full screen background image

“50 படங்கள் வரையிலும் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு அனைவரும்தான் காரணம்..” – நடிகர் விஜய்சேதுபதியின் நன்றிப் பேச்சு..!

“50 படங்கள் வரையிலும் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு அனைவரும்தான் காரணம்..” – நடிகர் விஜய்சேதுபதியின் நன்றிப் பேச்சு..!

’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கை கோர்த்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’.

நடிகர் விஜய்சேதுபதியின் 50-வது படமாக உருவாகி இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படம் வரும் ஜூன் 14 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது.

இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில்நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் வினோத் பேசும்போது, “‘ராட்சசன்’ பட டீச்சரில் இருந்து ரிட்டையர்ட் ஆக வேண்டும் என நானும் நீண்ட நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான கதையாக ‘மகாராஜா’ அமைந்துள்ளது. சேது அண்ணாவுடன் எனக்கு இது மூன்றாவது படம்.

அவரின் வளர்ச்சி கடின உழைப்பால் படிப்படியாக வந்தது. அவருடைய சுறுசுறுப்பு நம் சோம்பேறித்தனத்தை தூர விரட்டிவிடும். அனுராக் கஷ்யப் சாரிடம் நிறையக் கற்றுக் கொண்டேன். அபிராமி, மம்தா மோகன்தாஸ் இருவர் கூடவும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் சுதன் சாருக்கும் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் நித்திலனுக்கும் நன்றி” என்றார்.

எடிட்டர் ஃபிலோமின்ராஜ் பேசும்போது, “இந்தப் படத்தில் தொடர்ந்து முடிச்சுகள் அவிழ்ந்து கொண்டே இருக்கும். அதனால், எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஆடியன்ஸோடு சேர்ந்து படம் பார்க்க நானும் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

நடிகை அபிராமி, “விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படத்தில் நானும் ஒரு பார்ட் என்பதில் மகிழ்ச்சி. அவர் பெயரைக் கேட்டதுமே உடனே கதையைக் கூட கேட்காமல் ஓகே சொல்லிவிட்டேன். மற்ற எல்லாமே இந்தப் படத்தில் எனக்கு போனஸ்தான். படத்தில் எல்லோருமே திறமையான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர். யாரிந்த லட்சுமி என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது. நீங்களும் யார் என்று தெரிந்து கொள்ள தியேட்டருக்கு வந்து படம் பாருங்கள். நன்றி” என்றார்.

இயக்குநர் நித்திலன் பேசும்போது, “என்னுடைய டெக்னீஷியன்ஸ் எல்லோருமே திறமையானவர்கள். அவர்கள் இல்லாமல் இந்தப் படம் இல்லை. விஜய்சேதுபதி சார் தன்மையான மனிதர். செலவு பற்றி கவலைப்படாமல் எங்களுக்கு ஆதரவு கொடுத்த சுதன் சாருக்கு நன்றி. விஜய்சேதுபதி, அபிராமி, மம்தா என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். விஜய்சேதுபதியின் 50-வது படம் இது என்பதால் ரொம்பவே ஸ்பெஷல். நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகை மம்தா மோகன்தாஸ் பேசும்போது, “‘எனிமி’ படத்திற்குப் பிறகு நல்ல கதை கொண்ட ‘மகாராஜா’ படம் மூலம் திரும்பி வந்திருப்பதில் மகிழ்ச்சி. இது வெறும் படமாக மட்டுமல்லாது, ஒரு அனுபவம். நான் நிறைய சீனியர் நடிகர்களோடு நடித்திருக்கிறேன். அவர்களில் இருந்து விஜய் சேதுபதி சார் வித்தியாசமானவர். அவர் கேரியரில் இன்னும் மிகப் பெரிய உயரத்தை அடைவார். நித்திலன் திறமையான இயக்குநர். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி பேசும்போது, “ராமோஜிராவ் என்ற ஜாம்பவானின் மறைவினால் எனக்குப் பெரும் வருத்தம். அவருக்குத் தலை வணங்குகிறேன். என்னுடைய 50-வது படமாக இந்த ‘மகாராஜா’ படம் அமைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வினோத், கல்கி, அபிராமி, மம்தா மற்றும் தொழில் நுட்பக் குழுவினர் அனைவரும் அவ்வளவு அழகாக வேலை பார்த்துள்ளனர். இப்போது 50-வது படம் வரையிலும் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு என்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்கிய இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள் என எல்லோரும் தந்த பாராட்டுக்களும், திட்டுக்களும்தான் காரணம். இந்தப் படத்தையும் பார்த்துவிட்டு உங்களது கருத்தினை சொல்லுங்கள்” என்றார்.

Our Score