full screen background image

“இந்தியன்-2′ படத்தின் தாமதத்திற்கு லைகாதான் பொறுப்பு” – இயக்குநர் ஷங்கர் பதில் மனு தாக்கல்

“இந்தியன்-2′ படத்தின் தாமதத்திற்கு லைகாதான் பொறுப்பு” – இயக்குநர் ஷங்கர் பதில் மனு தாக்கல்

“இந்தியன்-2’ படத்தின் தாமதத்துக்கு படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனமே காரணம்…” என்று இயக்குநர் ஷங்கர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“தாங்கள் தயாரிக்கும் ‘இந்தியன்-2’ படத்தை இயக்கி முடித்த பின்புதான் இயக்குநர் ஷங்கர் வேறு படங்களை இயக்க வேண்டும்…” என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக லைகா நிறுவனத்துடன், இயக்குநர் ஷங்கர் சமரசப் பேச்சு நடத்தியும் அது வெற்றியடையாததால் வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இயக்குநர் ஷங்கரின் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “பல உண்மை தகவல்களை மறைத்து லைகா நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. முதலில் இந்த படத்தை தில் ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்தார். பின்னர் அவரை சமாதானப்படுத்தி, படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்தது.

கடந்த 2017 செப்டம்பரில் படத்துக்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்தோம்.  படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என்று பட்ஜெட் போட்ட நிலையில், அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியது. அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை ஏற்படுத்தினர்.

தில் ராஜு படத்தை தயாரித்திருந்தால் படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும். அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீடில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது. நடிகர் கமலுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டதாலும் படப்பிடிப்பு தாமதமானது. அதற்கு தான் பொறுப்பல்ல.

இது தவிர படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானது. பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு தான் பொறுப்பல்ல.

வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க தயாராக இருக்கிறோம் என்று கூறியும், அதை கருத்தில் கொள்ளாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2020 ஜூன்  முதல் 2021 மே வரையிலான ஓராண்டு காலத்தை வீணடித்தது லைகா நிறுவனம்தான். இந்த காலத்தில் நான் சும்மா இருக்க முடியாது. எனவே, லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்..” என்று குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Our Score