full screen background image

“தரமற்ற படங்களை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும்” – தயாரிப்பாளர் டி.சிவா வேண்டுகோள்..!

“தரமற்ற படங்களை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும்” – தயாரிப்பாளர் டி.சிவா வேண்டுகோள்..!

ஹீரோக்களும், ஹீரோயின்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ்ச் சினிமாவில் அந்த நாயகன், நாயகி பார்மெட்டுக்குள் அடங்காத ஒரு புதிய வித்தியாசமான கதை, திரைக்கதையில் ‘நரை’ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.

முழுக்க, முழுக்க வயதான நடிகர்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, ஜூனியர் பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய் கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வழக்கமாக இளம் கதாநாயகர்கள் வில்லன்களிடம் மோதுவதையே பார்த்துப் பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு, வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதுவது நிச்சயம் புதுமையான அனுபவத்தைத் தருவதாக அமையும்.

நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் படக் குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக ‘அம்மா கிரியேசன்ஸ்’ சிவா மற்றும் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் இருவரும் கலந்து கொண்டனர்.

r.k.suresh

விழாவில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “நான் ஒரு தயாரிப்பாளராக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகி ஏழு வருடங்கள் ஆகிறது. அன்று நான் தயாரித்த ‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படம் ஜெயிக்காமல் போயிருந்தால், நான் இன்றைக்கு இந்த இடத்தில் இருந்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.

எனது பெரியப்பா ‘சங்கிலி முருகன்’ இப்படத்தில் நடித்திருக்கிறார். அதுவே இப்படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. இப்போதிருக்கிற சூழலில் சிறிய பட்ஜெட் படங்களை எடுத்து வெளியிடுவது என்பது சாதாரணமானது இல்லை. அந்தவகையில் இப்படி ஒரு வித்தியாசமான படத்தை துணிந்து தயாரித்திருக்கிற தயாரிப்பாளர்களுக்கு எனது வாழ்த்துகள். ‘நரை’ திரைப்படம் ஜெயிக்க வேண்டும், இயக்குநர் விவிக்கு எனது வாழ்த்துகள்…” என்றார்.

sangili murugan

நடிகர் சங்கிலி முருகன் பேசும்போது, “அந்தக் காலத்தில் திரைப்படம் பார்க்க போவதெல்லாம் திருவிழாவிற்குப் போவது மாதிரி. இப்போது எல்லாம் அப்படியே மாறிப் போயிருக்கிறது. பல படங்கள் ரசிகனுக்குப் புரிவதே இல்லை.

சமீபத்தில்கூட ஒரு படம் வந்தது. ரசிகனை இருட்டு அறையில் குருட்டு குத்து, குத்திக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ‘நரை’ போன்ற நல்ல படங்கள் வெளிவருவது நல்ல விசயம்தான்.

இயக்குநர் வி.வி. நிச்சயம் பெரிய இயக்குநராக வருவார். அவர் கதை சொல்லும்போதே, அவ்வளவு அருமையாக நடித்துக் காட்டுவார். ஒரு வேளை நாமும் இப்படித்தான் நடிக்க வேண்டுமோ என்று நிறைய முறை குழம்பியிருக்கிறேன்.

இப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது படக் குழுவினர் பயன்படுத்திய ஒளிப்பதிவு டெக்னிக். நிறைய செலவு இல்லாமல், மிகக் குறைந்த பொருட்செலவில் அவர்கள் செய்த லைட்டிங் அவ்வளவு பிரமிப்பை ஏற்படுத்தியது. ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த்திற்கும் இயக்குநர் விவிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். ‘நரை’ சந்தேகமேயின்றி வெற்றி பெறும்…” என்று பேசினார்.

Narai-Press-Meet-Photos-6

டிரெயிலரை வெளியிட்டு பேசிய ‘அம்மா கிரியேசன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, “எல்லோரும் பேசும்போது ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த் பயன்படுத்திய லைட்டிங் டெக்னிக்கைப் பற்றி பாராட்டி சொன்னார்கள். இதுபோல புதுமையான, சிக்கனமான முயற்சிகள்தான் தற்போதைய தமிழ் சினிமாவிற்குத் தேவை.

இப்போது நான் தயாரித்துக் கொண்டிருக்கும் படத்தின் இயக்குநரும் இப்படியான நிறைய புதுமையான விசயங்களால் செலவுகளைக் குறைக்க முடியும் என சொல்லி இருக்கிறார். அதுதான் ஒரு தயாரிப்பாளரை காப்பாற்றும்.

ரசிகர்கள் தமிழ் சினிமாவிற்கு பெருமையைத் தரும் வகையிலான படங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு, சிறுமைப்படுத்தும் படங்களை விமர்சனத்திற்குக்கூட எடுத்துக் கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும்.

நல்ல கதையம்சத்துடன் வந்து வெற்றி பெற்ற ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அறம்’, ‘அருவி’ போன்ற தரமான படங்களின் வரிசையில் ‘நரை’யும் இடம் பெறும் என நம்புகிறேன். படக் குழுவினருக்கு என் வாழ்த்துகள்…” என்று வாழ்த்தினார்.

Our Score