7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், பாபி சிம்ஹா, முத்துக்குமார், ‘ஆடுகளம்’ நரேன், கஜராஜ், சனாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – கார்த்திக் சுப்பராஜ், ஒளிப்பதிவு – ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை – சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன், தயாரிப்பு வடிவமைப்பு – டி.சந்தானம், குமார் கெங்கப்பன், நடன இயக்கம் – ஷெரீப், சண்டை இயக்கம் – தினேஷ் சுப்பராயன், ஒலி வடிவமைப்பு – குணால் ராஜன், ஒலி கலவை – ஜி.சுரேன், உடைகள் வடிவமைப்பு – பிரவீன் ராஜா, ஒப்பனை – வினோத், சிறப்பு சப்தம் – பல்தேவ், உடைகள் – சுபைர், கலர் – சுரேஷ் ரவி, பாடல்கள் – விவேக், முத்தமிழ், அசல் கோலர், துருவ் விக்ரம், துரை, புகைப்படங்கள் – எம்.தினேஷ், தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.எஸ்.வெங்கட்.
கேங்ஸ்டர் படங்களின் எக்ஸ்பர்ட்டான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்தக் கதைக்கு இந்திய தேசத் தந்தையான மகாத்மாவையும், அவரது கொள்கையான காந்தியத்தையும் கையில் எடுத்துக் கொண்டு கொலை செய்துள்ளார்.
இன்றுவரையிலும் உலகம் முழுவதும் போற்றப்படும் காந்தியம் என்ற வார்த்தையை அமிலம் தோய்த்த வார்த்தைகளால் இந்தப் படத்தில் துளைத்தெடுத்திருக்கிறார் அதே காந்தியத்தால் பேச்சு சுதந்திரத்தைப் பெற்றிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
தீவிர காந்தியவாதியான ஆடுகளம் நரேன் கள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர். இவருடைய ஒரே மகனுக்கு காந்தி மஹான் என்று பெயர் சூட்டி அமைதியின் திருவுருவமாக வளர்த்து வந்திருக்கிறார்.
அப்பாவின் கண்டிப்பான வளர்ப்பினால் காந்தியக் கொள்களை படித்து மனதால் காந்தியவாதியாக இருந்தாலும் தனது செயலால் அதற்கெதிரானவற்றை செய்து வந்திருக்கிறார். தற்போது ஒரு பள்ளியில் காமர்ஸ் வாத்தியாராகப் பணியாற்றுகிறார்.
ஆடுகளம் நரேனின் தோழரும் இன்னொரு காந்தியவாதியுமான கஜராஜின் மகளான சிம்ரனை திருமணம் செய்து கொண்டு ஒரு மகனுக்கும் தந்தையாகியிருக்கிறார் காந்தி மஹான் என்ற விக்ரம். ஆனாலும் இந்த இயந்திரத்தனமான வாழ்க்கை அவருக்குப் பிடிக்காமல் போகிறது. கொஞ்சமும் ஒட்டுதலில்லாத சாதாரண வாழ்க்கையிலிருந்து விட்டு விலக நினைக்கிறார் .
ஒரு நாள் சிம்ரன் திருப்பதிக்கு தனது மகனுடன் சென்றுவிட.. கிடைத்த கேப்பில் கடா வெட்ட நினைக்கிறார் விக்ரம். அவர் மனம்போல வாழ நினைக்கிறார். குடிக்கிறார். சூதாடுகிறார். அந்த நேரத்தில்தான் தனது பால்ய காலத்து நண்பனான பாபி சிம்ஹாவை சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின் ஊடாக நடக்கும் செயல்கள் அவரது ஒட்டு மொத்த வாழ்க்கையையே ஒரே நாளில் புரட்டிப் போடுகிறது.
கணவர் குடித்திருக்கிறார் என்பது தெரிந்தவுடனேயே சிம்ரன் தனது மகனை அழைத்துக் கொண்டு அப்பா வீட்டுக்குக் குடியேறுகிறார். விக்ரம் சிம்ரனைத் தேடிச் சென்று மன்னிப்பு கேட்டும் அவர் வர மறுக்கிறார்.
இதனால் வேதனையுறும் விக்ரமுக்கு பாபி சிம்ஹாவும், அவரது நண்பர்களும் துணை நிற்க.. மொத்தமாக உருமாறுகிறார் விக்ரம்.
பாபி சிம்ஹா செய்து வரும் சாராயத் தொழிலிலேயே தீவிரமாக இறங்குகிறார் விக்ரம். தொழிலில் போட்டிகள் ஏற்பட்டு இதனால் அடிதடி, வெட்டுக் குத்து என்று ரவுடிகள் சாம்ராஜ்யத்தின் தலைவானாகவும் ஆகிறார் விக்ரம்.
தனது இன்னொரு பள்ளித் தோழனை எம்.எல்.ஏ.வாக்கி.. பின்பு மந்திரியாக்கி அவன் மூலமாகவே தமிழகம் முழுவதும் தங்களது சரக்கினை கொண்டு சென்று வியாபாரத்தின் உச்சத்திற்கே செல்கிறார்கள்.
பணமும், பெயரும், புகழும் உயர்ந்தாலும் தன் மகன் இதுவரையிலும் தன்னை வந்து பார்க்கவில்லையே என்ற கவலை விக்ரமுக்கு இருக்கிறது.
இந்த நேரத்தில்தான் விக்ரமனின் மகனான தாதாபாய் நௌரோஜி என்ற துருவ் விக்ரம் ஆறு சாமி ஸ்டைலில் வந்து நிற்கிறார். அவருடைய ஒரேயொரு டார்கெட்டே விக்ரமின் உடன் இருக்கும் அத்தனை பேரையும் போட்டுத் தள்ள வேண்டும் என்பதுதான். அதற்கு இப்போது துணை முதலமைச்சராக இருக்கும் விக்ரமனின் முன்னாள் நண்பன் முத்துக்குமாரும் உடந்தையாக இருக்கிறார்.
கொஞ்சம், கொஞ்சமாக விக்ரமின் அடியாட்கள்.. தளபதிகளைப் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளும் துருவ் விக்ரம், கடைசியாக பாபி சிம்ஹாவுக்கு குறி வைக்க.. பாபி சிம்ஹா, துருவ் விக்ரமுக்கு குறி வைக்க.. மகனா.. நண்பனா என்ற பரிதவிப்பில் விக்ரம் மாட்டிக் கொண்டு முழிக்க… தொடர்ந்து என்னவாகிறார் இந்த காந்தி மஹான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
சுருக்கமாகச் சொல்லப் போனால் காந்தியவாதியாக வாழ கட்டாயப்படுத்தப்பட்ட ஒருவர் அதிலிருந்து விடுபட்டு வேறு உலகத்தில் வாழ்ந்து தனது வாழ்க்கையைத் தொலைக்கும் கதைதான் இந்தப் படம்.
இந்த வருடம் இதுவரையிலும் வெளிவந்த படங்களிலேயே மிக, மோசமான கதையம்சம் கொண்ட படம் இதுதான்.
காந்தி மஹான் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் விக்ரம். ‘அந்நியன்’ விக்ரமாக காந்தி மஹான் காதாபாத்திரத்திலும், காந்தியத்தைத் தொலைத்துவிட்டு ரவுடி விக்ரமாக வேறு வாழ்க்கையிலும் வாழ்ந்திருக்கிறார் விக்ரம்.
நிஜக் காந்தியவாதி, பள்ளி ஆசிரியர், சாராய அதிபர், டான், அப்பா ரோல் என்று பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட முகங்களைக் காட்டி நடித்திருக்கிறார் விக்ரம்.
காந்தியத்தைக் கொலை செய்யும்விதமாக அதுவொரு வழக்கொழிந்த விஷயம் என்றும், அதனால் அச்ச உணர்வுடன்தான் இந்த நாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் உள்ளே போன சரக்கின் தன்மையால் உளறிக் கொட்டும் காட்சியில்கூட விக்ரமின் நடிப்பில் குறையில்லை.
விக்ரம் தனது மகனுடன் சமாதானம் பேசி சனந்தை காப்பாற்ற நினைக்கும் அந்தக் காட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இறுதியில் இனி சமாதானமெல்லாம் வேலைக்கு ஆகாது என்று நினைத்து தந்திரமாக தான் பெற்ற மகனையே குற்றவாளியாக்கும் சித்துவிளையாட்டையும் விளையாடுகிறார். இதைக் கேட்டு மகனான துருவ் விக்ரம் சிரிக்கும் சிரிப்பிலேயே அத்தனை அர்த்தமும் உள்ளது.
துருவ் விக்ரமின் உடலமைப்பும், தொனியும், கம்பீரமாகத்தான் இருக்கிறது. அவரது அறிமுகக் காட்சியும், அந்த ஆட்டமும் அசத்தல் என்றே சொல்ல வேண்டும். அப்பனுக்குத் தப்பாத பிள்ளை என்பதை போல அடுத்தடுத்து விக்ரம் குழுவினரை போட்டுத் தள்ளும்போது வெறித்தனத்தை தனது நடிப்பில் காண்பித்திருக்கிறார் துருவ்.
பாபி சிம்ஹாவை குறி வைத்திருப்பதை காரில் வரும்போது விக்ரமிடம் அவர் சொல்லும் காட்சியில் துருவ் நடிப்பின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். சிறப்பான கதையும், திறமையான இயக்குநர்களும் கிடைத்தால் நிச்சயம் பெரிய நடிகராக வருவார் என்பதில் சந்தேகமில்லை.
பாபி சிம்ஹா கிடைத்த ரோலில் அசத்தியிருக்கிறார். தனது மகன் மீதான பாசத்திலும், தொழிலில் அகலக் கால் வைக்க வேண்டாம் என்று சொல்லித் தடுப்பதிலும் பாபி சிம்ஹாவின் கேரக்டர் ஸ்கெட்ச் சூப்பர்ப். ஆனால் எல்லாம் இவரையும் மீறி நடந்துவிட்டதில் மகனை இழந்த பின்பு இவருடைய நடிப்பு மைல் கல் என்றே சொல்ல வேண்டும். தனது உயிர் நண்பனுடனேயே கடைசியில் மோதல் ஏற்பட்டு பொங்கித் தீர்க்கும் காட்சியில் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் என்றே தெரிகிறது.
இவருக்குச் சற்றும் குறைவில்லாமல் வில்லத்தனத்தை முகத்திலும், வசனத்திலுமே சொல்லி அலட்சியமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் வெட்டை முத்துக்குமார். சிம்ரன் நடிப்பதற்குரிய காட்சிகள் குறைவுதான் என்றாலும் தான் தோன்றும் காட்சிகளில் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருக்கிறார்.
படத்தில் நடித்திருக்கும் சாதாரண சின்ன கேரக்டர்கள்கூட நடிப்பில் குறைவில்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமராவினால் படத்தின் அத்தனை காட்சிகளும் ஒளி வடிவமைப்பில் அபாரமாக இருக்கிறது. படத்தின் துவக்கக் காட்சியே இதுவொரு ஹாலிவுட் படமோ என்ற சந்தேகத்தையே கொடுக்கிறது.
தினேஷ் சுப்பராயனின் சண்டை காட்சிகள் அபாரம். அதிலும், அப்பாவும், மகனும் மோதிக் கொள்ளும் சண்டை காட்சி உச்சம் என்றே சொல்ல வேண்டும். சந்தோஷ் நாராயணன் இசை என்று டைட்டில் கார்ட்டில்தான் இருந்தது. ஆனால், அவரை படத்தில் காணவில்லை என்பதுதான் உண்மை.
ஒரு படைப்பாளிக்கு கருத்து சுதந்திரம் உண்டு என்றாலும், அதற்கும் ஒரு எல்லைக் கோடு உண்டு. தீயவைகளை சரி என்று சொல்வதும், நல்லவைகளை தவறு என்று சொல்வதும் கருத்து சுதந்திரம் ஆகாது. அது சமூகத்திற்குச் செய்யும் தீங்கு. அதை்தான் இந்தப் படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் செய்திருக்கிறார்.
இன்றைக்கு இந்தியாவில் நடக்கும் சமூகக் குற்றங்களின் எண்ணிக்கையில் பார்த்தால் 90 சதவிகிதத்திற்கு அடிப்படையே குடி பழக்கமாகத்தான் இருக்கும். இந்தியர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். தங்களுக்கு நேரும் சோகங்களையும், துக்கங்களையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்கள். இதனால்தான் குடியை நாடத் துவங்கினார்கள்.
இதையறிந்துதான் மகாத்மா அவர்கள் குடியை இந்தியாவில் இருந்து விரட்ட வேண்டும். அது தேசிய வியாதி என்றார். ஆனால் அவரது கருத்தை மறுதலித்துப் பேசுவதாக நினைத்து குடியை ஆதரித்து இந்தப் படத்தின் மூலமாக மிகப் பெரிய சமூகக் குற்றத்தைச் செய்திருக்கிறார் இயக்குநர்.
‘காந்தி மஹான்’ என்ற பெயரை வைத்து அந்தக் கதாபாத்திரம் குடியை வளர்ப்பது போலவும், ‘தாதாபாய் நெளரோஜி’ என்ற சுதந்திரப் போராட்ட தளகர்த்தரின் பெயரைச் சூட்டியவர் படுகொலைகளை அலட்சியமாகச் செய்வது போலவும் காட்சிப்படுத்தி அவர்களை மட்டுமல்ல.. ஒட்டு மொத்த இந்தியாவையே கேவலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
“தவறு செய்ய அனுமதிக்காத சுதந்திரம் சுதந்திரமே அல்ல…” என்று காந்தியார் ஏதோ ஒரு சூழலில் குறிப்பிட்ட வாசகங்களைப் பிடித்துக் கொண்டு நம் கைகளை வைத்து நம் கண்ணைக் குத்துவதுபோல படமெடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
காந்தியாரையும், காந்தியத்தையும் கேவலப்படுத்தும் இந்தச் சுதந்திரத்தைக் கொடுத்ததும் காந்தியார்தான் என்பதை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் புரிந்து கொள்ள வேண்டும்.
சத்யமேவ ஜெயதே..!