பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா. ஆர்.தர்மராஜ், ஷோபா. கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஒண்டிக்கட்ட.’
‘பெரியண்ணா’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘பார்வை ஒன்றே போதும்’, ‘சார்லி சாப்ளின்’, ‘சுந்தரா டிராவல்ஸ்’ போன்ற படங்களின் மூலம் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் பரணி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
‘தெனாவட்டு’, ‘குரங்கு கைல பூமாலை’, ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ போன்ற படங்களில் காரக்டர் ரோல்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் ‘உச்சத்துல சிவா’, ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர்.
மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஆலிவர் டெனி, இசை – பரணி, பாடல்கள் – கபிலன், பரணி, தர்மா, படத் தொகுப்பு – விது ஜீவா, நடனம் – சிவசங்கர், தினா, ராதிகா, சண்டை பயிற்சி – குபேந்திரன், கலை – ராம், தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன், எழுத்து, இசை, இயக்கம் – பரணி.
படம் பற்றி இயக்குநர் பரணி பேசும்போது, “ஒரு கிராமத்து வாழ்க்கையை செண்டிமெண்ட் கதையுடன் கலந்து உருவாக்கி இருக்கிறோம். சமீபத்தில் இந்த படத்திற்காக தர்மராஜ் எழுதிய பக்கா லோக்கல் தனமான பாடலான ‘துண்டு பீடி இல்லேன்னா தூக்கம் வராது; சரக்கு அடிக்கலைன்னா சத்தம் வராது’ என்ற பாடல் காட்சியை பாபநாசம் அருகே குப்பை கொட்டும் இடத்தில் படமாக்கப்பட்டது.
இந்த பாடல் காட்சிக்காக மலையளவு குப்பை மேட்டில் நாற்றத்தை பொருட்படுத்தாமல் பூச்சி, கொசு, எறும்பு கடிகளை தாங்கிக் கொண்டு விக்ரம் ஜெகதீஷ், சென்றாயன், அர்ஜுனா ஆகியோர் நடித்தனர். இன்னும் சில தினங்களில் இந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கப் போகிறது. படத்தில் இடம் பெறும் எல்லா பாடல்களுமே எனக்கு இன்னொரு உயரத்தை அடையாளம் காட்டும் என்பது நிச்சயம்…” என்றார் பரணி.









