விஜய் சேதுபதி புரொடக்சனும், 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘லாபம்’.
இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நாயகனாகவும், நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். கலையரசன், பிரித்வி, டேனியல் என இன்றைய இளம் நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் ஜனநாதன் அரசியலும், கமர்சியலும் சேர்ந்த படைப்பாக இதனை உருவாக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்க கட்டிடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. நாயகன் விஜய் சேதுபதி அந்தக் கட்டிடத்தை செட்டாகப் போடாமல் உண்மையான கட்டடத்தையே கட்டச் சொல்லிவிட்டாராம். அதோடு மட்டும் அல்லாமல் படப்பிடிப்பு முடிந்ததும் அந்தக் கட்டிடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்கச் சொல்லிவிட்டார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி.
படத்தின் கதை மட்டும் அல்லாமல், படப்பிடிப்பும் அங்குள்ள மக்களுக்கும் லாபமாக அமைந்ததினால் அந்தப் பகுதி மக்கள் பலரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
‘லாபம்’ படம் பற்றி இயக்குநர் ஜனநாதன் கூறுகையில், "என் படத்தின் டைட்டில் ‘லாபம்’ என்றதும் பலரும் ஆச்சர்யமாக கேட்கிறார்கள். இந்தப் படம் யாருக்கு லாபம் என்பதையும் எது லாபம் என்பதையும் பேசும்.
இன்று விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சனை சர்வதேச பிரச்சனை. அதை இந்தப் படம் விரிவாகப் பேசும்.
இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதாரமே விவசாய உற்பத்திதான். நம்மிடம் இருந்த விவசாய நிலங்களும் அதில் விளைந்த விளைச்சலும்தான் பிரிட்டிஷ்காரன் கண்களை உறுத்தியது. நமது விவசாய நிலங்களையும் அதன் மூலமாக வந்த வளங்களையும் கொள்ளையடிக்கத்தான் பிரிட்டிஷ்காரன் இங்கே 300 வருடம் டேரா போட்டான்.
விவசாயத்தில் மிகப் பெரிய வளர்ச்சி கொண்ட நம்நாடு ஏன் இப்போது நலிவைச் சந்தித்தது..? தினமும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் வருவது எதனால்.. என்பதை, என்னுடைய ஸ்டைலில் இப்படத்தில் சொல்லி இருக்கிறேன்...” என்றார்.
தற்போது இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு மிக வேகமாகவும், மிக பிரம்மாண்டமாகவும் நடைபெற்று வருகிறது.