ஒரு படத்தின் தலைப்பு என்பது ஏறத்தாழ ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும். குறிப்பாக சிவகார்த்திகேயன் படங்களின் தலைப்பு மக்களை எளிதாக ஈர்க்கும் வகையில் இருக்கும். அதைப் போலவே இயக்குனர் ராஜேஷ் படங்களின் தலைப்பும் பரபரப்பு கூட்டும் தலைப்பாகவே இருக்கும்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களும் அவ்வாறே சுவாரசியமான தலைப்பை கொண்ட படங்களாகவே இருக்கும். இவர்கள் மூவரும் இணைந்து பணிபுரியும் படம் என்னும் போது தலைப்பை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்.
அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் தற்போது தயாரிப்பில் இருக்கும் இவர்கள் இணையும் படத்துக்கு ‘மிஸ்டர் லோக்கல்’ என தலைப்பு இடப்பட்டு இருக்கிறது.
இணைய தளத்தில் இந்த தலைப்பு வெளிவந்த உடனே அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி இயக்குநர் எம்.ராஜேஷ் பேசும்போது, “இந்தப் படத்துக்காக பல்வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் படத்தின் கதைக்கு ‘மிஸ்டர் லோக்கல்’ என்கிற தலைப்புதான் பொருத்தும் என்பது எங்கள் அனைவரின் ஏகோபித்தக் கருத்தாகும்.
எங்கள் கதாநாயகன் சிவகார்த்திகேயன் திரையில் தரும் சக்தி மிகவும் பாஸிட்டிவ்வானது. இதைப் பார்க்கும்போது, ஒரு இயக்குநராக அவருடன் போட்டி போட வேண்டும் என்கிற ஆசை எனக்குள் மிகுதியாகியுள்ளது.
கதாநாயகி நயன்தாரா ஒரு அதிசயம். திரையில் அவர் அற்புதங்கள் செய்கிறார். செய்வார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எங்களுக்கு ஒரு மிக பெரிய தூண். அவரது செயல் திறனும், ஒரு கடை நிலை தொழில் நுட்ப கலைஞரிடம்கூட அவர் வைத்து இருக்கும் தொழில் ரீதியான உறவும்தான் அவரது வெற்றிக்கு விதை என்றால் மிகை ஆகாது.
தற்போது இந்த ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்தாண்டின் கோடை விடுமுறைக்கு ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தைத் திரைக்குக் கொண்டு வரும் ஏற்பாடுகள் துரித வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன…” என்கிறார் இயக்குநர் ராஜேஷ்.