சமூகமும், சினிமாவும் இரட்டைக் குழந்தைகள் போல. சினிமா சமூகத்தை பிரதிபலிக்கிறது. சமூகம் சினிமாவை பிரதிபலிக்கிறது. இன்று செய்தித் தாளைப் பிரித்தாலே கள்ளக் காதல் செய்திகள்தான் அதிகம் தென்படுகின்றன.
’இன்றைய கள்ளக் காதல் கொலைகள்’ என்று தனி பக்கமே கொடுக்கும் அளவுக்கு கணவன் அல்லது மனைவியின் தகாத உறவின் விளைவால் நடக்கும் கொலை, குற்றங்கள் ஏராளம்.
கணவன் மனைவிக்கிடையேயான உறவை, இனனொரு உறவால் ஏற்படும் சூழல் கெடுப்பதால் ஏற்படும் விளைவுகளையும் சொல்லும் ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது இந்த ’ஓடு குமார் ஓடு’ திரைப்படம்.
இந்த படத்தின் நாயகனாக புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன் நடிக்கிறார். கதாநாயகிகளாக புதுமுகங்கள் இருவர் அறிமுகமாகிறார்கள்.
ஒளிப்பதிவு – விவேக் ஆண்டனி. எடிட்டிங் – வெங்கடேஷ். இசை – அமர் கீர்த்தி. இணை தயாரிப்பு – ரியல் தேவ், ஸ்டான்லி. எஸ்.ஆர்.கே. ஜோய், ஏ.மணிகண்டன். தயாரிப்பு – எம்.குமார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சிவசங்கர் மணி.
ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் அழகான ஆதர்ஸ தம்பதிகளின் குடும்பத்தில் திடீரென ஒரு புயல் உருவாகி, மனைவியை விவாகரத்து கேட்க வைக்கிறது.
குடும்பம்தான் முக்கியம் என நினைக்கும் கணவன், மனைவி எவ்வளவோ வற்புறுத்தியும் விவாகரத்து தர மறுக்கிறான். ஒரு காரசார வாக்குவாதத்துக்கும் மறுநாள் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள் மனைவி.
பழி கணவன் மீது விழுகிறது. அந்த பழியில் இருந்து மீண்டு வந்தானா அந்த அப்பாவி கணவன்..? உண்மையில் மனைவியை கொலை செய்தது யார்..? இதனை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவசங்கர் மணி.
படம், சென்னை டூ பெங்களூரு, பெங்களூரு டூ கோவா என பயணத்திலேயே நடக்கிறது. செப்டம்பர் இரண்டாம் வாரம் ராமாவரம் தோட்டத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. தொடர்ந்து பெங்களூரு, கோவா நெடுஞ்சாலைகளில் நடைபெறவுள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த 30-ம் தேதி நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.