசை கருவிகளை வாசிக்கும் அந்த சூழல் மேஜிக்காக இருக்கும். இந்த எல்லா ஒலிகளையும் ரெகார்ட் செய்ய ஆசைப்படும் ஒரு சவுண்ட் டிசைனராக ரஸூல் பூக்குட்டி நடித்துள்ளார். அவரது நிஜ வாழ்விலும் இது ஒரு நீண்ட நாள் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது .
இப்படத்திற்கு ‘ஒரு கதை சொல்லட்டுமா’ என தலைப்பிட்டுள்ளோம். ரஸூல் அவர்கள் இந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்ததில் எனக்கு மிகவும் பெருமை. முழு பூரம் திருவிழாவையும் நேரில் சென்று படமாக்குவது என்பது எளிதான காரியம் அல்ல.
எனது அணி பெரும் பாடுபட்டு இந்த அசுர காரியத்தை வெற்றிகரமாக முடித்தது. படப்பிடிப்புக்கு நான்கு மாதங்கள் முன்பே தயார் பணிகளை தொடங்கிவிட்டோம்.
ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக பூரம் திருவிழா ஒலிகளை ரிக்கார்டு செய்வதில் பணி புரிந்தனர். 22 கேமிராக்களை கொண்டு அந்த விழாவில் வாசித்து, அசத்திய 300-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களை படமாக்கியுள்ளோம். கண் பார்வை இல்லாதவர்களும் கதையை உணர்ந்து ரசிக்கும்படி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ராகுல் ராஜ் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் இப்படம் உருவாகியுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது. எங்களது அசுர உழைப்பை மக்கள் கண்டு ரசித்து பாராட்டும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்…” என்றார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை ஆண்டனி எடிட் செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் A.R.ரஹ்மான் அவர்களின் ஸ்டுடியோவில் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் ஆடியோ உரிமையை ‘சோனி மியூசிக்’ நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் உலகத் தரமான இசை தரத்திற்கு இந்த செய்தி மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.