full screen background image

“நான் புரட்சித் தளபதி அல்ல..” – நடிகர் விஷால் அறிவிப்பு..!

“நான் புரட்சித் தளபதி அல்ல..” – நடிகர் விஷால் அறிவிப்பு..!

விஷால், சுனைனா நடிப்பில், ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் லத்தி’.

வரும் 22-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தை ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிளாஸோ தியேட்டரில் நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த லத்தி’ படத்தின் டிரெயிலரை வெளியிட்டார்.

இந்த விழாவில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது, “நான் விஷாலிடம் மார்க் ஆண்டனி’ படத்தின் கதையை கூறி முடித்திருந்த நேரத்தில், விஷால் தான் நடிக்கப் போகும் இந்த லத்தி படத்தின் கதையை கூறியதும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பிற்கு உடலெங்கும் அடிபட்டுதான் வருவார். உடனே “இப்படத்தின் படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டாம்” என்று கூறினேன். ஆனால், விஷால் அண்ணன் கேட்கவே மாட்டார். கடினமாக உழைத்தார்.

ஒரு புதுமுக இயக்குநருக்கு இவ்வளவு பெரிய படம் கிடைப்பது அரிது. அதற்கு ஆர்.வினோத் குமாருக்கு வாழ்த்துகள். யுவன் இசையில் கிழித்துவிட்டார்..” என்றார்.

தயாரிப்பாளர் ரமணா பேசும்போது, “என்னை ஊக்கப்படுத்தி நடிக்க வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. என்னையும் நந்தாவையும் தயாரிப்பாளர்களாக உருவாக்கிய என் நண்பன் விஷாலுக்கு நன்றி.

முதலில் நாங்கள் கதைகேட்டு பிடித்திருந்தால்தான் விஷாலுக்கு கூறுவோம். இல்லையென்றால், விஷால் அடிப்பார். லத்தி கதையை கேட்டதும் பிடித்தது. விஷாலிடம் கூறினோம். அவர் கதை கேட்டுவிட்டு ஒரு நாள் கழித்துதான் ஒப்புக் கொண்டார்.

ஜாங்கித் சாரை டீஸருக்கே உங்களை அழைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருக்கிறோம்.

சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெயினுக்கு மிகப் பெரிய நன்றி. இரண்டாவது பாதியில் 45 நிமிடங்கள் சண்டைக் காட்சிகள் இருக்கும். “புலி முருகனுக்கு தேசிய விருது வாங்கினேன். அதன் பிறகு இப்படத்திற்கு வாங்கப் போகிறேன்” என்று பீட்டர் ஹெயின் கூறினார். 5 மாதங்கள் விடாமுயற்சியாக உழைத்து சண்டைக் காட்சிகளை இயக்கிக் கொடுத்தார்.

இப்படத்தை முழுதாக பார்த்த பீட்டர் ஹெய்ன், “நான்தான் தேசிய விருது வாங்குவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், இறுதிக் காட்சிகளில் விஷாலின் நடிப்பைப் பார்த்ததும் அவருக்குத்தான் கிடைக்கும். அவன் இவன் படத்திற்கு பிறகு விஷால் சாரின் நடிப்பை இப்படத்தில் பெரிதாக பேசுவார்கள்” என்றார். அவருக்கு எனது நன்றிகள் என்றார்.

ஒளிப்பதிவாளர் பாலு பேசும்போது, “விஷால் சாருடன் நான்காவது படத்தில் பணியாற்றுகிறேன். மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் அவருக்கு அடிபட்டு கொண்டே இருக்கும். ஆனால், அதை பொருட்படுத்தாமல் நடிப்பார் என்றார்.

எழுத்தாளர் பொன்.பார்த்திபன் பேசும்போது, “சில கதைகள்தான் கேட்கும்போது நேர்மறை எண்ணங்கள் தோன்றும். கைதி’யும் அப்படித்தான் தோன்றியது. அதேபோல், இந்த ‘லத்தி’ படத்தின் கதையைக் கேட்கும்போதும் நேர்மறை எண்ணங்கள் தோன்றியது.

கைதி’ படத்திற்கு வசனம் எழுதும்போது லோகேஷ், “கைதியாக இருந்தவன் கண்ணைப் பார்த்து பேச மாட்டான். ஒரு சில இடங்களில் மட்டும் கண்ணைப் பார்த்து பேசுவது போல் அடை குறியிட்டு காட்சி எழுதுங்கள்” என்று கூறினார். நான் நான்கு காட்சிகள் எழுதினேன். ஆனால், அவர் இரண்டு காட்சிகள மட்டுமே எடுத்தார். அவரை போலவே, இந்தப் படத்தின் இயக்குநரான வினோத்தும் ஆராய்ச்சி செய்துதான் இந்த லத்தி’ படத்தை இயக்கியிருக்கிறார்.

தாமிரபரணி’ படத்தில் இருந்தே அசோசியேட்டாக பணியாற்றியிருக்கிறேன். விஷால் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது மிகவும் பிடிக்கும். இப்படத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் அடிபடும். இருப்பினும், கடினமாக உழைத்திருக்கிறார். யுவனின் இசையும் கலந்து பார்க்கும்போது படம் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது” என்றார்.

இயக்குநர் ஆர்.வினோத் குமார் பேசும்போது, “இந்த லத்தி சார்ஜ்’ திரைப்படம் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் கடினமாக உழைத்து உருவான படம். யுவனின் இசை பார்வையாளர்களை இழுக்கும் உந்து விசையாக இருக்கும். ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியன், பாலு சாரின் சிறப்பான பணிகள் வியக்கும்படியான காட்சிகளை கொடுத்திருக்கிறது.

நாங்கள் அனைவரும் நன்றாக பணிபுரிய எங்களுக்கு உறுதுணையாக இருந்தது விஷால் சார்தான். என்ன கேட்டாலும் ரமணாவும் நந்தாவும் தயங்காமல் செய்துக் கொடுத்தார்கள். இவ்விழாவிற்கு வருகைபுரிந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் நந்தா பேசும்போது, “ஜாங்கிட் சாரை சிறப்பு விருந்தினராக அழைக்க சென்றபோது, அவர் கூறிய சில நிஜ கதைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நம் கற்பனைகளுக்கும் எட்டாத விஷயங்கள் நிஜ வாழ்க்கையில் நடக்கிறது. பல நூறு கதைகளை வைத்திருக்கிறார் ஜாங்கிட் ஸார். அத்தனையும் மறைக்கப்பட்டவை, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.

லோகேஷ் ஒரு யூனிவர்ஸ். அடுத்து அவர் என்ன செய்ய போகிறார் என்பதை அவருடைய சகோதரரிடம் கூறியதை கேட்கும்போது, பிரமிப்பாக இருந்தது.

நடிகர், நண்பன் என்பதைத் தாண்டி பார்வையாளர்கள், ரசிகர்கள் என்று விஷாலின் அவருடைய பார்வை நுணுக்கமாக இருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் என்ன வசனம் பேசப் போகிறோம் என்பது அவருக்கு நன்றாக தெரியும். இருப்பினும் சில மாற்றங்களைக் கூறுவார். அதைக் காட்சியாக பார்க்கும்போது பார்வையாளர்களின் மனதை எந்தளவிற்கு கவனித்திருக்கிறார் என்று நினைத்து ஆச்சிரியமாக இருந்தது. இப்படம் வெற்றியடைய காத்திருக்கிறோம்…” என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, “ஜாங்கிட் சாருடைய மிகப் பெரிய விசிறி நான். தீரன் படத்தில் இருந்தே அவரை மிகவும் பிடிக்கும். இன்று சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

பொதுவாக எனக்கு ஆக்ஷன் படங்கள்தான் பிடிக்கும். முதல் நான், முதல் காட்சியை பார்த்துவிடுவேன். அதேபோன்ற ஒரு ஆக்ஷன் படத்தின் டிரெயிலரை வெளியிட என்னை அழைத்ததற்கு நன்றி. இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது வினோத்திற்கு முதல் படம் போலவே தெரியவில்லை. இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்…” என்றார்.

இந்த விழாவில் நடிகர் விஷால் பேச வரும்போது, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து “புரட்சி தளபதி வாழ்க” என்றார்கள். அப்போது குறுக்கிட்ட நடிகர் விஷால், “இது வேண்டாம்.. நான் தளபதியும் அல்ல; புரட்சி தளபதியும் அல்ல. என் பெயர் விஷால் அவ்வளவுதான்..” என்று சொல்லிவிட்டு தன் பேச்சை ஆரம்பித்தார்.

“இந்த லத்தி’ திரைப்படம் நான்கு மொழிகளில் வரும் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது. முதலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது வழக்கமாக நடக்கும் விஷயம்தான்.

சால்வையும், மலர்க்கொத்தும் சிறிது நேரம் மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வீண் விரய செலவு. அந்த பணத்தில் இரண்டு குழுந்தைகளின் படிப்பு செலவிற்கு கொடுப்பது வழக்கம். இன்றும் அதைத்தான் செய்திருக்கிறேன்.

லோகேஷ் கனகராஜ் விஜயை இயக்குவதைக் கண்டு பொறாமையாக இருக்கிறது. நானும் விரைவில் விஜயிடம் கதை சொல்லி இயக்குவேன்.

இந்தப் படத்தின் இயக்குநரான வினோத் என்னிடம் கதை சொல்லி எட்டு நாட்களில் சம்மதம் வாங்கிவிட்டார். முதலில், என்னிடம் கதையைச் சொல்லும்போது “நீங்கள் 8 வயது பையனுக்கு அப்பா..” என்றார். கதையைக் கேட்டு முடித்ததும் நான் என்ன உணர்ந்தேனோ அதை பார்ப்பவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

இப்படத்தில் இரண்டு பேர் பேசப்படுவார்கள். ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இரண்டாவது பீட்டர் ஹெய்ன் மாஸ்டர். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் கேட்ட விஷயங்களை செய்து தர முடியுமா? என்று சந்தேகப்பட்ட விஷயங்களை சுலபமாக செய்து கொடுத்த கலை இயக்குர் கணேஷுக்கு முக்கியமாக நன்றி கூற வேண்டும்.

படப்பிடிப்பில் நான் வேண்டுமென்றே அடிவாங்கவில்லை. சரியாக கட்டி முடிக்காத கட்டிடத்தில் நடக்கக் கூடிய சண்டைக் காட்சிகள். 80 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அடிப்படுவதை தவிர்க்க முடியவில்லை. பீட்டர் ஹெயினின் பணியைக் கண்டு வியந்தேன்.

45 வயதில், 32 படங்களில் சண்டைக் காட்சிகளில் நடிப்பது சாதாரண விஷயம். ஆனால், ராகவ் 100 அடி உயரத்தில் கம்பியில் பிடித்து தொங்க வேண்டும். 4-வது மாடியில் இருந்து நெட்டில் இருவரும் குதித்தோம். முன்பே ராகவ்விடம் நிறைய சண்டைக் காட்சிகள் இருக்கு என்று அவனுடைய அம்மா, அப்பாவிடம் சொல்லக் கூடாது என்று சொல்லியிருந்தேன். ஆனால், நிஜமாகவே சொல்கிறேன்.. எந்தக் குழந்தையாலும் அவனை மாதிரி நடித்திருக்கவே முடியாது. அவனுக்கும், அவனுடைய பெற்றோருக்கும் நன்றி.

ஒரு தயாரிப்பாளர் இறங்கி வேலை செய்தால் அதைவிட சௌகரியான விஷயம் நடிகருக்கு அமையாது. அப்படி ஒரு தயாரிப்பாளர்களாக ரமணாவும், நந்தாவும் எனக்குக் கிடைத்தார்கள். ஒரு படத்திற்கு இந்தளவிற்குத்தான் பட்ஜெட் என்று ஒதுக்கப்படும். ஆனால், இந்த விஷயங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று செலவை அதிகப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்களே கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியொரு தயாரிப்பாளர்கள் இருந்தால், 4-வது மாடின்னு இல்லை.. 8-வது மாடியில் இருந்தும்கூட குதிக்கலாம்.

நான் சாதாரணமாகவே திருட்டு வீடியோ இருந்தால் இறங்கி கேள்வி கேட்பேன். இப்போது லத்தி வேறு கையில் இருக்கிறது. ஆகையால், அனைவரும் திரையரங்கிற்கு வந்து படத்தை பாருங்கள்…” என்றார்.

 

Our Score