full screen background image

இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் கமல்ஹாசனுக்கு எழுதிய கண்டனக் கடிதம்!

இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் கமல்ஹாசனுக்கு எழுதிய கண்டனக் கடிதம்!
சமீபத்தில் நடைபெற்ற ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசனை மேடையில் வைத்துக் கொண்டே அவருடைய ‘தேவர் மகன்’ படத்தினை விமர்சித்துப் பேசினார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
 
இதைத் தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் திரைத்துறைக்குள் வருவதற்கு முன்பேயே நடிகர் கமல்ஹாசனுக்கு அவர் ‘சண்டியர்’ படம் எடுத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் எழுதிய கடிதம் ஒன்று வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளது.
 
அந்தக் கடிதம் இங்கே :
 
ஒரு சேரிப் பையனின் பகிரங்க கடிதம் :
 
வணக்கம்.
 
எனக்கு எட்டு வயசாகும்போது என் கண் முன்னே எங்கள் வீடு எரிந்து கொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம் இது. வெகு காலதாமதம் ஆகிவிட்டது. இந்த இருக்கையும், கணிப்பொறியும் எனக்குக் கிடைப்பதற்கு..!
 
‘தேவர் மகனில்’ தொடங்கி ‘உன்னைபோல் ஒருவன்’வரை பார்த்தாகிவிட்டது. உங்கள் பூணூல் முற்போக்குத்தனத்தையும், அதிகார அறிவின் அட்டகாசத்தையும் இனிமேலும் பொறுத்துக் கொண்டிருக்க, நான் ஒன்றும் என் அப்பன் செல்வராஜோ.. என் தாத்தன் நொண்டி பெருமாளோ இல்லை… மூன்றாம் தலைமுறை நான்.
 
சமீபத்தில் நண்பர் ஒருவர் மூலம் இணையத்தளத்தில் ‘சண்டியர்’க்கு ஆதரவாக நீங்கள் போதையில் ஆற்றிய முற்போக்கு உரையை பார்த்தேன். சரி, அதற்கு அப்புறம் வருவோம்.
 
முதலில் முற்போக்குவாதி, பூணூல் துறந்த பிராமணன், பெரியாரின் கொள்கையை கடைபிடிப்பவர் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் நீங்கள், பல பிரிவு மக்கள்.. பல அடுக்கு சாதி கூறுகளுடன் வாழும் நம் நாட்டில்… ஒரு சாதி மக்களின் வாழ்க்கை முறையை, அவர்கள் அரிவாள் பிடித்த முறையை, அவர்கள் அரிசனனுக்கு சந்தோசமாய் கூழ் ஊத்திய முறையை, மீசை முறுக்கி வளர்த்த முறையை, சாராயம் குடித்த முறையை, சக மனிதனின் சங்கறுத்த முறையை காட்டுகிறேன் என்று ‘தேவர் மகன்’ என்ற தலைப்பில் திரைப்படமாய் எடுத்தது ஏன்..?
 
ஒரு பிரிவு மக்களின் வன்முறை ஆதிக்கத்தை, அவர்களின் அறியாமையை காட்டி அவர்களை உசுப்பேத்திவிடவா இல்லை…? அவர்களின் சாதிய வேல், கம்புகளுக்கு கூர் தீட்டி விடவா..? அல்லது, எப்போதும்போல மீசை முறுக்க ஆசைப்பட்டு பணம் சம்பாதிக்கவா..?
 
அது எப்படி “போற்றிப் பாடடி பெண்ணே; தேவர் காலடி மண்ணே”..? இதன் விளைவையும் வலியையும் இன்றுவரை நீங்கள் உணர்ந்ததுண்டா…? சொல்கிறேன்.. கேளுங்கள். ஒருவேளை நீங்கள் அசட்டு போதையில் இருந்தாலும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
 
ஆறாம் வகுப்பு மாணவர்கள்கூட பள்ளிகளில் அடித்துக் கொண்டார்கள்.
 
திருமணம், சடங்கு, விசேச வீடுகளில், ஏன் கோவில்களில்கூட உங்களின் முற்போக்கு பாடல் ஒலித்து, கிராமங்களின் ஒற்றுமையை ஆட வைத்தது.
 
வெள்ளரிக்காய் விற்கும் வயதான மூதாட்டிகூட வலுக்கட்டாயமாக பாட வைக்கப்பட்டாள்.
 
எங்களுக்கெதிரான உற்சாகத்துடன் மீசைகள் முறுக்கப்பட்டன.
 
வேட்டிகள் மடித்து அதிகார ஆணவத்தோடு கட்டப்பட்டன. மூன்று மணி நேரம் நீங்கள் மீசை, முறுக்கி அரிவாள் தூக்கி கொலைகளையும் செய்து கடைசி மூன்று நிமிடத்தில், “டேய்… அரிவாள்களை கீழ போடுங்கடா” என்று சொன்னது நீங்கள் விரும்பியதை போலவே, யாருடைய காதிலும் விழவில்லை போலும்…!
 
இத்தனைக்கும் பிறகும் எதிர்வினை புரியாமல் இருக்க நாங்கள் என்ன எருமை மாடுகளா..? கை, கால், உயிர், உடைமை இழக்கத்தான் செய்தோம். ஆனால், நீங்களே எதிபார்க்காத ஒரு எழுச்சியை யாம் பெற்றோம்.
 
இத்தனைக்குப் பிறகும் உங்கள் சினிமா வாழ்க்கைக்கு பல உதடுகள் உச்சரிக்கக் கூடிய வெற்றி தேவைபட்டபோது, மறுபடியும் மனசு கூசாமல் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்களின் அதே போர்க் களத்தைத்தான்.
 
‘சண்டியர்’. யார் இந்த ‘சண்டியர்’..? நீங்களா ஐயோ..!? நீங்கள்தான் பரமக்குடி சாஸ்திரிகள் ஆச்சே…? ஐரோப்பிய அறிவைப் பெற்ற ஒரே தமிழ் சீர்திருத்த சிந்தனையாளர் ஆச்சே..!? அப்படியெனில் யார் அந்த ‘சண்டியர்’..? மறுபடியும் அதே ஒரு பிரிவு மக்கள்.
 
ஆனால், இப்போது கருப்பு சட்டை, முறுக்கு பட்டை, கறுக்கு அரிவாள் சகிதம் வந்து இது தென் தமிழகத்தில் சாதி கலரவத்தை தூண்டிய ‘தேவர் மகனின் இரண்டாவது பாகம்’ என்ற அருவருப்பான அறிவிப்பு வேறு…!
 
‘சண்டியர்’ என்ற தலைப்பை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஒரு பாதிக்கப்பட்ட ஒரு சமுக மக்களின் சார்பாக அதன் பிரதிநிதி சொன்னதற்கு, எவ்வளவு ஆரிய அதிகாரத்தோடு உங்கள் பதிலை சொன்னீர்கள்..?!
 
“சண்டியர்’னு பேர் வைத்தால் கிருஷ்ணசாமி கோபித்துக் கொள்வார். அதனால் ‘கிட்டி வாசல்’ன்னு பேரு வைக்கலாமென்றால் அதுக்கும் கோபித்துக் கொண்டால் என்ன பண்ணுவது..?” – எவ்வளவு அருவருப்பான, ஆணவமான, நாகரிகம் இல்லாத பதில் இது.
 
நீங்கள் ‘மன்மத லீலை’ என்று பெயர் வைத்ததற்கா அவர் எதிர்த்தார்..? நீங்கள் ‘தேவர் மகன்’ என்று பெயர் வைத்தபோதுகூட யாரும் எதிர்க்கவில்லையே..?! ஆனால் அதன் மூலம் வந்த விளைவும், ஏற்பட்ட வலியையும் பார்த்து பயந்து, “பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்” என்று ஒரு ஒடுக்கப்பட்ட, சமூக மக்களுக்காய் கேட்டதற்காய் இவ்வளவு கொச்சையான பதில்.!
 
சமூக அக்கறை இல்லாதவன் எப்படி கலைஞனாக முடியும்..? இந்த முற்போக்கு குசும்பும், ஆணவமும் இன்று வந்ததில்லை உங்களுக்கு… உங்கள் தாத்தன் முப்பாட்டன் காலத்து ஆரிய குசும்பு என்று எங்களுக்கு தெரியும்.
 
எப்படி?.. ஒரு சினிமாவின் பெயரை மாற்ற சொன்னதால் நாங்கள் கலாச்சார காவலர்களா..? மனிதனை கழுவ மரத்தில் ஏற்றிக் கொன்ற சமண கலாச்சாரம் எங்களுடையதா..? யாருக்கு வேண்டும் உங்கள் கலாச்சாரம்.? உங்களுக்குதான் வேண்டும் எங்கள் கலாச்சாரம்..? நாங்கள் அடிமையாய் இருந்த கலாச்சாரமும், நாங்கள் அரிவாள் தூக்கிய கலாச்சாரமும் உங்களுக்குத்தான் வேண்டும். அப்பொதுதானே அதில் உங்களைப்போல ஆரிய நாட்டாமைகள், அதில் குளிர் காய முடியும்.
 
அப்புறம் என்ன சொன்னீர்கள்…?
 
ஐந்து வருடத்திற்குள் மாறிப் போகும் அரசியல்வாதிகளைப்போல எல்லாமே மாறி போய்விடுமா திரு.கமல் அவர்களே….?!
 
எதுவும் எங்கும் மாறவில்லை. உங்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை எதுவும் மாற போவதுமில்லை. யாரும் எதையும் மறக்கப் போவதுமில்லை.
 
இன்றைய சூழலில் கிராமப்புற பள்ளிகளில் உலவும் சாதியின் உருவம் உங்களுக்கு தெரியுமா.? பள்ளி பாடப் புத்தகங்களில் முதல் அட்டையிலோ இல்லை.. வேறு பக்கங்களிலோ, தலித் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் இருக்குமெனில்.. அவரது இரு கண்களும், பேனா முனைகளால் தோண்டி எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறதென்று உங்களுக்கு தெரியுமா..?!
 
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பற்றிய கேள்வி வினாத்தாளில் கேட்டால்கூட, அதற்கு பதில் எழுத விரும்பாமல் விட்டுவிட்டு எத்தனை மாணவர்கள் வருகிறார்கள் என்று!?
 
இன்றைக்கு சாதியின் பட்டறையை போலாகிப் போன தமிழக சட்டக் கல்லூரிகளில், கல்லூரி பேப்பர்களில் இருக்கும் அண்ணலின் படத்தின் கண்கள், ஆதிக்க விரல்களில் உள்ள சிகரெட்டால் சுடப்பட்டுக் கொண்டிருக்கிறதென்று!?
 
இந்த நீட்சியின் எதிர்வினையாகத்தான் நடத்தப்பட்டது சென்னை சட்டக் கல்லூரி பயங்கரம். அன்றுமா புரியவில்லை..? உஙகள் முன்னோர் ஆதிகாலத்தில் தொடங்கி வைத்த சாதி கத்திக்கு இரு பக்கமும் கூர்மை என்று..!?
 
ஐயா, உலக நாயகரே..!
 
இன்னும் கண்டதேவி தேர் நடு வீதியில்தான் நிற்கிறது.
 
இன்னும் உத்தப்புரத்தின் சுவர் மறித்துக் கொண்டு அவமானமான சின்னமாகத்தான் நிற்கிறது.
 
கொடியன்குளத்திலும் ஆழ்வார்கற்குலத்திலும், மேலவளவிலும், தாமிரபரணியிலும் நாங்கள் அஞ்சலி செலுத்தி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறோம்.
 
வெண்மனியின் தீ வெக்கையும் அதன் வடுவும் அதுக்குள்ளவா எங்களுக்கு மறந்து போகும்..?
 
கடைசியாக ‘உன்னைபோல் ஒருவன்’ எப்போதும்போல கடன் வாங்கிய உங்கள் சீர்திருத்த மதியை வைத்து மறுபடியும் தமிழ் மக்களுக்கு ஒரு நாசகார சதியை கற்பிக்கும் ஒரு முயற்சி.
 
மனிதாபிமானம்.
 
கொலைக்கு கொலையே தீர்வு.
 
பிறமொழிகாரனையும் நேசிப்பது.
 
அடேயப்பா.. உங்கள் மனிதாபிமானத்தை தூக்கி தமிழக அரசின் புகார் பெட்டியில்தான் போட வேண்டும். ‘மனிதாபிமானம்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கே அருகதையற்ற சினிமா நடிகர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறத்துவிடாதீர்கள்.
 
வெண்மனி
கொடியன்குளம்
மேலவளவு
ஆழ்வார்கற்குளம்
தாமிரபரணி…
 
இதையெல்லாம்கூட விட்டுவிடுங்கள். ஈழத்தில் உன் மொழி பேசும் உன் சகோதரன் கொத்து கொத்தாய் செத்து மடிந்தபோது என்ன செய்து கிழித்துவிட்டீர்கள் என் மனிதாபிமான காவலரே…
 
ஆமாம் அது என்ன வசனம்….? 
 
“பம்பாய்ல எவனுக்கு என்ன நடந்தாலும் நாம இங்க சும்மா இருப்போம். நமக்கென்ன அதைப் பற்றி கவலை? அவன் என்ன நம் மொழியா பேசுகிறான்? இல்லை நம் சொந்தகாரனா…?”
 
அடங்கொப்புரான… ஐயா அறிவிஜீவி! தாமிரபரணியில் பச்சை குழந்தையோடு சேர்த்து பதினேழு பேர் பிணமா மிதந்தபோது, ஏற்கனவே வறலாற்று பிழைக்காக சுட்டுக் கொள்ளப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை சினிமாவில் சுட்டுக் கொல்ல பூணூலோடு புறப்பட்டவர்தானே நீங்கள்..? அப்புறம் என்ன..?
 
கொலைக்கு கொலைதான் தீர்வா..? குடிச்சுப்புட்டு தன் கவுரவத்துக்காக இருபது பேர் சாக காரணமாக இருந்த ‘விருமாண்டி’க்கு தூக்குத் தண்டனை கொடுக்கக் கூடாது என்று சொன்ன நீங்கள் ஒரு சிறுபான்மை சமூகத்திற்காக.. அதன் சமூக நீதிக்காக.. அறியாமையின் காரணமாக வன்முறையை தேர்ந்தெடுத்து தன் வாழ்வை பணையமாக வைத்து பழிக்குப் பழி வாங்கியவர்களை நீதிமன்றமே தண்டனை கொடுத்தாலும் அவர்களை கடத்தி வந்து குண்டு வைத்துதான் கொலை செய்ய வேண்டுமா..?
 
“வாழ்க.. உங்கள் ஆரிய ஜனநாயகம்.” நீங்கள் சொன்னதுபோல் எந்த ஒரு மனிதாபிமான குப்பனும், சுப்பனும் இந்தக் காரியத்தை செய்ய மாட்டான் மிஸ்டர் களவானி காமன்மேன் கமல் அவர்களே..!
 
உங்களின் ஆரிய முற்போக்கு அறிவின் அடிப்படையில் சமூகப் போராளிகள், பொறுக்கிக்கு பிறந்தவர்கள் என்ற மோசமான அருவருப்பான கருத்தை நீங்கள் சொல்வதற்காக ‘துரோக்கால்’ என்ற படம் வரும்வரை காத்திருந்தது ஏன்..? அதே போல் ஆரிய மனிதாபிமான கோபத்தை வெளிப்படுத்த ‘வெட்னஸ் டே’ வரும்வரை காத்திருந்தது ஏன்?…
 
கடைசியாக திரு.கமலஹாசன் அவர்களே..!
 
நீங்கள் கருப்பு சட்டை அணிவதால் உங்களின் ஆரிய வெள்ளைத் தோல் எங்களுக்கு மறந்துவிடும் என்று நினைக்காதீர்கள்…!
 
பூணூலை நீங்கள் துறந்திருக்கலாம். ஆனால், உங்களின் தலைமுறையின் பூணூல் தடம் உங்களை விட்டுப் போகவில்லை என்பது எங்களுக்கு தெரியாமல் இல்லை.
 
உண்மையிலே நீங்கள் ஒரு சிறந்த நடிகர் என்று எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டீர்கள். அப்புறமென்ன நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கும், பாதுகாப்பாய் இருப்பதற்கும் ‘சகலகலாவல்லவனும்’, ‘அவ்வை சண்முகி’யும், ‘தசாவதாரமும்’ போதுமே…!
 
உங்களின் ஆரிய முற்போக்கை அம்பலபடுத்தும் ‘உன்னைப் போல் ஒருவனும்’, சாதி வாழ்வை காட்டி மக்களை பிரித்துக் காட்டும் ‘தேவர் மகனும்’, ‘விருமாண்டி’யும் எதற்கு…?
 
கமல் அவர்களே, உங்களுக்கு திரைக்கதை சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு எங்கள் வாழ்வியலில் நாங்கள் வாழும் வாழ்க்கை முறை அசாதாரணமானது என்பதை தயவு செய்து கொஞ்சம் கருத்தில் வையுங்கள்.
 
இப்படிக்கு
 
இன்னும் சேரி என்ற சொல்லும் வாழ்வும்
 
உங்கள் நாட்டில் இருப்பதால் சேரிப் பையன்
 
– மாரி செல்வராஜ்
Our Score