நடிகர் லிங்கேஷ் ‘மெட்ராஸ்’ படம் மூலமாக தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானவர். தொடர்ந்து ‘பரியேறும் பெருமாள்’, ‘குண்டு’, ‘கபாலி’ படங்களில் நடித்து கவனம் பெற்றவர்.
இதனை தொடர்ந்து கதாநாயகனாக ‘காயல்’, ‘காலேஜ் ரோடு’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது இப்படங்கள்.
தற்பொழுது ஹெச்.வினோத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநரான ஸ்ரீவெற்றி இயக்கும் ‘நாற்கரப் போர்’ என்னும் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். “இந்தப் படம் தனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும்” என்கிறார் லிங்கேஷ். இந்தப் படத்தில் அபர்நதி கதையின் நாயகியாக நடிக்கிறார்.
“இந்த ‘நாற்கரப் போர்’ படம் தமிழ் சினிமாவில் யாரும் சொல்ல துணியாத கதை. இது வெளிவந்தால் தமிழ் சினிமாவில் நிச்சயமாக பெரும் அதிர்வலை ஏற்படும் என்கிறார்” படத்தின் இயக்குநரான ஸ்ரீவெற்றி.
இந்த ‘நாற்கரப் போர்’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
ஶ்ரீவெற்றியின் இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் திருவின் உதவியாளர் அர்ஜுன் ரவியின் ஒளிப்பதிவில் தற்போது இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.
தமிழ் சினிமா எப்போதும் நல்ல கதைகளை கைவிட்டதில்லை. அந்த வரிசையில் இந்த ‘நாற்கரப் போர்’ படம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும்.
தரமான இயக்குனர்களை தமிழ் சினிமா உருவாக்கிக் கொண்டேதான் இருக்கும். அந்த வரிசையில் ஶ்ரீவெற்றி இணைவார் என எதிர்பார்க்கலாம்.