உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘மேல்நாட்டு மருமகன்’.
இந்தப் படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலி தேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கே.கெளதம் கிருஷ்ணா, இசை – வே.கிஷோர் குமார், படத்தொகுப்பு – விஜய் கீர்த்தி, கலை – ராம், நடனம் –சங்கர், பாடல்கள் – நா.முத்துக்குமார், நாஞ்சில் ராஜன், ஆக்காட்டி ஆறுமுகம், எம்.எஸ்.எஸ்., தயாரிப்பு நிர்வாகம் – ஆனந்த், தயாரிப்பு – மனோ உதயகுமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.எஸ்.எஸ்.
படம் பற்றி இயக்குநர் எம்.எஸ்.எஸ். பேசும்போது, “இந்தப் படத்தில் இடம் பெறும் ‘யாரோ இவள்; யார் இவளோ’ என்ற பாடல் காட்சி கோத்தகிரியில் படமாக்கப்பட்டபோது நடந்த திடுக்கிடும் சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடம்பெல்லாம் நடுங்குகிறது.
நானும் எனது உதவியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவுக் குழுவினர் அனைவரும் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தோம். அந்த நண்பர் சொன்ன எச்சரிக்கை வாசகம் இதுதான் ‘வீட்டில் இருந்து வெளியே போறதாக இருந்தாலும்… வெளியில் இருந்து வீட்டிற்குள் வருவதாக இருந்தாலும்… முதலிலேயே எனக்கு தகவல் செல்லுங்கள். இது ஆபத்தான இடம். புலிகள் அதிகம் நடமாடும் பகுதி…” என்று கூறியிருந்தார்.
அதன்படி நாங்களும் வெளியேயும், உள்ளேயும் போகும்போது அவரிடம் சொல்லுவோம். அவர் துப்பாகியுடன் வந்து எங்களை பாதுகாப்பாக அழைத்து செல்வார். பாதுகாப்பிற்காக அவர் வீட்டில் ஒரு அழகான வேட்டை நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.
ஒரு நாள் நாங்கள் படப்பிடிப்பு முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்து தூங்கிவிட்டோம். அடுத்தநாள் காலை எழுந்து பார்த்தால் அந்த நாயை காணவில்லை அவரிடம் கேட்டோம். உடனே வீட்டில் இருந்த சி.சி டி.வி பதிவை எடுத்து பார்த்தபோது அதிர்ந்துவிட்டோம். அன்று இரவு 11 மணியளவில் ஒரு சிறுத்தை புலி வந்து அந்த நாயை அடித்து கொன்ற காட்சி அதில் பதிவாகி இருந்தது.
நல்ல வேலை நாங்கள் முன்னதாக வீட்டிற்கு வந்து விட்டதால் உயிர் தப்பினோம். இல்லையென்றால் புலியிடம் சிக்கி இறந்திருப்போம். இப்படி மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த அந்த பாடல் காட்சி அருமையாக வந்திருக்கிறது.
சென்னை, மகாபலிபுரம், திருச்சி, தஞ்சாவூர் போன்ற சுற்றுலா தலங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது…” என்றார் இயக்குநர் எம்.எஸ்.எஸ்.