மலையாளத்தில் மிக பிரபலமான சினிமா தயாரிப்பு நிறுவனமான ‘மரிகர் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தமிழில் முதன்முறையாக அடியெடுத்து வைக்கிறது.
பெயரிடப்படாத முதல் தயாரிப்பான இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான ஹாஷிம் மரிகர் இயக்குகிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் தம்பி மகனான மக்பூல் சல்மான் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். மக்பூல் சல்மான் மலையாளத்தில் பல்வேறு படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஹிந்தியில் சர்ச்சையைக் கிளப்பிய ‘ஹேட் ஸ்டோரி’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த பவுளி டாம் இப்படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். கன்னடத்தில் 12 படங்களுக்கு மேல் நடித்த பிரபலமான நடிகையான ஹர்ஷிகா பூனச்சா மற்றும் சாக்ஷி திவேதி ஆகியோர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகரான ரியாஸ்கான் இப்படத்தில் கல்லூரி மாணவராக வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். படத்துக்கு ஒளிப்பதிவு – சஜித் மேனன், இசை – மன்சூர் அஹ்மத், படத்தொகுப்பு – பிரவீன் KL, கலை – அர்கன், சண்டை பயிற்சி – ரன் ரவி, தயாரிப்பு – மரிகர் ஆர்ட்ஸ், தயாரிப்பாளர்கள் – சுஹாளி சாய்க் மாதர் , ஷாஜி ஆலப்பட்.
இந்தப் படத்தின் துவக்க விழாவில் நாயகன் மக்பூல் சல்மான் பேசும்போது, “நான் தமிழில் நாயகனாக அறிமுகமாவது மகிழ்ச்சியாக உள்ளது. மிகச் சிறந்த இக்கதையில் இந்த படக் குழுவுடன் பணியாற்றுவதும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக உள்ளது.
இப்படத்தில் என்னோடு நடிக்கும் அனைத்து நாயகிகளும் சிறந்த நடிகைகள். ரியாஸ்கான் அண்ணன் என்னோடு கல்லூரி மாணவராக நடிக்கிறார். என்னுடைய பெரியப்பா மம்மூட்டி மாபெரும் நடிகர் மலையாளம் தமிழ் என அனைவரும் அறிந்த மாபெரும் பிரபலம். என்னுடைய அண்ணன் துல்கர் சல்மான் அவரும் தற்போது மலையாளம் மற்றும் தமிழில் முன்னணியில் இருக்கிறார். என்னுடைய பெரியப்பா மம்மூட்டிக்கும், அண்ணன் துல்கர் சல்மானுக்கும் அளித்த ஆதரவை, பாசத்தை எனக்கும் அளிக்க வேண்டும்…” என்று கேட்டுக்கொண்டார்.
நாயகி ஹர்ஷிகா பூனச்சா பேசும்போது, “தமிழில் மிக சிறந்த இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்பது மிகப் பெரிய கனவு. தமிழ் திரைப்படங்களில் நடித்து நல்ல இடத்தை பிடித்து நயன்தாரா போல் பெரிய நடிகையாக வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள். நிச்சயம் இந்தப் படம் வெற்றிப் படமாக அமையும்…” என்றார்.