full screen background image

100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்ட ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் பாடல்!

100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்ட ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் பாடல்!

இதுவரை திரையுலகம் காணாத புதுமையாகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகவும், ஒரு படத்தின் பாடலை தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் நூறு திரையுலகப் பிரமுகர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

எவரி ஒன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் வினித் மோகன், பிரகாஷ் வேலாயுதன், சதீஷ் வரிகாட்டு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓட விட்டு சுடலாமா’.

இப்படத்தின் கதாநாயகனாக யுகன் ராஜும், நாயகியாக பத்மா கோபிகாவும் நடித்துள்ளனர். ‘ஜன கன மன’ படத்தை இயக்கிய டி.ஜே.மிரட்டு வில்லனாக நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் வினித் மோகனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு பிரகாஷ் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேஜிக் பிரேம்ஸ் மியூசிக் சார்பில் அஸ்வின், சஞ்சீவ், ரிஜோஸ் வி.ஏ., அனூஜ் பாபு இசையமைத்துள்ளனர். ரெத்தீஷ் மோகன் படத் தொகுப்பு செய்துள்ளார். சேது சூர்யா இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். நான்கு பாடல்களையும் வினித் மோகன் எழுதியுள்ளார். கிஷோர் மற்றும் ஷாஜி கலை இயக்கத்தைக் கவனித்துள்ளனர். ரெஜி நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இயக்குநர் எம்.வி.ஜிஜேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக’ ஓட விட்டு சுடலாமா ‘ உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் தலைப்பே புதுமையாக இருக்கிறது என்று பலராலும் பாராட்டப்பட்டது. புதுமுகங்களின் பங்கேற்பில் இப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தின் கதை நாயகன் என்று கூறினால் ஒரு கான்டெஸா காரைத்தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு கார் ஒரு குணச்சித்திரமாகவும் படம் முழுக்கப் பயணம் செய்யும் ஒரு பாத்திரமாகவும் வருகிறது. அதற்குத் துணை போகும் பாத்திரங்களாகவே கதை மாந்தர்கள் வருகிறார்கள்.

படத்தின் முதல் பாதி படம் ஒரு அமானுஷ்யம் கொண்டதாகவும் இரண்டாவது பாதி நகைச்சுவை உணர்வு கொண்டதாகவும் இருக்கும்.

இந்தப் படத்தில் இடம் பெறும் முதல் பாடலான ‘டீக்கடை வீட்டிலே பொண்ணு’ என்கிற பாடலின் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது.

இந்தப் பாடல் வீடியோவைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.பாக்யராஜ், பேரரசு, சிபி மலையில், லால், திரைக் கலைஞர்கள் அஜ்மல், பிருத்விராஜ், உன்னி முகுந்தன், ரேச்சல் ஜேக்கப் நோலா, ஆன்டோ ஜோசப், சாய்ஜு குருப் போன்ற நூற்றுக்கு மேற்பட்ட தமிழ், மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வாழ்த்தி உள்ளார்கள்.

ஒரு திரைப்படத்தின் பாடல் வீடியோவை இத்தனை பேர் வெளியிட்டது இதுவே முதல் முறையாக இருக்கும் என்று கூறலாம்.

இந்தப் பாடல் வீடியோ யூடியூபிலும், ட்விட்டரிலும் ட்ரெண்டிங்கில் வந்தது. சமூக ஊடகங்களில் ஏராளமான பேர் இதையும் பகிர்ந்தார்கள்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் ஜி.கே.எஸ். பேசும்போது, ”கதாநாயகன் ஒரு ஆட்டோ டிரைவர். அவர் நேசிக்கும் பெண்ணை ஒரு பெரிய தாதா கும்பலைச் சேர்ந்த ஒருவன் சிதைத்துவிட, எந்தவித வலிமையான பின்புலமும் இல்லாத கதாநாயகன், தன்னிடம் வந்து சேரும் அமானுஷ்யம் கொண்ட ஒரு காரை வைத்துக் கொண்டு அந்தப் பெரிய தாதா கும்பலைப் பழிவாங்கப் புறப்படுகிறான். பலமிக்க அந்த வன்முறை கும்பலை நாயகன் எப்படி எதிர்கொண்டு பழி வாங்கினான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. பரபரப்பாகவும், சிரிக்க சிரிக்கவும் கதையைக் கூறியுள்ளோம்” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கம்பம், குமுளி, தேனி மற்றும் தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

தற்போது இந்த ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, ஜூலை மாதத்தில் படத்தை வெளியிடும் திட்டத்தில் இறுதிக்கட்டமாக படத்தினை மெருகேற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Our Score