full screen background image

மிடில் பெஞ்ச் மாணவர்களைப் பற்றிப் பேசும் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படம்

மிடில் பெஞ்ச் மாணவர்களைப் பற்றிப் பேசும் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படம்

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘கூட்டத்தில் ஒருத்தன்.’

இத்திரைப்படம் வரும் ஜூலை 28-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு , நாயகன் அசோக் செல்வன், நாயகி ப்ரியா ஆனந்த், இயக்குநரும், பத்திரிகையாளருமான த.செ.ஞானவேல், படத் தொகுப்பாளர் லியோ ஜான் பால், ஒளிப்பதிவாளர் பிரமோத், கலை இயக்குநர் கதிர், சஞ்சய் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா பேசும்போது, “இந்தக் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படமாகும்.

niwas k.prasanna

இயக்குநர் கதை சொல்ல என்னை அணுகியபோது நான் அவரிடம் ‘ஸ்கிரிப்டை நான் படிக்க வேண்டும்’ என்று கேட்டேன். 2 படங்களுக்கு இசையமைத்த நான் ஸ்கிரிப்ட் புக் கேட்பதை கண்டு ஆச்சரியப்பட்டார் இயக்குநர் ஞானவேல். எனக்கு ஸ்கிரிப்டை வழங்கியதும் அதை இரண்டு முறை படித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நானும் பள்ளியில் படிக்கும் போது மிடில் பெஞ்சர்தான். அதனால் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் கதை என் மனதுக்கு நெருக்கமான கதையாக அமைந்தது. கூட்டத்தில் ஒருத்தனில் ‘ஏன்டா இப்படி’ பாடல் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார் பாடியுள்ளார். இந்தப் பாடலை ஒரு வித்தியாசமான முயற்சியாக செய்தோம். படத்தில் ஹீரோவை பற்றி விவரிக்கும் பாடலாக இது இருக்கும்.

இதேபோல் ‘கிப்ட் சாங்’ என்ற பாடலும் வெளிவந்து இணையத்தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு மிகப் பெரிய சாதனை புரிந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. அந்த பாடலில் சூர்யா, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி போன்ற பலர் கேமியோ ரோல்களில் நடித்துள்ளனர்.

அசோக் செல்வனுடன் மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சி. இயக்குநர் த.செ.ஞானவேல் இப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கியுள்ளார். அடுத்ததாக ‘கும்கி-2’, ‘சேதுபதி’ குழுவுடன் ஒரு படம் என்று பயணித்து வருகிறேன்.

லைவ் கான்செர்ட் பலவற்றில் நான் பணியாற்றியுள்ளேன். அப்படி லைவில் பணியாற்றும்போது ரசிகர்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதை நாம் நேரில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். அந்த அனுபவம் இன்று கை கொடுக்கிறது.. ரசிகர்கள் நாம் எப்படி இசையமைத்தால் ரசிப்பார்கள் என்று தெரிந்து கொள்ள முடிகிறது…” என்றார் இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா.

priya anandh

விழாவில் நடிகை ப்ரியா ஆனந்த் பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை கேட்கும் முன், இனிமேல் நடிக்கவே கூடாது என்கிற மனநிலையில் இருந்தேன். 

ஆனால் இந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் கதையை கேட்டதும் மீண்டும் நடிக்க வர வேண்டும்  என்ற ஆர்வம் வந்தது. அவ்வளவு பாஸிட்டிவ்வான கதை இது.

மிக சிறந்த படங்களை தயாரிக்கும் எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியார் நிறுவனத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். நிவாஸ் கே.பிரசன்னாதான் படத்துக்கு இசை என்றதும் எனக்கு நல்ல காதல் பாடல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். தற்போது நான் எதிர்பார்த்ததைவிட மிக சிறந்த பாடல்கள் கிடைத்துள்ளது…” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “எங்களுடைய ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படம் இதுவரை யாரும் பேசாத பள்ளி வகுப்புகளில் இருக்கும் மிடில் பெஞ்சர்ஸ் வர்க்கத்தை பற்றி பேசும் படம். இந்தப் படத்தின் கதை கேட்டதுமே நிச்சயமாக இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம்.

s.r.prabhu

பல பிரச்சனைகளை தாண்டி, தடைகளை தாண்டி இந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படம் வருகிற ஜூலை 28-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது தயாரிப்பாளர்கள்தான் படத்தை வெளியிட சண்டை போடுகிறார்கள். மக்கள் யாரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்க தயாராக இல்லை. மக்களுக்காகத்தான் சினிமா.. சினிமாவுக்காக மக்கள் அல்ல என்பதை நாமும் புரிந்து கொள்ள வேண்டும்..” என்று மிக யதார்த்தமாக பேசினார்.  

நடிகர் அசோக் செல்வன் பேசும்போது, “இந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். நான் இந்த படத்தில் நடிக்க முக்கிய காரணம், இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாதான்.

ashok selvan

என்னுடைய அக்காவின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க நிவாஸ் கே. பிரசன்னா வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவரிடம் என்னென்ன படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறீர்கள்..? என்று கேட்டேன் அப்போது இந்தப் படத்தைப் பற்றியும் இந்தப் படத்தின் கதையை பற்றியும் என்னிடம் கூறினார்.

‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் கதை சுருக்கத்தை கேட்டவுடன் எனக்கு பிடித்துவிட்டது. என்னென்றால், நானும் இப்படத்தின் கதையில் வருவதுபோல் ‘மிடில் பெஞ்சர்’தான். ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதைக்கு கதாநாயகன் முடிவாகவில்லை என்பதை தெரிந்து கொண்டு நான் இயக்குநர் ஞானவேல் அவர்களை சந்திக்க அவருடைய அலுவலகத்துக்கு சென்றேன்.

அவரை சந்தித்து ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதையை படித்தேன். கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நானும் ஒரு மிடில் பெஞ்சர்தான். என்னோடு ஒத்துபோகும் கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கும் என்று சொல்லி வாய்ப்பு கேட்டேன்.

இயக்குநர் ஞானவேல் நான் இந்த கதையில் நடிப்பதற்கு சம்மதித்த பிறகு, இந்த கதைக்காக நான் வேற மாதிரி மாற வேண்டும் என்று கூறி என்னை முற்றிலும் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு மாற்றினார்.  கூட்டத்தில் ஒருத்தன் முதல் பார்வை போஸ்டரை பார்த்தும் அதில் இருப்பது நான்தான் என்று என் தந்தையால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

அதே போல் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படபிடிப்பு ஒரு கல்லூரியில் நடைபெற்றது. கேரவனில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் கல்லூரிக்குள் நான் நுழைய முயன்ற போது வாட்ச்மேன் என்னை உள்ளே விடவில்லை. அவர் என்னிடம், ‘உள்ளே ஷூட்டிங் நடக்கிறது அங்கே செல்லக் கூடாது’ என்று கூறினார். அதன் பின் படக் குழுவினர் வந்து ‘இவர்தான் படத்தின் ஹீரோ’ என்று சொல்லி என்னை உள்ளே அழைத்துச் சென்றனர்.

இதையே நான் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்துக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். இப்போது நிலவி வரும் குழப்பமான சூழ்நிலையில் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படம் மிகவும் பாசிட்டிவ்வான திரைப்படமாக இருக்கும். எல்லோருக்குள்ளும் ஒரு நல்என்னத்தை விதைக்கும் திரைப்படமாக இது இருக்கும்.

‘தெகிடி’யை போலவே இந்த படத்துக்கும் நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை மிகப் பெரிய பலம். என்னுடைய வெற்றியில் நிவாஸூக்கு தனி இடம் உள்ளது. இதை நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லுவேன்.

எப்போதும் மிகச் சிறந்த படங்களையே தயாரிக்கும் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அவர்களோடு பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சி.

ப்ரியா ஆனந்துக்கு இந்த படத்தில் முதல் பெஞ்ச் மாணவி வேடம். அந்த வேடத்துக்கு அவர் சரியாக பொருந்தியுள்ளார். அவர் எப்போதும் செட்டில் கலகலப்பாக இருப்பார். அவரோடு இணைந்து பணியாற்றியது எனக்கொரு நல்ல அனுபவம்…” என்றார் அசோக் செல்வன்.

Our Score