‘துருவங்கள் பதினாறு’ இயக்குநர் கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது.
சென்ற 2016-ம் ஆண்டில் 100 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த படம் ‘துருவங்கள் பதினாறு’. இந்தப் படம் விமர்சன ரீதியிலும், வசூலிலும் பேசப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றது.
இப்படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேனின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு கூடியது. தற்போது அவர் தனது அடுத்த படமாக ‘நரகாசுரனை’ இயக்கியுள்ளார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிருஷ்ணா, ஆத்மிகா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன.
இந்நிலையில் தன் மூன்றாவது படத்தின் அறிவிப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்திக் நரேன் இன்று மாலை 5.00 மணிக்கு வெளியிட்டார். படத்தின் பெயர் ‘நாடக மேடை.’
இந்தப் படத்தை தன்னுடைய சொந்த நிறுவனமான ‘நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட் ‘ பட நிறுவனம் சார்பில் இயக்குநர் கார்த்திக் நரேனே தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவு – சுஜித் சரங், இசை – ரோன் ஈத்தன் யோகன், எடிட்டிங் – ஸ்ரீஜித் சரங், கலை – சிவசங்கர், தயாரிப்பு நிர்வாகம் – மணிகண்டன் என்று தன் பரிவாரங்களுடன் களம் இறங்கும் கார்த்திக் நரேன், நடிப்பவர்கள் யார் யார் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளார். அது யாரும் எதிர்பாராத யூகிக்க முடியாத நட்சத்திரக் கூட்டணியாக இருக்குமாம்.