full screen background image

ஷ்ரேயா சரண் டீச்சராக நடித்திருக்கும் ‘மியூஸிக் ஸ்கூல்’ திரைப்படம்

ஷ்ரேயா சரண் டீச்சராக நடித்திருக்கும் ‘மியூஸிக் ஸ்கூல்’ திரைப்படம்

யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”. பி.வி.ஆர். நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் இசைப் பள்ளியின் மற்ற நடிகர்கள் பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, மோனா அம்பேகன்கர், லீலா சாம்சன், பக்ஸ் பார்கவா, வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், வக்கார் ஷேக், ஃபானி  ஆகியோருடன் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் இணைந்து  நடித்துள்ளனர்.

இசையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படம், வரும் மே 12-ம் தேதியன்று திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. 


  
இந்த நிகழ்ச்சியில் நடிகை லீலா சாம்சன் பேசும்போது, “முக்கால்வாசி படங்களில் என்னைச் சாவது மாதிரி காட்டுகிறார்கள். இந்த படத்தில் அது இல்லை என்பது சந்தோசம். பிரகாஷ் ராஜ் சார் இதில் எனக்கு மகனாக நடித்துள்ளார். ‘ஓகே கண்மணி’ படத்தில் என் ஹஸ்பண்ட். இதில் மகன். இந்தியத் திரையுலகில் ஆண்கள் எப்போதும் இளமையாக இருக்கிறார்கள், ஆனால் எங்களுக்கு மட்டும்தான் வயதாகிவிடுகிறது.

இந்தக் கதை மிக முக்கியமான ஒரு பிரச்சனையைச் சொல்கின்ற கதை. என் உறவினர்களிடையேயும்  இந்தப் பிரச்சனை இருப்பதை பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் நான் நடித்ததில் பெரும் மகிழ்ச்சி. படத்தில் இளையராஜா அவர்களின் மியூசிக்கை எல்லோரும் கொண்டாடுவார்கள். அனைவருக்கும் நன்றி…” என்றார்.

நடிகை ஸ்ரேயா சரண் பேசும்போது, “சென்னைக்கு வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷூட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் என் நினைவுக்கு வருகிறது.

இந்தப் படத்தின் இயக்குநரான பாப்பாராவ் பிய்யாலா மிக இனிமையான குணம் கொண்டவர். இப்படத்திற்கு ஷூட்டிங் செல்வது எனக்கு வீட்டுக்குப் போவது போல்தான் இருந்தது. எனக்கு மிகச் சிறந்த பெற்றோர்கள் இருந்தார்கள். அதனால்தான் என்னால் நான் நினைத்ததைச் செய்ய முடிந்தது. என் உறவினர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போராட வேண்டும்.

அதனால் இந்தக் கதையைக் கேட்டபோது அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய கதை. இயக்குநர் மிகச் சிறப்பான முறையில் இதைத் திரையில் கொண்டு வந்துள்ளார்.

இளையராஜாவின் இசை எல்லோரையும் மயக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரது இசை வேறொரு உலகத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும்.  ஷர்மன் ஜோஷி நடிப்பை மும்பையில் வேறொரு ஷுட்டிங்கில் பார்த்துள்ளேன். அவருடன் நடித்தது எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த அனுபவம். இப்படத்தில் அனைவரும் மிகக் கடுமையாக உழைத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி…” என்றார்.

இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா பேசும்போது, “இந்தக் காலத்தில் மாணவர்கள் எப்போதும் எக்ஸாம் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கான அழுத்தத்தில் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். என் காலத்தில் இப்படி இருந்ததே இல்லை. நானெல்லாம் படிப்பு முடிந்து விளையாட்டில்தான் அதிகம் ஈடுபட்டுள்ளேன்.  குழந்தைக் காலத்தில் மிகச் சந்தோஷமாகவே இருந்துள்ளேன்.

இந்தப் படத்தில் சொல்லும் விஷயம் மிகத் தீவிரமானவை. இக்காலத்தில் மாணவர்களுக்கு இருக்கும் அழுத்தம் பற்றிப் பேசும்போது அதை மியூசிக்கலாக பேசலாம் எனத் தோன்றியது. ஸ்ரேயா சரண் மியூசிக் டீச்சர். ஷர்மன் ஜோஷி டான்ஸ் மாஸ்டராக போடலாம் என முடிவெடுத்த பிறகு நான் நியூயார்க் சென்று மியூசிக் பற்றி ஆராய்ச்சி செய்தேன்.

இந்தப் படத்தில் மியூசிக் எனும்போது இளையராஜா ஞாபகம் மட்டுமே வந்தது. என் நண்பர் அவரிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் போவதற்கு முன் இசை பற்றி நிறைய சந்தேகங்கள் இருந்தது. ஆனால் அவர் ‘வா’ நாம் செய்யலாம் என்றார். அதன் பிறகு எல்லாமே மேஜிக்தான். அவர் இசை இப்படத்தில் உங்களை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லும்.

ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் என எல்லோருமே மிகத் திறமை வாய்ந்த நடிகர்கள். மிக அட்டகாசமான நடிப்பைத் தந்துள்ளார்கள். குழந்தை நட்சத்திரங்களும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர். இந்தப்படம் உங்கள் மனதைப் பாதிக்கும் ஒரு நல்ல படைப்பாக இருக்கும்…” என்றார். 

யாமினி பிலிம்ஸ் வழங்கும் இந்தப் பன்மொழி திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. 

இப்படம் வரும் மே 12-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

Our Score