சமீப நாட்களாக ‘கோச்சடையான்’ சம்பந்தமாக வங்கி கடன் பிரச்சினை என்றும் லதா ரஜினிகாந்தைத் தொடர்புபடுத்தியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் முரளி மனோகர் இன்று மதியம் ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அவர் பேசும்போது. “நான் இங்கே சில உண்மைகளை பகிர்ந்து கொள்ளவே உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். உங்கள் முன் யதார்த்தத்தை சொல்லவே வந்துள்ளேன்.
மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் ஒரு பொது நிறுவனம். மும்பை பங்குச் சந்தையில் பட்டியிலடப்பட்ட நிறுவனம். இது கடந்த பத்தாண்டுகளாக பப்ளிக் லிமிடெட் நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. படத் தயாரிப்பு, பட விநியோகம், திரையீடு என பலவிதமான தளங்களிலும் இந்த நிறுவனம் இயங்கிவருகிறது.
படத் தயாரிப்பை எடுத்துக் கொண்டால் ஐஸ்வர்யாராய், மிராண்டா ரிச்சர்ட்சன் நடித்து ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த “provoked” போன்ற சர்வதேச தரத்திலான படங்களையும் சர்வதேச சந்தைக்குச் கொண்டு சென்றிருக்கிறது.
தமிழில் ‘ஜீன்ஸ்’, ‘மின்னலே’, ‘தாம் தூம்’ போன்ற படங்களையும் நாங்கள் ஏற்கெனவே தயாரித்திருக்கிறோம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எங்களுக்கு சொந்தமானவை மற்றும் குத்தகை என்று 30 திரையரங்குகள் உள்ளன. இந்த வரிசையில் மேலும் சில திரையரங்குகளைக் கொண்டு வர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் சமமாக்கி ஒரு சுதந்திரமான சங்கிலி தொடர் நிறுவனமாக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
நம் நாட்டு பிரபலங்களை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக 1988-லேயே ‘ப்ளட் ஸ்டோன்’ படத்தைத் தயாரித்தேன். அதே போல ‘கோச்சடையான்’ படத்தையும் சர்வதேச தரத்துடன் எடுக்க நினைத்தோம்.
இங்கென்றால் வியாபாரத்தில் லாபம் நஷ்டமென்றால் உடனேயே தெரிந்துவிடும். நம் பிரபலங்களை உலக அளவில் கொண்டு சேர்ப்பதில் உள்ள சிக்கல் காரணமாக இந்தப் படத்தில் வியாபார லாபம் சற்று தாமதம் ஆகும்.
‘கோச்சடையான்’ படத்தைப் பொறுத்தவரை அதை பல வெளிநாட்டு மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட வேண்டியுள்ளது. ஆங்கில டப்பிங் சம்பந்தமான வேலைகள் இப்போதுதான் நடந்து வருகிறது.
‘கோச்சடையான்’ படம் தொழில் நுட்ப ரீதியாக நல்ல முயற்சி. ஆனால் படத் தயாரிப்பின்போது திடீரென்று நிதிப் பிரச்சினை ஏற்பட்டது. இதற்காக எமது மீடியா ஒன் குளோபல் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் எக்ஸிம் வங்கியில் 20 கோடி ரூபாயை சட்டத்திற்கு உட்பட்டுதான் கடனாக பெற்றது. இதை தனது சுயமான திருப்பிச் செலுத்தும் சக்தியுடன்தான் வாங்கியது.
அப்போது வங்கியில் கடனுக்கான கியாரண்டி பிரச்சினை வந்தபோது திருமதி லதா ரஜினிகாந்த் எங்களுக்கு உதவ முன் வந்தார். நாங்கள் வாங்கிய கடனுக்காக தனது சொத்துக்களை அந்த வங்கியில் உத்திரவாதமாக அளித்தார்.
மீடியா ஒன் நிறுவனம் இந்தக் கடனுக்கான வட்டியை 2014 ஜூன் மாதம்வரையிலும் தொடர்ச்சியாக செலுத்தியிருக்கிறது. நிதிப் பிரச்சினை எல்லாருக்கும் வருவது சகஜம்தான். அது போலத்தான் எங்களுக்கும் வந்தது. அதிலிருந்து மறு சீரமைப்பு செய்து.. வேறு, வேறு வரவு ஆதாரங்கள் மூலம் கம்பெனியை மீட்டெடுக்கும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் நாங்கள் வரும் 2015, மார்ச் 31-ம் தேதிக்குள் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்திவிடுவோம். இது தொடர்பாக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்தும் சுமூகமாக முடிந்துள்ளன.
திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் நாங்கள் வாங்கிய கடனுக்கு உத்திரவாதம் அளித்தவர் மட்டுமே. ஆனால் அவரை சம்பந்தப்படுத்தி செய்திகள் மீடியாக்களில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன.
எனவே நாங்கள் வாங்கிய கடனுக்கு உத்திரவாதம் மட்டுமே அளித்துள்ள அவருக்கு தொந்தரவு தராதபடி நாங்களே கடனை விரைவில் அடைத்து விடுவோம். இது தொடர்பான தவறான செய்திகளை மீடியாக்கள் நம்பவும் வேண்டாம். பரப்பவும் வேண்டாம்..” என்று கேட்டுக் கொண்டார்.