full screen background image

10 படங்களில் இருந்து காப்பியடித்த கதையில் உருவாகும் ‘நானும் ஹீரோதான்’ படம்..!

10 படங்களில் இருந்து காப்பியடித்த கதையில் உருவாகும் ‘நானும் ஹீரோதான்’ படம்..!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வெற்றி படம் ‘அருவா சண்ட’.

இப்படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான V.ராஜா அடுத்துத் தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் பட தலைப்பை இன்று படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘நானும் ஹீரோதான்’ என்னும் அந்த படத் தலைப்பின் தமிழ்ப் பதிப்பை மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், தெலுங்கு பதிப்பை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும், கன்னட மதிப்பை தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் முரளி ராம நாராயணனும், மலையாள பதிப்பை தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசனும், இந்தி பதிப்பை டி.ராஜேந்தரும் இன்று வெளியிட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகத்தில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் இப்பட தலைப்பு பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் படம் பற்றி படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநர் மற்றும் நாயகனுமான V.ராஜா பேசும்போது, “மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று நினைத்து நான் எடுத்த படம்தான் ‘அருவா சண்ட’. அந்தப் படம் எதிர்பார்த்ததைவிட அதிகமான வரவேற்பு பெற்றது. மக்கள் எனக்கு நல்ல ஆதரவைக் கொடுத்திருக்கிறார்கள்.

எனவே அதைக் கருத்தில் கொண்டு எனது அடுத்த படத்தை 5 மொழிகளில் தயாரித்து அதில் நானே அதில் கதாநாயகனாக நடிக்கவும் திட்டமிட்டுள்ளேன். அந்தப் புதிய படத்தின் தலைப்பான ‘நானும் ஹீரோதான்’ என்பதை இன்றைக்கு வெளியிட்டுள்ளோம்.

நான் ஹீரோவாக தொடர்ந்து நடிக்கலாமா அல்லது படத் தயாரிப்போடு முடித்துக் கொள்ளலாமா என்பதை இந்த ஒரு படம் தீர்மானித்து விடும். உலக சினிமா வரலாற்றில் இது போன்ற ஒரு திரைக்கதையை எவரும் பார்த்திருக்கவே முடியாது என்று சொல்லவே முடியாது. 

காரணம் பொதுவாக சினிமாவில் வெற்றி பெற்ற படங்களை பார்த்தால் 2, 3 படங்களின் கதைகளை காப்பி அடித்து எடுத்திருப்பார்கள். அவைகள் பெரிய வெற்றியையும் அடைந்துள்ளன.

அதைக் கருத்தில் கொண்டு நான் இந்தப் படத்திற்கான கதையை 10 படங்களில் இருந்து காப்பியடித்து எழுதியிருக்கிறேன். எனவே இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்.

விரைவில் படப்பிடிப்பை துவங்க இருக்கும் இதில் அதிகமாக புதுமுகங்களை நடிக்க வைக்க வேலைகள் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக முகேஷ் குமார், ஜெய் ரத்திக்கா, ரத்தன் மற்றும் சிந்து கிராபிக்ஸ் பவன் குமார் ஆகியோர் தொழில் நுட்பக் கலைஞர்களாக தற்போது தேர்வாகி உள்ளனர்.

தற்போது படப்பிடிப்புக்கான பணிகளில் படக் குழுவினர் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்..” என்றார்.

Our Score