இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருக்கும் ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தின் First Look டீசர் வெளியீட்டு விழா இன்று லயோலா கல்லூரியில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் சுசீந்திரன், நாயகன் விஷ்ணு விஷால், நாயகி ஸ்ரீதிவ்யா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தயாரிப்பாளர் சந்திரசாமி, நடிகர் ஹரிஷ் உத்தமன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சமுத்திரகனி, பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தின் First Look-ஐ இயக்குநர் சமுத்திரகனி வெளியிட படத்தின் டீசரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். படத்தின் First look மற்றும் டீசருக்கு கல்லூரியில் உள்ள அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
விழாவில் நாயகன் விஷ்ணு விஷால் பேசும்போது, “எனக்கு லயோலா கல்லூரி மிகவும் பிடித்தமான இடம். சினிமாவில் உள்ள எல்லோருக்கும் லயோலா கல்லூரிக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கும். எனக்கும் லயோலா கல்லூரிக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் என்னுடைய மனைவி லயோலா கல்லூரியின் முன்னால் மாணவி.
நான் இப்படத்தின் மூலம் இயக்குநர் சுசீந்திரனுடன் மூன்றாவது முறையாக இணைகிறேன். இப்படம் நிச்சயம் உங்கள் மனதை தொடும் ஒரு படமாக இருக்கும்..” என்றார்.
இயக்குநர் சமுத்திரக்கனி பேசும்போது, “இப்படத்தின் First look போஸ்டரை பார்க்கும்போது எனக்கு மாபெரும் போராளியான மாவீரன் திலீபன் அவர்கள்தான் நினைவுக்கு வருகிறார். இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தின் மூலம் அழுத்தமான ஒரு பதிவை தமிழ் சினிமாவுக்கு வழங்குவார் என்று நினைக்கிறன்..” என்றார்.
இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, “இப்படத்தின் டீசரை பார்க்கும்போது இந்தத் தமிழ் சமூகத்துக்கு தேவையான முக்கியமான ஒரு படைப்பை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. இல்லாதவர்கள் ஒரு விஷயத்துக்காக போராடும்போதுதான் அது புரட்சியாக மாறுகிறது. இப்படத்தை பார்க்கும்போது நாயகன் ஏதோ ஒரு முக்கிய சமூக பிரச்சனைக்காக போராடுவது போல் தோன்றுகிறது…” என்றார்.
இயக்குநரும், நடிகருமான ஆர்.பார்த்திபன் பேசும்போது, “ஆயிரத்தில் ஒருவன்’, ‘அழகி’ திரைப்படத்துக்கு பின் இப்படம் எனக்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது. அவ்விரு படங்கள் போன்று இப்படம் எனக்கு கண்டிப்பாக நல்ல பெயர் வாங்கி தரும். ஏனென்றால் என்னுடைய கதாபாத்திரம் அப்படி. ‘ஹவுஸ் புல்’ திரைப்படத்துக்கு பின் இப்படத்துக்காக நான் நிறைய விருதுகளை வாங்குவேன் என நம்புகிறேன்…” என்றார்.
இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, “நான் இதற்கு முன்பு இயக்கிய இரண்டு திரைப்படங்களின் First look மற்றும் டீசர்களை இங்குதான் வெளியிட்டேன். அதை தொடர்ந்து இப்போது மீண்டும் நான் தயாரித்து இயக்கியுள்ள ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தின் டீசரை இங்கு வைத்து வெளியிடுகிறேன். ஏனென்றால், எனக்கு லயோலா கல்லூரி மிகவும் பிடித்த இடம்.
முதலில் என்னுடைய தந்தைக்கு நன்றி கூற வேண்டும். ஏனென்றால் அவர் மூலமாகத்தான் இப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரசாமி எனக்கு நண்பரானார். ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது அதே போல் இந்த ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்துக்கும் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்…” என்றார்.















