உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகவுள்ள ‘சபாஷ் நாயுடு’ படத்தின் துவக்க விழா இன்று காலை நடிகர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகின் முக்கியப் புள்ளிகள் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் முதலாவதாக பேசிய நாசர் “இந்த நடிகர் சங்க வளாகத்தில் திரு.கமல்ஹாசன் அவர்கள் மங்களகரமான ஒரு விழாவை துவக்கி வைத்துள்ளார். அவரது திரைப்பட துவக்க விழாவை இங்கே நடத்தியுள்ளார். இதை தொடர்ந்து இங்கே பல விழாக்கள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். கமல் ஸார் திடீர்ன்னு ஒரு நாள் ‘இந்த இடம் வாடகைக்கு வேணும். என் படத்தோட பூஜையை அங்கதான் நடத்தப் போறேன்..’ என்றார். ‘என்ன ஸார் இது..? பெர்மிஷன் எல்லாம் கேட்டுக்கிட்டு..? இது உங்க இடம்.. தாராளமா நீங்க நடத்திக்கலாம்’ என்றேன்.. பின்பு ஒரு நாள் திடீரென்று எனக்கு போன் செய்து ‘அந்த இடத்துக்கு வாடகையா எவ்வளவு தரணும்?’னு கேட்டார். எனக்கு கோபம் வந்திருச்சு. ‘என்ன ஸார்.. வாடகையெல்லாம் சொல்லிட்டு.. அதெல்லாம் வாங்க மாட்டோம் ஸார்’ என்றேன். ஆனாலும் ‘இது சங்கத்தோட இடம். நம்ம சொந்த இடம் இல்லை. அதுனால அதை யாருக்கும் ப்ரீயா கொடுத்து நடத்துறது ரொம்பத் தப்பு’ன்னு கன்வின்ஸ் செஞ்சாரு.. கடைசியா இந்த விழாவை நடத்த வாடகையாக 2.5 லட்சம் ரூபாயையும் கமல் ஸார் கொடுத்திருக்கார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நன்றி…” என்றார்.
அடுத்ததாக பேசிய உலக நாயகன் கமல்ஹாசன், “நடிகர் சங்க வளாகத்தில் விழாவை நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்திற்கான விளம்பரங்களில் ‘மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா…?’ என்ற வாசகம் இருக்கும். அதை படத்தின் தலைப்பு என்று பலரும் யூகித்து இருக்கலாம். அதுவல்ல படத்தின் தலைப்பு, அந்த வாசகம் ‘மீண்டும் இங்கே நடிகர் சங்க நிர்வாகத்தில் பொறுப்பேற்று இருப்பது யாரென்று தெரிகிறதா…?’ என்பதை குறிக்கும்.
நடிகர் சங்க கட்டிடத்தை மீண்டும் எழுப்ப புதிதாக பொறுப்பேற்று இருக்கும் நிர்வாகம் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நிர்வாகிகள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விஷயம் இங்கே காத்துக் கொண்டிருக்கிறது…” என்று கூறியவர் நடிகர் சங்க தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளை மேடைக்கு அழைத்தார்.
மேடையில் லைகா குழுமத்தின் தலைவர் திரு. அல்லிராஜா சுபாஷ்கரன் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 1 கோடி ரூபாய் நன்கொடையை காசோலை மூலமாக அவர்களிடத்தில் வழங்கினார்.