வார்வின் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஐ.ராஜா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’.
இப்படத்தில் நடிகர் பிரஜின், அறிமுக நாயகி ரியாமிகா, இயக்குநர் கே.பாக்யராஜ், இமான் அண்ணாச்சி மற்றும் ஷகிலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட படங்களில் முன்னணி இயக்குநர் சீனுராமசாமியிடம் துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார்.
இத்திரைப்படம் இன்றைய காலகட்டத்தில், மனித வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்து கொண்டிருக்கும் மதுவுக்கு அடிமையான ஒருவர், தன்னை உணர்ந்து, அதிலிருந்து விடுபட்டு, முன்னெடுக்கும் புரட்சிகரமான நடவடிக்கைகளை தத்ரூபமாக இத்திரைப்படம் படம் பிடித்துக் காட்டுகிறது.
தனி மனித வாழ்வின் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு முக்கியமான திரைப்படமாக இது அமையும்.
தமிழ்த் திரை இசையுலகத்தின் மூத்த பாடகரான உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகனான ‘சாதக பறவைகள்’ சங்கர் இந்தக் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
‘சாதக பறவைகள்’ இசைக் குழுவின் அமைப்பாளரான சங்கர், உலகெங்கிலும் சுமார் 8000-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்திய பெருமைக்குரியவர். இசைக் கச்சேரிகளை இன்றும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
தீவிர இசை ரசிகரான சங்கர், பல்வேறு இசை வடிவங்களில் முறையாகத் தேர்ச்சி பெற்றவர். அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல புதுமைகளை புகுத்தியிருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் ‘தீரத் தீர்’ எனும் முதல் பாடல் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் ‘அக்கப்பல்லா’ என்றழைக்கப்படும் பாரம்பரிய முறையில், மிகக் குறைவான இசைக் கருவிகளின் துணையுடன், வாய் மொழியாகவே ஒரு முழுப் பாடலையும் வடிவமைத்திருக்கிறார் சங்கர். இந்தப் பாடலை கவிஞர் வைர பாரதி எழுதியிருக்கிறார்.
தற்போது இந்தக் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.












