தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களை பெங்களூரில் விநியோகம் செய்து வருபவர் குமார். இவர் முதன்முறையாக ஒரு தமிழ்ப் படத்தை தயாரித்துள்ளார். படத்தின் பெயர் ‘மாஃபியா’.
இந்தப் படத்தில் நாயகனாக பிரஜ்வால் தேவ்ராஜ் நடிக்கிறார். இவர் கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்தவர். மேலும், தேவராஜ், அதிதி பிரபுதேவா, ஷைனி ஷெட்டி, வாசுகி வைபவ், ஓரட்டா பிரசாந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – பெங்களூரு குமார் பிலிம்ஸ், தயாரிப்பு – பி.குமார், எச்.லோகித், இயக்கம் / கூடுதல் திரைக்கதை – எச்.லோகித், இசை – ஜே.அனூப் செலின், ஒளிப்பதிவு – அனிஷ் தருண் குமார், வசனம் – மஸ்தி, படத் தொகுப்பு – சி.ரவிச்சந்திரன், சண்டை இயக்கம் – டிபரண்ட் டேனி, விநோத், அன்பறிவ், ரவி வர்மா, நடன இயக்கம் – இம்ரான் சர்தாரியா, ராஜூ சுந்தரம், அதில் சாகித், பிருந்தா, கலை, ஒலிக் கலவை – டி.உதயகுமார், ஒலி வடிவமைப்பு – பிரதாப் வேவ் ஒர்க்ஸ், புகைப்படங்கள் – அபிஷேக் பிரான்சிஸ், மக்கள் தொடர்பு – பிரியா.
படம் குறித்து இயக்குநர் லோகித் பேசும்போது, “சினிமாவுக்கு வந்த பிறகு நான் இயக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன் ‘மம்மி’ மற்றும் பிரியங்கா உபேந்திரா நடித்த ‘தேவகி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளேன். கன்னடத்தில் வெற்றி பெற்ற அந்தப் படங்கள் பெரிய வெற்றியடைந்ததோடு தமிழிலும் டப் செய்யப்பட்டன.
என்னுடைய மூன்றாவது படத்தை நேரடி தமிழ் படமாக இயக்குவதில் மிகுந்த சந்தோஷம். இதில் நாயகனாக நடிக்கும் பிரஜ்வால் தேவ்ராஜ் கன்னடத்தில் பல ஹிட் படங்களில் நடித்தவர். இந்தப் படத்தை தயாரிக்கும் குமார் கர்நாடகாவில் முன்னணி விநியோகஸ்தர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களை பெங்களூரில் விநியோகம் செய்து வருகிறார். அவருடன் இதில் இணைவதில் மகிழ்ச்சி.
இந்தப் படம் ‘மாஃபியா’ பற்றிய கதைகளில் சொல்லப்படாதவைகளாக இருக்கும். அத்துடன் ‘மாஃபியா’ கதைகளுக்குரிய விறுவிறுப்புக்கும் ஆக்ஷனுக்கும் பஞ்சமிருக்காது. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது…” என்றார்.