full screen background image

இயக்குநர் கே.ரங்கராஜ் இயக்கியிருக்கும் ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ திரைப்படம்

இயக்குநர் கே.ரங்கராஜ் இயக்கியிருக்கும் ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ திரைப்படம்

ஸ்ரீகணபதி பிலிம்ஸ் சார்பில்  MY INDIA மாணிக்கம் தயாரிப்பில், பிரபல இயக்குநர் K. ரங்கராஜ் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடிப்பில் ஒரு அழகான காதல் படமாக உருவாகியுள்ள படம் “கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்”  வரும் மார்ச் 14-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. 

இந்தப் படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக புஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேல் நடித்துள்ளார்.

மற்றும் பார்கவ், நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மை இண்டியா மாணிக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வசனம் – P.N.C.கிருஷ்ணா, ஒளிப்பதிவு  – தாமோதரன்.T., இசை – R.K.சுந்தர், எடிட்டிங்  – கே.கே., பாடல்கள் – காதல்மதி, கலை – விஜய் ஆனந்த், நடனம் – சந்துரு, ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ், ஸ்டில்ஸ் – தேனி சீனு, மக்கள் தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – MY INDIA மாணிக்கம், கதை, திரைக்கதை, இயக்கம் – K.ரங்கராஜ்.

உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதய கீதம்’, ‘உயிரே உனக்காக’, ‘நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற சில்வர் ஜூப்ளீ திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குநரான K.ரங்கராஜ், இந்தப் படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதாணமல்ல என்பதை உணர்த்தும் வகையில் வித்தியாசமாக இருவேறு கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின்  இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது.  இந்நிகழ்வில் திரை பிரபலங்களுடன், படக் குழுவினரும் கலந்து கொண்டு, படம் பற்றிய தங்கள் கருத்துக்களை, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “35 வருடங்களுக்கு முன் நான் உதவி இயக்குநர். அப்போதே .ரங்கராஜ் சாரிடம் வேலை செய்ய வேண்டும் என ஆசைய ராம்தாஸ் சார் உதவியுடன் அவர் படத்தில் வேலை செய்தேன். என்னை கண்டிப்பானவர் என சொல்வார்கள் ஆனால் அவர் படுபயங்கர கண்டிப்பானவர்ய அவரிடம்தான் நான் நிறையக் கற்றுக் கொண்டேன். பல அற்புதமான படங்களை உருவாக்கியவர். அவர் மீண்டும் படம் இயக்குவது மிகுந்த மகிழ்ச்சி.

ஸ்ரீகாந்த் இன்னும் க்யூட்டாக இருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் ஜெயிக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்…” என்றார். 

நடிகை சச்சு பேசும்போது, “இங்கு எல்லோரும் எனக்கு ஜூனியர்கள். 70 வருட சீனியர் நான். சினிமாதான் என் குடும்பம். ரங்கராஜ் சாரின் நெஞ்சமெல்லாம் நீயே’ படத்தை மறக்க முடியாது. என்னை இந்த படத்திற்கு ஞாபகம் வைத்து அழைத்தது மகிழ்ச்சி.

ஃபாரின் எல்லாம் போகாமல், இந்தப் படத்தை மிக அட்டகாசமாக எடுத்துள்ளார். இந்த மாதிரி படங்களை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். நிறைய வித்தியாசமான படங்கள் வர வேண்டும். நான் ஹீரோயின் பூஜிதாவுக்குப் பாட்டியாக நடித்துள்ளேன். படம் அழகாக வந்துள்ளது. இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும். நன்றி…” என்றார். 

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இயக்குநர் ரங்கராஜ் சார் மிக அற்புதமான இயக்குநர். பல அருமையான படங்களை தந்தவர். மிக அழகான தமிழில் டைட்டில் வைத்து படமெடுக்கக் கூடியவர். அவரது இந்தப் படம் ஜெயிக்க வேண்டும்.

இப்ப வரும் நிறைய படத்தில் பாவடையை பிச்சு, பிச்சு, பலரை ஆட வைக்கிறார்கள். விரசம் வேண்டாம். இப்போது இரண்டு படங்கள் வெளியாகி ஒரு படம் நன்றாக போகிறது. இன்னொரு படம் மிக நன்றாக போகிறது.

ஒரு படத்தில் நாயகனும் நாயகியும் ஓட்டலில் சந்திக்கிறார்கள். நாயகி பிராந்தி ஊற்றித் தருகிறார். இப்படி தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கும் விதமாக படத்தை எடுத்துள்ளார். நிலவுக்கு என் மேல் என்னடி  கோபம். மக்களுக்குத்தான் உங்கள் மேல் கோபம். எப்படி இப்படியெல்லாம் படம் எடுக்கலாம். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கலாச்சாரத்தை நல்லபடியாக காட்டும் இந்த படம் வெற்றி பெறட்டும் அனைவருக்கும்  நன்றி. “ என்றார்.

இசையமைப்பாளர் சத்யா பேசும்போது, “இந்த இசை விழாவிற்கு வந்த காரணம் என் நண்பர் ஆர்.கே.சுந்தருக்காகத்தான். அவரும், நானும் மிக நல்ல நண்பர்கள். அவர் இயக்குநர் K.ரங்கராஜ் உடன் இணைந்தது மகிழ்ச்சி. என் சின்ன வயதில்,  உதய கீதம் படத்தை தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ஒரு வருடம் ஓடிய படம். அதேபோல இந்தப் படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும். ஒளிப்பதிவாளரும் என் நண்பர். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.” என்றார். 

இசையமைப்பாளர் ஆர் கே சுந்தர் பேசும்போது, “இயக்குநர் K.ரங்கராஜ் உடன் இந்தப்படத்தில்  இணைந்தது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் தாமோதரன்தான் இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். இளையராஜா சார் உடன், K.ரங்கராஜ்  சார் இணைந்த அத்தனை படங்களும் ஹிட். எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இப்படத்தில் என்னுடன் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி. ரங்கராஜ்  சார் வெட்டு குத்து இரத்தம் இல்லாமல் அவர் பாணியில் மிக அழகான படத்தை தந்துள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி.” என்றார். 

கதாநாயகி பூஜிதா பொன்னாடா பேசும்போது, “இது என் முதல் தமிழ் மேடை. பல திரை பிரபலங்களுடன் இருப்பது மிக மகிழ்ச்சி. இந்தப் படம் மிக மிக அற்புதமாக வந்துள்ளது, அனைவரும் சிரித்து மகிழும்படியான காமெடி எண்டர்டெயினர் படம். ரங்கராஜ் சார் மிக  கண்டிப்பாக இருப்பார், ஆனால், அழகாக படத்தை எடுத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.” என்றார். 

நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, “திரையுலகில் 25 வருடங்களை நிறைவு செய்துள்ளேன். நீங்கள் எப்போதும் ஆதரவு தந்துள்ளீர்கள். அனைவருக்கும் நன்றி.  மேடையில் இருந்த சத்யா சாரின் பூ படம் செய்துள்ளேன். இளையராஜா இசையிலும் நடித்துள்ளேன், இப்போது ரங்கராஜ் சாரிடமும் வேலை செய்துவிட்டேன். அனைவரிடமும் வேலை செய்தது மகிழ்ச்சி.

ஷீட்டிங்கில் மிக மிக கண்டிப்புடன் இருப்பார். அவர் படைப்பில் நான் இருந்தது மகிழ்ச்சி. சினிமா தவிர எனக்கு எதுவும் தெரியாது. கடைசிவரை சினிமாவில் இருக்கத்தான் ஆசைப் படுகிறேன், படத்தில் தம்மு, தண்ணி, ஆடை பற்றி எல்லாம் நாம் பேசக் கூடாது. அது அவரவர் விருப்பம். எது பிடிக்கும்.. எது பிடிக்காது.. என மக்கள் முடிவு செய்யட்டும்.

எனக்குப் பிடித்த படம் சதுரங்கம். அந்தப் படத்தை எப்படியோ கொன்றுவிட்டார்கள். ஆனால் 12 வருடம்  கழித்து ஒரு படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெறுகிறது. இதுதான் சினிமா. 

ஒவ்வொரு பக்கமும் இருந்து சினிமாவை அழிக்கிறார்கள். எல்லோரும் இணைந்து முதலில் சினிமாவை காப்பாற்ற வேண்டும்.  சினிமாதான் என் குடும்பம், இன்னும் நான் சினிமாவில் இருக்கிறதை பெருமையாக நினைக்கிறேன். ரங்கராஜ் சார் படத்தில் இருப்பது பெருமை. நீங்கள் தந்து வரும் அன்புக்கு நன்றி..” என்றார். 

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “ஸ்ரீகாந்த் பேசி இப்போதுதான் கேட்கிறேன், அதிரடியாக கலக்குகிறார். இதேபோல் சினிமாவில் இருந்தால் அவர்தான் சூப்பர் ஸ்டார். இந்த விழாவிற்கு வந்த காரணம் ரங்கரஜான் சார்தான். 35 வருட பழக்கம். அவர் கண்டிப்பானவர் என்கிறார்கள், ஆனால் என்னிடம் எப்போதும் சிரித்து பேசுவார். மிக அமைதியான மனிதர்.

பாடல்கள் பார்த்தேன். கலர்புல்லாக மிக அழகாக எடுத்துள்ளார்.  கட்டுமானத்தை சரியாக செய்யாமல் சினிமா நல்லா இல்லை என சொல்லி வருகிறார்கள், பணம் போடுபவரை மதிக்க வேண்டும், அவரிடம் கண்ட்ரோல் இருக்க வேண்டும், ரங்கராஜ் சாரின்  திட்டமிடல் மிகச்சரியாக இருக்கும், எடுக்க வேண்டியதை மிகக் கச்சிதமாக எடுத்து விடுவார். ரங்கராஜ் சார் போன்ற ஆளுமைக்கு ஆதரவு தர வேண்டியது நம் கடமை. எல்லோருக்கும் வாழ்க்கை தரும் படமாக இப்படம் இருக்கும். 

தமிழ் நாட்டில் தமிழர்களுக்காக படம் பண்ண முடியாமல், பான் இந்தியா படம் செய்தால் எப்படி சரியாகும்?  பான் இந்தியா என சொல்லி, இந்தி, தெலுங்கு ஆட்களைச் சேர்த்து அதை இங்கு திணித்து, படமாக தந்தால் படம் வெற்றி பெற்று விடுமா? எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது. நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படம் எடுங்கள். ஒடிடிக்காக படம் எடுக்காதீர்கள், அதில் நமக்கு லாபம் இல்லை, இப்போது  தமிழ் சினிமா நல்ல வளர்ச்சியை நோக்கிப் போகிறது. இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி..” என்றார். 

இயக்குநர்  K.ரங்கராஜ் பேசும்போது, “எங்களை இன்று வாழ்த்த வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.கே.செல்வமணி உட்பட அனைவருக்கும் நன்றி. ஸ்ரீகாந்த்  முதல் சிங்கம்புலி, ரமேஷ் கண்ணா, சச்சு, சாம்ஸ் புஜிதா என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து இந்தப்படத்தை உருவாக்க உதவினார்கள். நான் பத்திரிக்கையாளானாக இருந்து திரைக்கு வந்தவன் உங்களின் அன்பான ஆதரவை இந்தப் படத்திற்கு தர வேண்டும். நன்றி..” என்றார்.

 

Our Score