லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கும் புதிய திரைப்படம் மாபியா. இந்தப் படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் ஒரு எளிய சம்பிரதாய விழாவுடன் தொடங்கியது.
இந்தப் படம் பற்றியும், படப்பிடிப்பு பற்றியும் இயக்குநர் கார்த்திக் நரேன் கூறும்போது, “நாங்கள் இன்று படப்பிடிப்பை துவக்கி, 37 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். ‘தடம்’ படத்தைப் பார்த்த பிறகு அருண் விஜய் சார்தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று என்னால் உணர முடிந்தது,
எனினும், அவர் என் கதையை கேட்டு சம்மதம் தெரிவிப்பாரா என்ற கேள்வி எனக்குள் இருந்தது, ஏனெனில் பல்வேறு கட்டங்களில் இருக்கும் பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். என்னை ஆச்சரியப்படுத்தும்விதமாக, எந்தவொரு பரிந்துரைகளையும், மாற்றங்களையும்கூட கொடுக்காமல் அவர் உடனடியாக ஒரு ஒப்புதல் கொடுத்தார்.
அது போலவே லைகா புரொடக்ஷன்ஸ், பல பெரிய படங்களை தயாரித்து வந்தாலும், எந்தவிதமான தலையீடும், கேள்விகளும் இன்றி எனக்கு முழு சுதந்திரம் அளித்தனர். இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு நம்பிக்கைக்குரிய திரைப்படத்தை வழங்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன்..” என்றார்.
அருண் விஜய் தான் தன் மனதில் உடனடியாக தோன்றிய கலைஞர் என்று அவர் கூறியதால், தலைப்புக்கு ஏற்றவாறு அவர் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்கிறாரா…? என கேட்டதற்கு, “அவர் கேங்க்ஸ்டராக நடிக்கவில்லை, வட சென்னை பகுதியிலும் படத்தின் கதை இருக்கப் போவதில்லை. மாஃபியா வேறுபட்ட ஒரு களத்தை கொண்டிருக்கும் என்பதை மட்டும்தான் என்னால் இப்போதைக்கு சொல்ல முடியும்” என்றார்.
மற்ற நடிகர்கள் பற்றி அவர் கூறும்போது, “பிரசன்னா மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. பிரியா பவானி சங்கரும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்திலும், தோற்றத்திலும் நடிக்கிறார்…” என்றார்.
ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.