“மரைக்காயர் படத்தில் பிரபு நடிக்க வேண்டும்” என்று மோகன்லாலே விரும்பியதாக இயக்குநர் பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.
மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் இந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் ‘மரைக்காயர் அரபிக் கடலிண்டே சிம்ஹம்’.
இந்தப் படம் தமிழில் ‘மரைக்காயர்-அரபிக் கடலின் சிங்கம்’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தமிழில் வெளியிட்டுள்ளார்.
இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பிரியதர்ஷன் பேசுகையில், “இந்தப் படத்தைத் துவக்கியபோதே “தமிழ் மற்றும் மலையாளம் மொழியில் இப்படத்தை எடுக்கலாம். மற்ற மொழிகளில் டப் செய்து கொள்ளலாம்” என மோகன்லால் என்னிடம் கூறினார். அதனால்தான் இப்படத்தை துவக்கினோம்.
கலைப்புலி தாணுவிடம், “நீங்கள்தான் இப்படத்தை தமிழில் வெளியிட வேண்டும்” என கூறினேன் . அவர்தான் என்னுடைய நம்பிக்கை.
இந்தப் படம் என்னுடைய குடும்பப் படம் மாதிரி. என் மகள் கல்யாணி, பிரணவ் மோகன்லால், என்னுடைய உதவியாளர்கள், சுரேஷின் மகள் கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் நடித்துள்ளார்கள். பிரபு சாரை இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டுமென மோகன்லால் என்னிடம் கேட்டுக் கொண்டார்.
கேரளாவில் மொத்தமுள்ள 639 தியேட்டர்களில் 632 தியேட்டர்களில் இந்த ‘மரைக்காயர்’ படம் மட்டுமே வெளியாகியுள்ளது. கேரளாவில் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. படத்தின் ரிசர்வேஷன் மட்டும் 100 கோடியை தொட்டுள்ளது. முதல் ஏழு நாட்கள் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது..” என்றார்.










