லைகா.. ஞாபகம் இருக்கிறதா..? ‘கத்தி’ படத்தின் ரிலீஸின்போது தமிழகமே தினமும் உச்சரித்த பெயர். இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே குடும்பத்தினருடன் மிக நெருங்கிய நட்பில் இருக்கும் மாபெரும் கோடீஸ்வர குடும்பத்தினர் நடத்தும் நிறுவனம் இது.
இந்த நிறுவனம் தயாரித்த படத்தை தமிழகத்தில் திரையிடுவதா என்கிற சர்ச்சையை கிளப்பி தினமும் ஒரு அரசியல்வாதிகள் சார்பில் அறிக்கையும், பேட்டியும் கொடுத்து ‘கத்தி’ படத்திற்கு இலவசமாகவே விளம்பரம் பெற்றுத் தந்தார்கள்.
ஒரு வழியாக தமிழகத்தில் மட்டும் டைட்டில் கார்டில் ‘தயாரிப்பு லைகா’ என்கிற பெயரை மட்டும் தூக்கிவிட்டு ‘கத்தி’ படத்தை ரிலீஸ் செய்து தப்பித்தார்கள்.
இதே லைகா நிறுவனம் மறுபடியும் தைரியமாக அதே பெயரோடு இப்போது கோடம்பாக்கத்தில் கால் பதித்திருக்கிறது.
இந்த முறை இந்த நிறுவனத்தை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றிருப்பவர் நடிகர் தனுஷ். அவருடைய தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘விசாரணை’ மற்றும் ‘நானும் ரெளடிதான்’ ஆகிய படங்களின் விநியோக உரிமையை லைகா நிறுவனம் பெற்றிருக்கிறதாம்.
இது குறித்து அந்த நிறுவனமே இன்றைக்கு தனிப்பட்ட செய்தியினை மீடியாக்களுக்கு தைரியமாக அனுப்பியிருக்கிறது..!
‘ஆடுகளம்’ படத்தின் இயக்குநரும், பட படங்களின் கதாசிரியரும், தயாரிப்பாளருமான வெற்றி மாறன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘விசாரணை’. இந்தப் படம் இப்போதே பல்வேறு உலகப் பட விழாக்களில் கலந்து கொண்டு வருகிறது.
இப்படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ், ஆனந்தி, சமுத்திரக்கனி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், மிஷா கோஷல் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க மறைந்த எடிட்டர் கிஷோர் படத்தொகுப்பினை செய்துள்ளார். இப்படத்தினை உலகம் முழுவதுக்குமான விநியோக உரிமையை லைகா நிறுவனம் பெற்றிருக்கிறது. வரும் டிசம்பர் மாதம் படம் வெளியாகவுள்ளது.
‘நானும் ரெளடிதான்’ படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பினை செய்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். ‘போடா போடி’ படத்தினை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையை மட்டும் வாங்கியுள்ள லைகா நிறுவனம் படத்தினை வரும் அக்டோபர் மாதம் வெளியிடவுள்ளது.
தமிழர்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா அதிகமாக இருப்பது உலகமறிந்த விஷயம். இந்த முறை யாரும் லைகா நிறுவனத்தின் மீது கோபம் கொண்டு இந்தப் படங்களின் வெளியீட்டின்போது பிரச்சினை செய்ய மாட்டார்கள் என்று நம்புவோமாக..!