‘சிங்கம்-2’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படம் ‘மோகினி’.
இத்திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவின் கதையின் நாயகியாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். த்ரிஷா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கும் முதல் படம் இதுதான்.
மேலும், பூர்ணிமா பாக்கியராஜ், யோகி பாபு, சுவாமிநாதன், ஆர்த்தி கணேஷ் மற்றும் ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரஷே் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் மாதேஷ் இயக்கியிருக்கிறார்.
இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் நாயகி த்ரிஷா, இயக்குநர் மாதேஷ், தயாரிப்பாளர் லட்சுமண், நகைச்சுவை நடிகர்கள் சுவாமிநாதன், கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவின் துவக்கத்தில் படத்தின் டிரெயிலர் திரையிடப்பட்டது. மேலும் படத்தில் இடம் பெறும் இரண்டு பாடல் காட்சிகளையும் திரையிட்டார்கள். அற்புதமான ஒளிப்பதிவில் படம் உருவாகியிருக்கிறது.
விழாவில் இயக்குநர் மாதேஷ் பேசும்போது, “இந்தப் படத்தை மிக பிரம்மாண்டமான செலவில் உருவாக்கியுள்ளோம்.
இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது. படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும். படத்தில் எபி ஜெனெடிக்ஸ் என்ற கான்செப்ட் உள்ளது. டி.என்.ஏ. தொடர்பு பற்றிய விஷயங்கள்தான் படத்தின் முக்கியமான விஷயம்.
படத்தில் ‘மோகினி’யாக நடித்திருக்கும் நாயகி த்ரிஷா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். த்ரிஷா நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் த்ரிஷா.
இப்படத்தின் VFX காட்சிகள் லண்டனில் செய்யப்பட்டது. இந்தப் படம் தமிழகம் போலவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் சோட்டாணிக்கரை கோவிலில் நாங்கள் கண்ட சில விஷயங்களை கிளைமாக்ஸ் காட்சியாக இதில் அமைத்துள்ளோம்..” என்றார்.
படத்தின் நாயகியான த்ரிஷா பேசும்போது, “நான் இப்படத்தில் ‘மோகினி’ மற்றும் ‘வைஷ்ணவி‘ என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். நான் முதன் முதலில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் இதுதான்.
தினம் தினம் காலையில் செய்தித் தாளை படித்தால் அதில் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றிய செய்திதான் அதிகமாக உள்ளது. அந்தச் செய்திகளை படிக்கும்போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. அந்த செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்புதான் இருக்கும். இந்த ‘மோகினி’ படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம்.
இப்படத்தில் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் வகையில் நிறைய விஷயங்கள் உள்ளது. படத்தை லண்டன், பாங்காக் போன்ற இடங்களில் படமாக்கியுள்ளோம்…” என்றார் த்ரிஷா.