full screen background image

இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கும்கி-2’ திரைப்படம்..!

இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கும்கி-2’ திரைப்படம்..!

2012- ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு – லஷ்மி மேனன் புதுமுகங்களாக அறிமுகமான ‘கும்கி’ படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

இந்தப் படத்தின் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. மற்றும் வில்லனாக ஹரிஷ் பெராடி, ஆர்.ஜே.பாலாஜி, சூசன், ‘கோலங்கள்’ திருச்செல்வம்,  ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள். டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னி கிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது.

ஒளிப்பதிவு – சுகுமார், இசை – நிவாஸ் K.பிரசன்னா, படத் தொகுப்பு – புவன், கலை இயக்கம்  தென்னரசு, சண்டை பயிற்சி – ஸ்டன் சிவா, தயாரிப்பு மேற்பார்வை  – பிரபாகரன், தயாரிப்பு நிறுவனம் – பென் இந்தியா லிமிடெட், தயாரிப்பாளர் – ஜெயந்திலால் காடா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரபு சாலமன்.

படம் பற்றி இயக்குநர் பிரபு சாலமன் பேசும்போது, “இப்போது ‘கும்கி-2’ பிரமாண்டமான ஒரு படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிறவரை நடக்கும் வாழ்வியல்தான் இந்த ‘கும்கி-2’ திரைப்படம்.

நிறைய படங்களில் முதல் பாகத்தின் கதை தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ‘கும்கி’ படத்திற்கும்,  ‘கும்கி-2’ படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதற்கும் ‘கும்கி’ என்ற தலைப்பை தொட வேண்டியிருந்தது.

குட்டி யானைக்காக இந்தியா,  ஸ்ரீலங்கா,  பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்தோம்.  யானை கிடைத்தால் பர்மிஷன் கிடைக்கல. பர்மிஷன் கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக இந்த ‘கும்கி-2’ இருக்கும்.

வழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும் நிவாஸ் K. பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கும்…” என்றார் பிரபு சாலமன்.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Our Score