விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி இணைந்து தங்களுடைய ‘ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் ‘கூழாங்கல்’ என்ற தமிழ்ப் படத்தின் முழு உரிமையையும் வாங்கிவிட்டார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படம், தற்போது உலகம் முழுவதும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு வருகிறது.
கடைசியாக ருமேனியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தப் படம் கலந்து கொண்டது. அந்த விழாவில் இந்தக் ‘கூழாங்கல்’ படத்திற்கு நடுவர்கள் அளித்த சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.
இதற்கடுத்து நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் இந்தப் படம் கலந்து கொண்டு சிறந்தத் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.
கொரோனா காலக்கட்டம் என்பதால் படத்தின் தயாரிப்பாளர்களான நயன்தாரா-விக்னேஷ் ஜோடி அந்த விருதைப் பெற நெதர்லாந்து செல்லவில்லை. அதனால் அந்த விருது சமீபத்தில் இங்கே அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விருதுடன் படத்தின் தயாரிப்பாளர்களான நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி புகைப்படம் எடுத்து, “இது எங்களுக்குப் பெருமிதமான நேரம். முதல் சர்வதேச விருது எங்களுக்குக் கிடைத்திருக்கிறது…” என்று சொல்லியிருக்கிறார்கள்.
வாழ்த்துகள்.. சீக்கிரமா படத்தைக் கொண்டாங்கம்மா..!