இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1986-ம் வருடம் வெளியான ‘கடலோர கவிதைகள்’ படத்தில் ‘ஜெனிஃபர் டீச்சராக’ நடித்து ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தவர் நடிகை ரேகா.
இவர் தற்போது அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் ‘மிரியம்மா’ என்ற படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரெஹைனா இசையமைக்கிறார். படத் தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை ‘யாத்திசை’ புகழ் ரஞ்சித் மேற்கொள்கிறார்.
பெண்களை மையப்படுத்தி தயாராகும் இந்தப் படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.
சமீப ஆண்டுகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை ரேகா, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக.. அழுத்தமான அம்மா கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது.












