இந்தப் படத்தை VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS நிறுவனங்களின் சார்பில் D.வீரா சக்தி & K.சசிகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எழுத்து, இயக்கம் – ஆர்.யுவன்.
ஏராளமான போர்னோ படங்களில் நடித்து தனது திறமையைக் காட்டி உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் கனடா நாட்டு நடிகையான சன்னி லியோன் இந்தியாவில் வந்து குடியேறியதில் இருந்து போர்னோ படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு இந்தியப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி நடித்தும் வருகிறார்.
ஏற்கெனவே சில தமிழ்ப் படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கும் சன்னி, இந்தப் படத்தில்தான் மெயின் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இதுவொரு வரலாற்று சம்பவங்களை உள்ளடக்கிய நகைச்சுவை கலந்த பேய் திரைப்படம்.
இயக்குநராகும் முயற்சியில் தீவிரமாய் இருக்கும் ஏ.பாரதி என்கிற சதீஷ் தனது இன்ஷியலுக்கேற்ப ஏ-த்தனமான கதையம்சத்தில் ஒரு படத்தை எடுக்க முயன்று வருகிறார். கதை சொல்லப் போகும் இடங்களிலெல்லாம் ஏதோ ஒன்று நடந்து அந்த முயற்சி தோல்வியடைகிறது.
தோல்வியில் துவண்டு போயிருக்கும் சதீஷும், அவரது நண்பரான ரமேஷ் திலக்கும் சில சாமியார்கள் ஒன்று கூடி டிஸ்கஸ் செய்து கொண்டிருந்த இடத்தில் போய் ரகளை செய்ய.. அங்கேயிருந்து ஒரு பெண் பேய் இவர்களுடன் வந்து ஒட்டிக் கொண்டு வீட்டுக்கே வந்து விடுகிறது.
வீடு தேடி வரும் சதீஷின் காதலி தர்ஷாவின் உடம்பில் ஏறிக் கொள்ளும் பேய் இறங்க மறுத்து அழி்ச்சாட்டியம் செய்கிறது. பதட்டமாகும் சதீஷ் தன் காதலியின் உடலைப் பற்றிக் கொண்ட அந்த தீய சக்தியின் வரலாறைத் தெரிந்து கொள்ள கி.பி.1000-மாவது வருடத்திற்குப் பயணமாகிறார்.
ஒரு நாட்டின் அழகிய அரசியாக ஆட்சி புரிந்து வந்த சன்னி லியோன், யோகிபாபுவின் சூழ்ச்சியால் கொல்லப்படுகிறார். அவரது ஆவியே தர்ஷா குப்தாவின் உடலில் புகுந்துள்ளது என்பதைத் தெரிந்து கொண்ட சதீஷ், பேயான சன்னி லியோனை விரட்டுவதற்காக சன்னி ஆட்சி புரிந்து வந்த அந்த பழங்கால ஊருக்கே வந்து அவரது அரண்மனைக்குள் கால் வைக்கிறார்.
இதன் பின் என்னவாகிறது..? சன்னி பேய் தர்ஷாவை கை விட்டதா..? அரண்மனைக்குள் நுழைந்தவர்கள் உயிருடன் திரும்பி வெளியில் வந்தார்களா..? என்பதுதான் மீதமான திரைக்கதை.
எடுக்கவிருப்பது பிட்டு படம் என்றாலும் அதையும் உலக சினிமா அளவுக்குப் பேசி பில்டப் கொடுக்கும் சதீஷ், பல காட்சிகளில் கலகலப்பை ஊட்டுகிறார். கதை சொல்லப் போகும் இடத்தில் தயாரிப்பாளருடன் நடக்கும் சந்திப்பையே காமெடியாக்குகிறார்.
அறை நண்பன் ரமேஷ் திலக்குடன் சதாசர்வ காலமும் சண்டையிட்டுக் கொண்டாலும் அவர், இவர் என்று இருவரும் கடைசிவரையிலும் நட்பு பாராட்டுவது வித்தியாசமாக இருந்தது.
படத்தின் இடைவேளையில் அன்றலர்ந்த தாமரைபோல் தண்ணீரில் இருந்து எழும் தலைவி சன்னி லியோன், கேண்டீனுக்குப் போக எத்தனித்தவர்களைக்கூட அமர வைத்துவிட்டார்.
அவரது பால்கோவா கலரில் வண்ணமயமான உடைகளும் சேர்ந்து கொள்ள இளவரசி போல ஜொலிக்கிறார். அப்பாவுக்கே ஆப்பு வைக்கும்போது அடி பாதகி என்றும் சொல்ல வைத்திருக்கிறார்.
சன்னியின் வாள் வீச்சு சண்டை காட்சியில் அனல் பறக்கவில்லையென்றாலும் அவரது மேனியின் ஏற்ற, இறக்கங்களை வஞ்சகமில்லாமல் தனது ரசிகர்களுக்கு தரிசனமாய் தந்திருக்கிறார். யோகிபாபுவின் சதியில் சிக்கி உயிரிழக்கும்போது அந்தப் பரிதாபத்தையும் பெற்றுக் கொள்கிறார்.
அரசருக்கே புத்தி சொல்லும் ராஜகுருவாக யோகிபாபு வலம் வருகிறார். 1000 வருடத்துக்கு முந்தைய காலம் என்றாலும் யோகிபாபுவுக்கு மட்டும் ஸ்பெஷல் பெர்மிஷன் கொடுத்து வழக்கமான பாணியிலேயே அவரை பேச வைத்திருக்கிறார் இயக்குநர்.
இன்னொரு நாயகியான தர்ஷா குப்தாவுக்கு அதிகம் வேலையில்லை. ஆனால் பேயாக மாறும் சில காட்சிகளில் மட்டுமே தனித்துவம் பெற்று நடித்திருக்கிறார். ரமேஷ் திலக் சதீஷூக்கு ஈடு கொடுக்கு டயலாக் டெலிவரியை செய்து தனது வேலையைக் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.
‘குஞ்சாங்கோ’ என்ற ஆண்மை ஊக்க மருத்துவர் கேரக்டரில் ஜி.பி.முத்து சில காட்சிகளே என்றாலும் கொங்குத் தமிழில் பேசி அவரது ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
இவர்கள் தவிர புல்லாங்குழல் ஊதும் சாமியாராக ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும், படத் தயாரிப்பாளராக நடித்திருக்குகம் அர்ஜுனனூம் அவரவர் ஸ்டைலில் லேசாக புன்னகைக்க வைத்திருக்கின்றனர்.
அரசர் காலத்தில் தனது கணீர் குரலில் பேசி நடிக்கும் ரவி மரியா, சன்னி லியோனை வீழ்த்த வந்து தானே வீழ்ந்து போவது சுவாரசியமான திரைக்கதை.
கலை இயக்குநரின் உழைப்பிலும், கிராபிக்ஸ் வல்லுநர்களின் திறமையாலும் உருவான பிரம்மாண்டமான அரண்மனையை ஒளிப்பதிவாளர் தீபக் மேனனின் ஒளிப்பதிவு அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. சன்னி லியோனை கூடுதல் அழகோடு காட்டியதற்காக ஒளிப்பதிவாளருக்கு ஒரு ‘ஜே‘ போடலாம்.
ஜாவித் ரியாஸின் இசையில் காதல் பாடலும், குத்துப் பாடலும் தியேட்டரில் ஒலிக்கிறது. நம் காதுகளைத்தான் எட்டவில்லை.
மொத்தமாக படம் ஏதோ ஒரு சாதாரணமான பேய்ப் படம் பார்த்த திருப்தியை மட்டுமே தருகிறது. இதுக்கெதற்கு சன்னி லியோன் என்ற கேள்விதான் நமக்குள் கடைசியாய் எழுகிறது..!
ஓ மை கோஸ்ட் – ஓ மை காட் என்றுதான் சொல்ல வைத்திருக்கிறது.
RATING : 2.5 / 5