ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M.P.கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘மயூரன்.’
இந்தப் படத்தில் வேல ராமமூர்த்தி, ஆனந்த்சாமி(லென்ஸ்), அமுதவாணன்(தாரை தப்பட்டை), அஸ்மிதா(மிஸ் பெமினா வின்னர்) மற்றும் கைலாஷ், சாஷி, பாலாஜி ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தில் நடிக்கும் குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் ‘கூத்துப் பட்டறை’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவு – பரமேஷ்வர், இசை – ஜுபின், ஜெரார்ட், பாடல்கள் – குகை மா.புகழேந்தி, படத் தொகுப்பு – அஸ்வின், கலை இயக்கம் – M.பிரகாஷ், சண்டை இயக்கம் – டான் அசோக், நடன இயக்கம் – ஜாய் மதி, மக்கள் தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M.P.கார்த்திக், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நந்தன் சுப்பராயன்.
இவர் இயக்குநர் பாலாவிடம் ‘நந்தா’, ‘பிதாமகன்’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குநர் நந்தன் சுப்பராயன் பேசும்போது, “படத்தின் தலைப்பான ‘மயூரன்’ என்பதற்கு ‘விரைந்து உன்னைக் காக்க வருபவன்’ என்றும் வெற்றி காண்பவன்’ என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு.
நட்பு, அன்பு, நெகிழ்வு, குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.
சாதாரண கூழாங்கற்கள், வைரக் கற்களாகவும் வைரக் கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம் கல்லூரி விடுதிகள்தான்.
கல்லூரி விடுதிகள் என்பது வெறுமனே தங்கிப் போகும் வாடகை சத்திரங்கள் அல்ல. அவைகள் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்லவிதமாகவோ, மோசமானதாகவோ மாற்றும் ரசவாதக் கூடம்தான் கல்லூரியின் விடுதிகள்.
அப்படியொரு கல்லூரியின் விடுதியில் ஏற்படும் சில பிரச்சனைகள் ஒரு தனி மனிதனின் வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதைப் பற்றிப் பேசும் படம்தான் இந்த ‘மயூரன்’ திரைப்படம்.
ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து பெரிய. பெரிய கனவுகளைச் சுமந்து கொண்டு கல்வி பயிலத் துவங்குகிறான் நாயகன். அவன் பொறியியல் படிப்பிற்காக கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு நாள் இரவில் காணாமல் போகிறான்.
மொத்தக் குடும்பத்தின் ஒரேயொரு ஆதாரமான அந்த மாணவனைத் தேடிச் செல்கையில் அவன் காணாமல் போனதின் மர்ம முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக இறுகி அது மேலும், மேலும் பிரச்சினைகளையும், சிக்கல்களையும் அவனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உண்டாக்குகிறது.
அந்த மாணவனை இறுதியில் கண்டுபிடித்தார்களா. அவன் மறைந்து போனதற்குக் காரணம் என்ன.. என்பதற்கெல்லாம் படத்தின் இறுதியில் விடை கிடைக்கிறது.
ஒரு அருமையான கதைக் களத்தில், விறுவிறுப்பான திரைக்கதையில் தேன் தடவி உருவாக்கியிருக்கிறோம். படம் வரும் ஆகஸ்ட்-2-ம் தேதியன்று பிரபல தயாரிப்பாளர் ஹெச்.முரளி அவர்களின் நிறுவனம் மூலமாக வெளியாக உள்ளது…” என்றார் இயக்குநர் நந்தன் சுப்பராயன்.