ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras).
ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள்.
கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் கன்னிகா, தலைவாசல் விஜய், அருள் டி.சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘நெடுநல்வாடை’ படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ளார். படத்தின் வசனத்தையும் பாடல்களையும் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ளார். காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ‘ராட்சசன்’ படத்தின் எடிட்டர் சான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை ஏற்றுள்ளார். கலை இயக்குநராக நட்ராஜ் பணியாற்றியுள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை சுகன் அமைத்துள்ளார். காஸ்ட்யூம் டிசைனராக ரிஸ்வானா பணியாற்றியுள்ளார். படத்தின் லைன் புரொடியூசர்: ஸ்ரீதர் கோவிந்தராஜ், பொன்சங்கர், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் – கே.எஸ்.கே. செல்வகுமார், தயாரிப்பு மேற்பார்வை: சிவமாணிக்க ராஜ்.
வரும் செப்டம்பர் 26-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் பி.ஜி.எஸ். பேசும்போது, “இந்தப் படத்தின் கதை தொடங்கி, திரைக்கதையாக ஒன்றரை ஆண்டுகள் ஆனது. இப்படம் ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த புதுமையான அனுபவமாக இருந்தது, அது போக படத்தில் அனைத்து கதாபாத்திரங்களிலும் பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒப்புக் கொண்டு நடித்த அனைவருக்கும் நன்றி. இயக்குநர் பிரசாத் என்னிடம் சொன்ன கதையை அப்படியே அற்புதமாக எடுத்துவிட்டார். பரத் சாருக்கு மிகவும் நன்றி. எங்களது கதையை நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அனைவரும் கதையை கேட்டதும் சரி என சொன்னது எங்களுக்கு மேலும் ஒரு நம்பிக்கையை தந்தது. ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி. அனைவரும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். கண்டிப்பாக படம் உங்களுக்கு பிடிக்கும்…” என்றார்.
இணை தயாரிப்பாளர் ஹாரூன் பேசும்போது, “இந்தப் படத்தில் ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. இந்தக் கதையை இயக்குநர் மிக அழகாக சொன்னார், அதைவிட இயக்குநர் படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார். இந்தப் படம் இந்த தலை முறை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். படம் நிச்சயமாக உங்களை சிந்திக்க வைக்கும். கண்டிப்பாக படம் உங்களுக்கு பிடிக்கும்..” என்றார்.
ஒளிப்பதிவாளர் கண்ணன் பேசும்போது, “இந்தப் படம் எனக்கு கிடைக்க காரணம் ஹாரூன் சார்தான், அதிகமாக தயாரிப்பாளரை பாடுபடுத்தியுள்ளேன், நடிகர்கள் அனைவரும் என்னுடைய வேலையை நம்பி நடித்தனர். படம் நன்றாக வந்துள்ளது. பரத் சாரின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பட்டியல் படம் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். அதேபோல, இந்தப் படமும் அவருக்கு ஒரு பெரிய படமாக இருக்கும். நானும் இயக்குநரும் அதிக சண்டை போட்டுள்ளோம் எல்லாமே படத்திற்காகத்தான். படம் சிறப்பாக வந்துள்ளது..” என்றார்.
நடிகை மிருதலா சுரேஷ் பேசும்போது, “எனக்கு இதுதான் முதல் படம், பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் நானும் நடித்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இயக்குநர் எனக்கு இது முதல் படம் என தெரிந்து கொண்டு பொறுமையாக சொல்லித் தந்து இந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்தார். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். பார்த்து விட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்..” என்றார்.
நடிகை சினி சிவராஜ் பேசும்போது, “எனக்கு கொஞ்சம் புது அனுபவமாக இருந்தது, முதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன், பரத் சாருக்கு மிகவும் நன்றி, எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். இயக்குநர் எனக்கு ஒரு கைடாக இருந்தார். பொறுமையாக இருந்து என்னிடம் வேலை வாங்கினர். இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. அதற்கு ஒட்டு மொத்தக் குழுவிற்கும் நன்றி. உங்கள் ஆதரவை இந்தப் படத்திற்கு கொடுங்கள்…” என்றார்.
இசையமைப்பாளர் ஜோஷ் பிராங்க்ளின் பேசும்போது, “தயாரிப்பாளர் ஆனந்த் அண்ணனுக்கு மிகவும் நன்றி, என்னை அவர்தான் தேர்வு செய்தார். இது போன்ற ஒரு சஸ்பென்ஸ் படத்திற்கு நான் இசை அமைத்ததில்லை, இந்தப் படத்தில் 3 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். அதற்கு ஜெகன் அண்ணாதான் வரிகள் எழுதினார் அவருக்கு மிகவும் நன்றி. படம் சிறப்பாக வந்துள்ளது..” என்றார்.

தயாரிப்பாளர் கேப்டன் எம்.பி.ஆனந்த் பேசும்போது, “இப்படத்தின் உருவாக்கத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் செய்து கொடுத்துள்ளோம். படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் படமாக இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி..” என்றார்.

நடிகை பவித்ரா லக்ஷ்மி பேசும்போது, “இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்த அனைத்து தயாரிப்பாளருக்கும் நன்றி, இந்தப் படத்தின் கதை தாண்டி, படத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை கிடைத்தது. ஒரு பெரிய நடிகருக்கு கொடுத்த அதே மரியாதையை அனைத்து நடிகரிடமும் காட்டினார்கள். இந்தப் படத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்தது நல்ல அனுபவம். பெரிய பயிற்சி கிடைத்தது, ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி, பரத் சாருக்கும் அபிராமி மேமுக்கும் நன்றி, இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள்..” என்றார்.
நடிகர் ஷான் பேசும்போது, “இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் எனக்கு பெரிய உறுதுணையாக இருந்தனர். பரத் சார் மற்றும் மற்ற அனைத்து நடிகர்களுக்கும் பெரிய நன்றி. இந்தப் படத்தில் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். எனக்கு அது ஒரு பாக்கியம். கண்டிப்பாக உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்..” என்றார்.
பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் பேசும்போது, “இந்தப் படம் நடுநிலையை பற்றி பேசியுள்ளது. இயக்குநர் கதையை சொன்னதும், இதுதான் எனக்குத் தோன்றியது. அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். என் தம்பி ஜோஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை நான் எழுதியுள்ளேன், பாட்டு அருமையாக வந்துள்ளது. படம் சிறந்த படைப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக நல்ல படங்களை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள், அதே போல் இந்தப் படத்தையும் நீங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும்..” என்றார்.
இயக்குநர் பிரசாத் முருகன் பேசும்போது, “முதலில் இந்தக் கதையை கேட்டதும் அதற்கு ஆதரவு கொடுத்தது ஆனந்த் சார் அன்றிலிருந்து இன்றுவரை என் மீது நம்பிக்கை வைத்தார்கள். பரத் சார், அபிராமி மேடம் என அனைவரும் பெரிய நடிகர்கள், என்னுடைய கதையை நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப் படம் ஒரு புது அனுபவமாக இருக்கும், ஒரு ஹைப்பர் லிங்க், நான் லீனியர் படம். சுவாரஸ்யமான படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி..” என்றார்.

நடிகை அபிராமி பேசும்போது, “எங்கள் படக் குழுவினர் அனைவருக்கும் பெரிய வாழ்த்துகள், இப்போதுதான் நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டு வந்தேன். எங்கள் குழு மீது எனக்கு பெரிய நம்பிக்கை வந்துள்ளது. ஒரு சில படங்கள்தான் ஒரு பெரிய ஈடுபாட்டுடன் நம்மளை பயணிக்க வைக்கும். அது போன்ற படம்தான் இது. இயக்குநர் என்னிடம் கதையை சொல்லும்போது மொத்த ஸ்கிரிப்ட்டையும் கொடுத்தார், மிகவும் தெளிவாக இருந்தார். இந்தப் படத்தில் பல உணர்வுகளை மிக அழகாக கடத்தியுள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது. எனக்கு மட்டுமல்ல மொத்த குழுவுக்கும், இது ஒரு முக்கிய படமாக அமையும்..” என்றார்.

நடிகர் பரத் பேசும்போது, “எனக்கு மிச்சம் வைக்காமல், அனைவரும் அனைத்தையும் பேசிவிட்டனர். என்ன பேசுவது என்று தெரியவில்லை. இந்தப் படத்தில் நான் கதையின் நாயகனாக நடித்துள்ளேன். கடந்த ஐந்து, ஆறு வருடங்களில், தமிழ் சினிமா வேறொரு இடத்திற்கு சென்றுவிட்டது. அதே போலத்தான் இந்தப் படமும் இருக்கும்.
எனக்கு இது ஒரு புதுமையான கதாபாத்திரம். நான் மொத்த கதையையும் கேட்கவில்லை. அவர் சொன்ன சிறு நேரத்திலே, எனக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை வந்தது. அதை நம்பித்தான் இந்த படத்தில் நடித்தேன். அதை சரியாக செய்தும் காட்டிவிட்டார். படம் பார்த்தேன். நன்றாக வந்துள்ளது. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் முழு ஈடுபாட்டைக் கொடுத்து இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.
இசை மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது, படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள், கண்டிப்பாக உங்களுக்கு ஒரு வெற்றி கிடைக்கும். இப்படம் ரசிகர்களை கண்டிப்பாக சுவாரசியப்படுத்தும். உங்களுக்கு கண்டிப்பாக ஏமாற்றம் கிடைக்காது, படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளையும் ஆதரவையும் கொடுங்கள் நன்றி..” என்றார்.
இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 26-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது.











